ETV Bharat / state

கடல் அரிப்பால் சேதமடைந்த டேனிஷ் கோட்டை பகுதியில் ஆட்சியர் ஆய்வு

author img

By

Published : Dec 26, 2020, 3:07 AM IST

மயிலாடுதுறை: தரங்கம்பாடியில் கடல் சீற்றம் காரணமாக ஏற்பட்ட கடல் அரிப்பால் சேதமடைந்த டேனிஷ் கோட்டை பாதுகாப்பு தடுப்புச் சுவர் பகுதிகளை நாகப்பட்டினம் ஆட்சியர் பிரவின் நாயர் ஆய்வு செய்தார்.

collector-inspect
collector-inspect

மயிலாடுதுறை மாவட்டம் தரங்கம்பாடியில் கி.பி.1620ஆம் ஆண்டு டேனிஷ் நேவி கேப்டன் ரோலண்ட் கிராப் என்பவரால், தரங்கம்பாடி கடற்கரையில் உலக புகழ்பெற்ற டேனிஷ் கோட்டை கட்டப்பட்டது. இந்தியா சுதந்திரம் அடைந்த பிறகு, 1978ஆம் ஆண்டு முதல் தமிழ்நாடு தொல்பொருள் ஆய்வு துறையின் கட்டுப்பாட்டின் கீழ் டேனிஷ் கோட்டை கொண்டுவரப்பட்டது.

2002ஆம் ஆண்டு டென்மார்க் அரசு ஒத்துழைப்புடன் அந்நாட்டில் உள்ள தரங்கம்பாடி நல சங்கம், தமிழ்நாடு அரசின் தொல்லியல் துறையுடன் இணைந்து டேனிஷ் கோட்டை புதுப்பிக்கப்பட்டது. 2011ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசால் பழமை மாறாமல் 2ஆவது முறையாக புதுப்பிக்கப்பட்டது. கோட்டை உள்ளே அருங்காட்சியகமும் உள்ளது. டேனிஷ் காலத்தில் கோட்டைக்குள் கடல் நீர் புகாத வண்ணம் செங்கல், சுண்ணாம்பால் தடுப்புச் சுவர் அமைக்கப்பட்டது. தற்போது, அந்த சுவர் கடல் அரிப்பால் அடித்துச் செல்லப்பட்டது.

இந்நிலையில், நிவர் புயல் காரணமாக கடல் அரிப்பு அதிகமாகி கோட்டையின் பிரதான சுவரை சுற்றி அமைக்கப்பட்ட முள்வேலி தடுப்புச் சுவர் கடல் அரிப்பால் இடிந்து சேதமடைந்தது. கோட்டையின் பிரதான மதில் சுவரை கடல் அலை நெருங்கியுள்ளது. உடனடியாக, கோட்டையை பாதுகாக்க கருங்கற்களால் ஆன அலை தடுப்புச் சுவர் அமைத்து கோட்டையை பாதுகாக்க தமிழ்நாடு அரசுக்கு பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதனிடையே, தரங்கம்பாடி டேனிஷ் கோட்டைக்கு வந்த நாகப்பட்டினம் ஆட்சியர் பிரவின் நாயர், கடல் அரிப்பால் சேதமடைந்த பகுதிகளை பார்வையிட்டார். அப்போது, கோட்டையை கடல் நீர் நெருங்காத வண்ணம் கருங்கற்களால் ஆன தடுப்புச் சுவர் அமைக்கவும், பிரதான சுவரை சுற்றி பாதுகாப்பு சுவர் அமைக்கவும் மதிப்பீடு செய்ய பொதுப்பணித்துறைக்கு உத்தரவிட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.