ETV Bharat / state

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஐஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்!

author img

By

Published : May 17, 2023, 11:51 AM IST

மயிலாடுதுறை மாவட்டத்தில் கள்ளச்சாராய விவகாரம் மற்றும் பிரபல ரவுடி வீட்டில் நாட்டு வெடிகுண்டு வெடித்த சம்பவம் தொடர்பாக திருச்சி மண்டல ஐஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது.

கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஐஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்
கள்ளச்சாராய விவகாரம் தொடர்பாக ஐஜி தலைமையில் ஆலோசனைக் கூட்டம்

மயிலாடுதுறை: விழுப்புரம் மாவட்டத்தில் கள்ளச்சாராயம் குடித்ததில் இதுவரை 22 நபர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 40க்கும் மேற்பட்டோர் பல்வேறு மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதனிடையே, கள்ளச்சாராயத்தால் உயிரிழப்பு ஏற்பட்டதைத் தொடர்ந்து தமிழ்நாடு முழுவதும் டிஜிபி சைலேந்திரபாபு உத்தரவின் பேரில், சட்டத்திற்கு புறம்பாக மது பாட்டில்கள், சாராயம் விற்பவர்களை காவல் துறையினர் கைது செய்து வருகின்றனர்.

அந்த வகையில் மயிலாடுதுறை மாவட்டத்தில் மயிலாடுதுறை, சீர்காழி, தரங்கம்பாடி மற்றும் குத்தாலம் ஆகிய தாலுகா பகுதிகளில் உள்ள 14 காவல் நிலைய சரகங்களில் கள்ளச்சாராயம் மற்றும் சட்டத்திற்கு புறம்பாக மதுபானம் கடத்தி விற்பனையில் ஈடுபட்டு வந்த 68 பேர் இதுவரை கைது செய்யப்பட்டு, அவர்களிடம் இருந்து 5 ஆயிரத்து 470 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.

இந்த ஆண்டில் தற்போது வரை, மாவட்டத்தில் தொடர் சாராய விற்பனையில் ஈடுபட்டு வந்த 10 பேர் குண்டர் தடுப்புச் சட்டத்தில் கைது செய்யப்பட்டு, திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த நிலையில் திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன் தலைமையில், மயிலாடுதுறை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் தஞ்சை சரக டிஐஜி ஜெயச்சந்திரன் மற்றும் மயிலாடுதுறை காவல் கண்காணிப்பாளர் நிஷா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் உடன் ஆலோசனைக் கூட்டம் நேற்று (மே 16) நடைபெற்றது.

புதுச்சேரி மாநிலத்திற்கு அருகே உள்ள மாவட்டம் என்பதால், புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டத்தில் இருந்து மயிலாடுதுறை மாவட்டத்திற்கு சாராயம் கடத்தி வருவதைத் தடுக்க உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும், மயிலாடுதுறை மற்றும் புதுச்சேரி மாநிலத்தை இணைக்கும் எல்லை சோதனைச் சாவடிகளில் காவல் துறையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட வேண்டும், கள்ளச்சாராயம் விற்பனை செய்பவர்களை உடனடியாக கைது செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு ஐஜி உத்தரவிட்டார்.

இதனைத் தொடர்ந்து, மயிலாடுதுறை அருகே பண்டாரவடை கிராமத்தில் கடந்த 13ஆம் தேதி பிரபல ரவுடி கலைவாணன் தனது வீட்டிலேயே வெடிகுண்டு தயாரிக்கும்போது, அந்த வெடிகுண்டு வெடித்ததில் இரண்டு கைகளில் பத்து விரல்களும் சிதறி படுகாயம் அடைந்தார்.

அவரது வீட்டில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் மற்றும் நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப் பயன்படும் மூலப் பொருள்களை காவல் துறையினர் கைப்பற்றி விசாரனை மேற்கொண்டு வருகின்றனர். மேலும், யாரை கொலை செய்ய நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்றும், குடிசைத் தொழில் போன்று எப்படி நாட்டு வெடிகுண்டு தயாரிக்கப்பட்டது என்பது குறித்தும் பல்வேறு கோணங்களில் ஆலோசனை மேற்கொள்ளப்பட்டது.

இந்த வழக்கு தொடர்பாக காவல் ஆய்வாளர் செல்வம் தலைமையில் சிறப்பு தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை மேற்கொள்ளப்படும் என்பது தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டது. முன்னதாக திருச்சி மண்டல ஐஜி கார்த்திகேயன், மயிலாடுதுறை மாவட்டத்தில் உள்ள நண்டலாறு, குமாரமங்கலம் மற்றும் நல்லடை உள்ளிட்ட அனைத்து எல்லை சோதனைச் சாவடியில் பாதுகாப்பு குறித்தும், சிசிடிவி பதிவுகள் குறித்தும் ஆய்வு மேற்கொண்டார்.

இதையும் படிங்க: விஷ சாராய விவகாரத்தில் முக்கியக் குற்றவாளி கைது... அடுத்தடுத்து வெளிவரும் திருப்பங்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.