ETV Bharat / state

அகதிகளாய் வரும் தமிழீழ மக்கள்: என்ன செய்யப்போகிறது தமிழ்நாடு அரசு?

author img

By

Published : Mar 25, 2022, 12:45 PM IST

இலங்கையில் நிலவும் கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக உயிர் பிழைக்க தமிழ்நாடு நோக்கிப் படையெடுக்கும் தமிழீழ மக்களைக் காப்பாற்ற தமிழ்நாடு அரசு என்ன செய்யப்போகிறது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அகதிகளாய் வரும் தமிழீழ மக்கள்
அகதிகளாய் வரும் தமிழீழ மக்கள்

மதுரை: இலங்கையில் தற்போது கடும் பொருளாதார தேக்க நிலை காரணமாக, அங்கு அரிசி, பருப்பு, காய்கறிகள், இறைச்சி உள்ளிட்ட அத்தியாவசிய பொருள்களின் விலை பல மடங்கு உயர்ந்துள்ளது. மேலும் எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக வாகனங்கள் பல கி.மீ. தூரம் காத்துக் கிடக்கும் சூழலும் உருவாகியுள்ளது.

இலங்கை வரலாற்றில் இதுவரை இல்லாத அளவிற்கு பொருள்களின் விலை உயர்ந்திருப்பதால், தமிழீழ மக்கள் தமிழ்நாடு நோக்கி படையெடுக்கும் சூழல் உருவாகியுள்ளது. கடந்த மார்ச் 21 ஆம் தேதி இந்திய எல்லைக்குட்பட்ட தனுஷ்கோடி பகுதிக்கு ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 6 பேரும், பிறகு அன்றிரவு மேலும் 10 பேரும் என மொத்தம் 16 பேர் அகதிகளாக வந்து சேர்ந்தனர்.

இவர்களை கடலோர காவல்படையினர் கைது செய்து தனியார் மண்டபத்தில் தற்காலிகமாக தங்க வைத்துள்ளனர். அகதிகளாகக் கணக்கிற் கொள்ளாமல் சட்டவிரோத குடி நுழைவு என்ற அடிப்படையில், இவர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர். பின்பு 18 வயதுக்குக் கீழ் உள்ளவர்கள், அவர்களது உறவினர்கள் வசிக்கும் அகதி முகாம்களுக்கு அனுப்பப்படுவர் என்றும்18 வயதுக்கு மேல் உள்ள நபர்கள் சென்னையிலுள்ள புழல் சிறைக்கு கொண்டு செல்லப்படுவர் எனவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இலங்கையில் நிலவும் சூழ்நிலை காரணமாக, மன்னார், வவுனியா, யாழ்ப்பாணம், முல்லைத்தீவு பகுதிகளைச் சேர்ந்த ஆயிரக்கணக்கான தமிழர்கள், தமிழ்நாட்டை நோக்கி புலம் பெயர வாய்ப்புள்ளதாக தற்போது வருகை தந்துள்ள நபர்கள் தகவல் தெரிவித்துள்ளனர். இதனையடுத்து இந்திய கடற்படை சர்வதேச கடல் பகுதியில் தீவிர கண்காணிப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. புலம் பெயர்ந்து வருகின்ற நபர்கள் குறித்து தகவல் தெரிவிக்குமாறும் தமிழ்நாடு மீனவர்களிடம் காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அகதிகளுக்கான ஐக்கிய நாடுகளின் ஆணையத்தில் இந்திய அரசு இதுவரை தன்னை உறுப்பினராக இணைத்துக் கொள்ளாத காரணத்தால், தமிழ்நாட்டை நோக்கி வருகின்ற தமிழீழ மக்களுக்கு 'கௌரவமான' வாழ்க்கை நிலை இல்லை. தமிழ்நாடு அரசு சட்டம் நடைமுறையை கடந்து மனிதாபிமான ரீதியில் எவ்வாறு இதை அணுகப் போகிறது? என சமூக ஆர்வலர்கள் மத்தியில் கேள்வி எழுந்துள்ளது.

இதையும் படிங்க: உயிர் பிழைக்க வரும் ஈழத்தமிழர்களின் துயர் துடைக்க ஆக்கப்பூர்வ திட்டங்களை மேற்கொள்ள வலியுறுத்தல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.