ETV Bharat / state

செயற்கை உயிரியியல் குறித்த இணையவழிக் கருத்தரங்கம்!

author img

By

Published : Dec 13, 2020, 7:03 AM IST

மதுரை: மதுரை காமராசர் பல்கலைக்கழகம், ஏ.ஐ.சி.டி.இ.யின் பயிற்சி மற்றும் கற்றல் அகாதமி (அடல்) ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம் (FDP) சிந்தடிக் பயாலஜி ஆகியவற்றின் மூலமாக செயற்கை உயிரியியல் குறித்த இணையவழிக் கருத்தரங்கம் நடைபெற்றது. இதில், நாட்டின் பல்வேறு பகுதியிலிருந்து வல்லுநர்கள் பங்கேற்று உரை நிகழ்த்தினர்.

செயற்கை உயிரியியல் குறித்த இணையவழிக் கருத்தரங்கம்!
செயற்கை உயிரியியல் குறித்த இணையவழிக் கருத்தரங்கம்!

இது குறித்து மதுரை காமராசர் பல்கலைக் கழகம் வெளியிட்டுள்ள செய்தி அறிக்கையில், "மத்திய அரசின் ஏ.ஐ.சி.டி.இ.யின் நிதியுதவியுடன் செயற்கை உயிரியியல் (சிந்தடிக் பயாலஜி) ஐந்து நாள்கள் ஆன்லைன் ஆசிரியர் மேம்பாட்டுத் திட்டம், நவம்பர் 30 முதல் டிசம்பர் 4ஆம் தேதிவரை மதுரை காமராசர் பல்கலைக் கழகத்தில் நடைபெற்றது. இதற்கான நிதியுதவியை மத்திய அரசின் ஏ.ஐ.சி.டி.இ. பல்கலைக்கழகத்திற்கு வழங்கியது.

இந்தியா முழுவதிலிருந்து 24 மாநிலங்களைச் சேர்ந்த 97 உயர் கல்வி நிறுவனங்களில் பயிலும் 200-க்கும் மேற்பட்ட பட்ட மேற்படிப்பு மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள், பேராசிரியர்கள், விஞ்ஞானிகள் ஏ.ஐ.சி.டி.இ.யின் அடல் இணையத்தில் பதிவுசெய்திருந்தனர். இவர்களிலிருந்து 200 பேரை தேர்வுசெய்து ‘செயற்கை உயிரியியல்’ சார்ந்த அடிப்படை அறிவியல் கொள்கைகள், பயன்பாடு மற்றும் எதிர்கால முன்னேற்றம் என்ற பல தலைப்புகளில் துறையின் தலைசிறந்த ஆராய்ச்சியாளர்களும், பேராசிரியர்களும் சிறப்புரையாற்றினர்.

செயற்கை உயிரியல் உதவியுடன் உயிரி தொழில்நுட்பங்கள் (பயோடெக்னாலஜி) மருந்துகள் தயாரிப்பு, தொழில்முறை தேர்வர்கள், உயிரி ஆயுத ஆபத்துகள் மற்றும் எதிர்கால போக்குகள் எனப் பல்வேறு கருத்துகள் பங்கேற்பாளர்களுக்கு 14 இணையவழி வகுப்புகள் மூலம் வழங்கப்பட்டன.

நவம்பர் 30 காலை 10.00 மணிக்கு நடந்த தொடக்க விழாவில் நோய்த்தடுப்பாற்றல் துறை தலைவரும் அடல் மேம்பாட்டுத் திட்ட ஒருங்கிணைப்பாளருமான பேராசிரியர் க. பாலகிருஷ்ணன் வரவேற்று பேசினார். பல்கலை துணைவேந்தரும் இந்த அடல் பயிற்சி திட்டத்தின் இயக்குநருமான பேராசியர் கிருஷ்ணன் தலைமையுரை ஆற்றினார்.

இவ்விழாவில் 14 சிறப்பு விருந்தினர்கள் தங்களின் ஆய்வுகள் மூலம் கண்டறிந்த செயற்கை உயிரியல் குறித்த விரிவான சொற்பொழிவுகளை நிகழ்த்தினர். டெல்லியிலுள்ள ஜவஹர்லால் பல்கலைக்கழக பேராசிரியர் பவன் தார், சென்னை ஐஐடி பேராசிரியர் குகன் ஜெயராமன், அழகப்பா பல்கலைக்கழக பேராசிரியர் கருத்த பாண்டியன், கல்கத்தா போஸ் இன்ஸ்டிடியூட் விஞ்ஞானி டாக்டர் சுடிப்தோ சஹா, பெங்களுரு உயிரி தகவலியல் நிறுவனத்தைச் சார்ந்த விஞ்ஞானி சஞ்சய் கோஷ் ஆகியோரது உரைகள் மாணவர்களுக்கும் ஆராய்ச்சியாளர்களுக்கும் பல்வேறு தகவல்களைத் தருவதாக அமைந்தன.

இந்த ஐந்து நாள் நிகழ்வுகள் அனைத்தும் மாணவர்கள் ஆராய்ச்சியாளர்கள் நலன்கருதி பல்கலைக்கழக இணையதளத்தில் அனைவரும் பார்த்து பயன்பெறும் வகையில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சாகித்ய அகாடமி விருது வென்ற யு.ஏ. காதர் காலமானார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.