ETV Bharat / state

மாநகராட்சி தேர்தலைக் கருத்தில் கொண்டே மதுரைக்கு திட்டங்கள் - செல்லூர் ராஜூ குற்றச்சாட்டு

author img

By

Published : Jan 22, 2022, 5:18 PM IST

நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் வர உள்ளதால் மதுரைக்கு முதலமைச்சர் ஸ்டாலின் புதிய திட்டங்களை அறிவித்து உள்ளதாக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.

செல்லூர் ராஜூ பேட்டி
செல்லூர் ராஜூ பேட்டி

மதுரை: தமிழ்நாடு முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 105ஆவது பிறந்தநாளையொட்டி மதுரை அருள்தாஸ்புரத்தில் முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ அதிமுக கட்சி கொடியேற்றி வைத்து பொதுமக்களுக்கு இனிப்பு மற்றும் உணவுகள் வழங்கினார்.

பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்து பேசுகையில், " மதுரை வளர்ந்த சிறந்த நகரமாக உள்ளது. தொல்லியல் நகரமாக உள்ள மதுரையை வளர்ந்த நகரமாக மாற்ற முயற்சி எடுத்தது அதிமுக தான். அதிமுக ஆட்சியில் மதுரைக்கு 5 ஆயிரம் கோடிக்கு திட்டங்கள் கொண்டு வரப்பட்டன.

பாதாள சாக்கடை திட்டம்

அதிமுக ஆட்சி காலத்தில் கொண்டு வந்த திட்டங்களை முதலமைச்சர் திறந்து வைத்துள்ளார். அதிமுக ஆட்சி காலத்தில் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட பாலங்களை முதலமைச்சர் தற்போது அறிவிப்பாக வெளியிட்டுள்ளார். முதலமைச்சர் மேலக்கால் சாலையை அகலப்படுத்துவதாக அறிவித்துள்ளார். அதற்கு பதில் வைகை ஆற்றின் கரையோரம் சாலை அமைக்கலாம்.

அதிமுக ஆட்சி காலத்தில் நீர் நிலைகள் தூர் வாரி நிலத்தடி நீர் அதிகரிக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. முதலமைச்சர் ஸ்டாலின் மாநகராட்சி தேர்தலுக்காக மதுரைக்கு புதிய திட்டங்களை அறிவித்து உள்ளார். மதுரைக்கான வளர்ச்சி திட்டங்களை தற்போதைய திமுக அமைச்சர்கள் அரசிடம் கேட்டு செயல்படுத்த வேண்டும்.

திமுக ஆட்சி காலத்தில் உள்ளாட்சித்துறை அமைச்சராக இருந்த ஸ்டாலின் மதுரையில் பாதாள சாக்கடை திட்டத்தை முறையாக செயல்படுத்தவில்லை. மதுரைக்கு தேவையான வளர்ச்சி திட்டங்களை அரசு செயல்படுத்த வேண்டும். மதுரைக்கு வகுக்கப்பட்ட திட்டங்கள் குறித்து அரசு விளக்கம் தந்து அதற்கான நிதி எங்கிருந்து பெறப்படுகிறது என்பது குறித்தும் தெரிவிக்க வேண்டும்.

செல்லூர் ராஜூ பேட்டி

ஓபிஎஸ், ஈபிஎஸ்க்கு புகழாரம்

எதிர்காலம், மக்கள் தொகை பெருக்கம், தொலைநோக்கு பார்வையோடு திட்டங்களை கொண்டு வந்து செயல்படுத்த வேண்டும். வெளியான அறிவிப்புகள் வெறும் அறிவிப்பாக இருக்கக்கூடாது. ஜல்லிக்கட்டு நாயகனாக ஓபிஎஸ். குடிமராமத்து நாயகனாக ஈபிஎஸ் உள்ளனர். எப்போது தேர்தல் வந்தாலும் அதிமுக தேர்தலை சந்திக்கத் தயாராக உள்ளது. தேர்தலில் மக்கள் தான் எஜமானர்கள். மக்களை நம்பியே அதிமுக தேர்தலை எதிர்கொள்கிறது" என செல்லூர் ராஜூ தெரிவித்தார்.

இதையும் படிங்க: பொது இடங்களில் சிலைகள் வைக்க அனுமதி வழங்கப்படவில்லை - தமிழ்நாடு அரசு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.