ETV Bharat / state

சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் நடைபாதை விரிவாக்கத்திற்குத் தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு..!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 30, 2023, 10:59 PM IST

Madras High Court Madurai Bench: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் பகுதியில் சாம்பல் நிற அணில்களைப் பாதுகாக்கும் விதமாக நடைபாதை விரிவாக்கத்திற்குத் தடை விதிக்க கோரிய வழக்கில் முன் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தது.

sundaramahalingam-hill-temple-seeking-order-to-ban-expansion-of-footpath-to-protect-gray-squirrels
சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோயில் நடைபாதை விரிவாக்கத்திற்குத் தடை கோரிய வழக்கு முடித்து வைப்பு..!

மதுரை: சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் பகுதியில் சாம்பல் நிற அணில்களைப் பாதுகாக்கும் விதமாக நடைபாதை விரிவாக்கத்திற்குத் தடை விதிக்க உத்தரவிடக் கோரி வழக்கில் புலிகள் காப்பகம் அமைந்துள்ளதால் எந்த பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தாலும் சம்பந்தப்பட்ட துறையில் முறையான முன் அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ள வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

விருதுநகரைச் சேர்ந்த சுரேஷ்குமார், உயர் நீதிமன்ற மதுரை கிளையில் மனுவினை தாக்கல் செய்து இருந்தார். அதில், "சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயிலுக்குச் செல்லும் பக்தர்களின் வசதிக்காக தாணிப்பாறை முதல் கோயில் வரையிலான நடைபாதையை விரிவுபடுத்த ஒப்பந்தப்புள்ளி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்தப் பகுதி சாம்பல் நிற அணில்களின் சரணாலயம் அமைந்து உள்ளது.

நடைபாதை விரிவாக்கத்தால் வன விலங்குகளுக்குப் பாதிப்பு ஏற்படும். மேலும், மலைப்பகுதியில் அனுமதி பெறாத 30 கட்டிடங்கள் உள்ளதாகத் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் (RTI) தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனவே இதுகுறித்து வல்லுநர் குழுவை அமைத்து ஆய்வு செய்ய வேண்டும். இது குறித்துச் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு மனு அளித்து எந்த வித நடவடிக்கையும் மேற் கொள்ளப்படவில்லை.

இதையும் படிங்க: ஓய்ந்தது 5 மாநில சட்டப்பேரவை தேர்தல்.. ஆட்சியை இழக்கப் போவது யார்? கைப்பற்றப்போவது யார்? - தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள்!

எனவே, சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் பகுதியில் சாம்பல் நிற அணில்களைப் பாதுகாக்கும் விதமாக நடைபாதை விரிவாக்கத்திற்குத் தடை விதிக்கவும், அனுமதி பெறாமல் கட்டப்பட்டுள்ள கட்டிடங்கள் குறித்து ஆய்வு செய்ய உத்தரவிட வேண்டும்." என மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனு தலைமை நீதிபதி கங்கா பூர்வாலா, மற்றும் நீதிபதி ராமகிருஷ்ணன் ஆகியோர் அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது, அரசுத் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர், "ஒன்றே முக்கால் கி.மீ தூரத்திற்குச் சாலை அமைத்த நிலையில் ஒப்பந்ததாரர் இறந்து விட்டார். இதனால், அடுத்த கட்ட பணிகள் நிறுத்தப்பட்டன. இந்தப் பகுதி திருவில்லிப்புத்தூர்- மேகமலை புலிகள் சரணாலய பகுதியாக அறிவிக்கப்பட்டது. இதனால் தற்போது, நடைபாதை அமைக்கும் பணி நிலுவையில் தான் உள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டது.

இதனையடுத்து நீதிபதிகள், சதுரகிரி சுந்தர மகாலிங்கம் மலைக்கோயில் பகுதியில் ஏதேனும் பணிகள் மேற்கொள்ள வேண்டியிருந்தால் சம்பந்தப்பட்ட துறையில் முறையான அனுமதி பெற்று பணிகளை மேற்கொள்ளலாம் எனக் கூறிய மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.

இதையும் படிங்க: சென்னையில் நான்கு ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.