தமிழ் கடவுளாக போற்றப்படும் முருகனின் அறுபடை வீடுகளில் முதற்படை வீடான மதுரை திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்குச் சொந்தமான சரவணபொய்கை பிரசித்தி பெற்ற ஒன்றாகும். முருகக் கடவுள் குழந்தையாக சரவணப்பொய்கையில் அவதரித்தார் என்பது ஐதீகம், இதனால் சரவணப்பொய்கை தண்ணீரை புனித நீராகக் கருதி மக்கள் நீராடி வருகின்றனர். சரவணபொய்கையில் துர்நாற்றம் வீசுவதால் தண்ணீரை சுத்தப்படுத்தும் நடவடிக்கை குறித்து அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானியும், மாவட்ட ஆட்சியரும் ஆய்வு மேற்கொண்டனர்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு சரவணப்பொய்கையில் லட்சக்கணக்கான மீன்கள் தண்ணீரில் விஷம் கலந்ததால் உயிரிழந்தன. அன்றுமுதல் இன்றுவரை தண்ணீர் தொடர்ந்து துர்நாற்றம் வீசி வருகிறது. அதனைப் போக்க அறநிலையத்துறை சார்பில் பல்வேறு முயற்சிகள் எடுத்தும் தண்ணீரின் துர்நாற்றத்தை போக்க முடியவில்லை. இதனை அடுத்து சரவணபொய்கையை சுத்தப்படுத்தும் பணியை மேற்கொள்வதற்காக மும்பை பாபா அணு ஆராய்ச்சி மைய விஞ்ஞானி டேனியல் செல்லப்பா ஆலோசனைப்படி தண்ணீரை சுத்தப்படுத்தும் நடவடிக்கைகள் குறித்து இன்று ஆய்வு நடைபெற்றது.
இதில், மதுரை மாவட்ட ஆட்சியர் வினய், அறநிலையத்துறை அலுவலர்கள் பங்கேற்று குளத்தை ஆய்வு செய்தனர். தொடர்ந்து தண்ணீரை சுத்தம் செய்து துர்நாற்றத்தை போக்க கூடிய வழிமுறைகள் குறித்து விஞ்ஞானி செல்லப்பா ஆட்சியரிடம் விளக்கினார்.
தினந்தோறும் சுவாமிக்கு அபிஷேகம் செய்வது சரவண பொய்கையில் இருந்து கொண்டு செல்லப்படும் நீர்தான், எனவே துர்நாற்றம் வீசும் இந்த நீரால் முருகனுக்கு அபிஷேகம் செய்வது பக்தர்களிடையே முகச்சுழிவை ஏற்படுத்துகிறது. விரைந்து தண்ணீரை சுத்தம் செய்து பக்தர்களின் கோரிக்கையை நிறைவேற்ற வேண்டும் என்பதே சமூக ஆர்வலர்களின் வேண்டுகோளாக உள்ளது.
இந்நிலையில், ஆய்வு செய்வதற்கு வந்த மாவட்ட ஆட்சியர் தனது காலணியைகூட கழற்றாமல் கோவிலுக்குள் சென்றார். ஆகையால், ஆட்சியர் தலைமையில் சரவண பொய்கை தூய்மையடைந்து புத்துணர்வு அடையும் என்ற நம்பிக்கையே இல்லை என என பக்தர்கள் வேதனை தெரிவித்தனர்.
இதையும் படிங்க: திருப்பரங்குன்றம் கோயில் காணிக்கை வசூல் ரூ.31 லட்சத்தை எட்டியது