ETV Bharat / state

ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் தோல்வி குறித்து மத்திய அரசிடம் தகவல் இல்லை - சு வெங்கடேசன் எம்பி

author img

By

Published : Dec 9, 2022, 6:27 PM IST

'ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்துள்ளன என்பது பற்றிய தகவல்களே மத்திய அரசிடம் இல்லை என்று அமைச்சர் கூறுவது அதிர்ச்சி தருவதாக சு வெங்கடேசன் எம்பி தெரிவித்துள்ளார்.

Etv Bharat
Etv Bharat

மதுரை: ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் குறித்து மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு வெங்கடேசன் நாடாளுமன்றத்தில் எழுப்பிய கேள்வி குறித்து இன்று செய்தி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் அவர், “நாடாளுமன்றத்தில் நான் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைவது பற்றிய கேள்வி ( நட்சத்திர கேள்வி 31/ 08.12.2022) ஒன்றை எழுப்பி இருந்தேன்.

கேள்வி: புதிய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் 90விழுக்காட்டிலிருந்து 95 விழுக்காடு வரை தோல்வி அடைவதாக வந்துள்ள செய்திகள் அரசின் கவனத்திற்கு வந்துள்ளனவா? அப்படியெனில் தோல்வி விழுக்காடு குறு சிறு தொழில்களில் எவ்வளவு? அரசின் கணக்குகளில் மேற்கூறிய ஊடக ஆய்வுகளுடன் ஒத்துப் போகிறதா? இல்லையெனில் அரசின் கணக்குப்படி தோல்வி விழுக்காடு எவ்வளவு? என்று கேள்விகளை எழுப்பி இருந்தேன்.

மத்திய அமைச்சர் நாராயண் ரானே பதில்: 1961 நடவடிக்கை ஒதுக்கீடு விதிகளின்படி ஸ்டார்ட் அப் நிறுவனங்கள், தொழில் மற்றும் வணிக அமைச்சகத்தின் தொழில் மற்றும் உள்வர்த்தக வளர்ச்சித் துறையின் (DPIIT) கீழ் வருகிறது. அத்துறை தந்த தகவல்களின்படி இந்திய அரசு ஸ்டார்ட் அப் முன்முயற்சி குறித்து விரிவான அணுகுமுறையை வகுத்துள்ளது. இதனால் தேசத்தின் ஸ்டார்ட் அப் சூழல் முறைமை முதிர்ச்சி அடைந்து உலகின் மூன்றாவது பெரும் ஸ்டார்ட் அப் சூழல் முறைமையாக வளர்ந்துள்ளது.

640 மாவட்டங்களில் 84ஆயிரம் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் அரசால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன. அவற்றில் 45 விழுக்காடு நிறுவனங்கள் இரண்டாம், மூன்றாம் தட்டு நகரங்களில் உள்ளன. அங்கீகரிக்கப்பட்ட ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் 8.4 லட்சம் பேருக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்கியுள்ளன. 100 ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் சுமார் 8ஆயிரம் கோடி ரூபாய் மதிப்புள்ள "யூனிகார்ன்" அந்தஸ்தை பெற்றுள்ளன.

வழமையான வணிகங்களின் வெற்றி, தோல்வி குறிப்பிட்ட ஆண்டுகளின் செயல்பாடு அடிப்படையில் தீர்மானிக்கப்படும் போது ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் வெற்றி தோல்வி துல்லியமாக ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் மதிப்பிடப்படுவதாக உள்ளது. எல்லா வகை புதிய நிறுவனங்களையும் ஒட்டு மொத்த மதிப்பீட்டுக்குள் கொண்டு வருவது கடினம்.

ஆகவே அவற்றின் தோல்வி விகிதத்தை கணக்கிடுவதும் சிரமம். ஸ்டார்ட் அப் நிறுவனங்களின் மையப்படுத்தப்பட்ட தகவல்கள் அரசிடம் இல்லை என்று குறு சிறு நடுத்தர தொழில் அமைச்சர் நாராயண் ரானே பதில் அளித்துள்ளார்.

அறிவிப்போடு கலையும் கனவுகள்: அமைச்சர் பதில் அதிர்ச்சி தருகிறது. 90 விழுக்காடு முதல் 95 விழுக்காடு வரை ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் கடந்த ஐந்து ஆண்டுகளில் தோல்வி அடைந்துள்ளன என்பது எதிர் கட்சிகளின் குற்றச்சாட்டு அல்ல. பிரபல வணிக இதழ்களின் ஆய்வுகள் தந்துள்ள தகவல்கள் ஆகும். ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் மூலம் இந்திய இளைஞர்கள் "வேலை தேடுபவர்கள்" என்ற நிலையில் இருந்து "வேலை தருபவர்களாக" மாறி விட்டார்கள் என்று பிரதமர் உள்பட அமைச்சர்கள் தம்பட்டம் அடித்தார்கள்.

ஒரு அறிவிப்பை பரபரப்பாக வெளியிட்டு விளம்பரம் தேடுவது, பிறகு அதன் வெற்றி தோல்வியை கூட மதிப்பிட அளவுகோல் வைத்திருக்காமல் அடுத்த பரபரப்பான அறிவிப்பை வெளியிட்டு மக்களை ஏமாற்றுவது என்பதே அரசின் வாடிக்கை ஆகிவிட்டது. எவ்வளவு ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் தோல்வி அடைந்துள்ளன என்பது பற்றி மையப்படுத்தப்பட்ட தகவல்களே அரசிடம் இல்லை என்று அமைச்சர் கூறுவது அதிர்ச்சி தருகிறது.

வேலையின்மை குறித்தும் அரசிடம் தகவல் சேகரிப்பு இல்லை. சிஎம்ஐஇ விபரங்களை வெளியிட்டால் ஏற்க மாட்டார்கள். சர்வதேச நிறுவனங்கள் அறிக்கை வெளியிட்டால் உள் நோக்கம் கூறுவார்கள். இது என்ன நியாயம்? அரசு தனது திட்டங்கள் பற்றி மக்கள் மத்தியில் வெளிப்படையாக இருக்க வேண்டும்" என சு வெங்கடேசன் தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: இந்தியாவில் அனல் மின் உற்பத்தி 16.28 விழுக்காடு உயர்வு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.