மதுரை மாவட்டத்தில் தொடர்ந்து கரோனா தொற்று அதிகரித்து வந்த நிலையில் ஜூன் 24ஆம் தேதி முதல் ஜூலை 14ஆம் தேதி வரை முழு ஊரடங்கு கடைபிடிக்கப்பட்டது. இந்த நிலையில் ஜூலை 15ஆம் தேதி முதல் சில தளர்வுகள் அறிவிக்கப்பட்டு நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது.
மதுரையில் முழு ஊரடங்கைக் கடைபிடித்தபோதிலும் மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் 33 விழுக்காடு அலுவலர்கள், ஆசிரியர்கள் மூலமாக பல்கலைக்கழகப் பணிகள் நடைபெற்று வந்தன. இந்நிலையில், மதுரை காமராஜர் பல்கலைக்கழகத்தில் பணிபுரிந்து வந்த தொலைதூரக் கல்வி அலுவலர் ஒருவருக்கு நேற்று (ஜூலை 17) கரோனா நோய் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ஜூலை 17ஆம் தேதி முதல் ஜூலை20 ஆம் தேதி வரை பல்கலைக்கழகத்திற்கு முழு விடுமுறை என்ற அறிவிப்பினை பதிவாளர் வசந்தா (பொறுப்பு) சுற்றறிக்கையாக வெளியிட்டுள்ளார். மதுரை காமராஜர் பல்கலைக்கழகம் முதல்முறையாக கரோனா நோய்த்தொற்று பரவல் காரணமாக விடுமுறை அளித்துள்ளது.
மேலும் தொலைதூர கல்வி அலுவலர் உடன் தொடர்பிலிருந்தவர்கள் தனிமைப்படுத்தப்பட்டு, தொலைதூர கல்வி அலுவலக கட்டடம் முழுவதும் கிருமிநாசினி கொண்டு சுத்தம் செய்யப்பட உள்ளதாக மதுரை காமராஜர் பல்கலைக்கழக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
மதுரை மாவட்டத்தில் கரோனாவால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 7,858ஆக இருக்கும் நிலையில், இதுவரை 4 ஆயிரத்து 677 பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். தற்போது 3,043 பேர் சிகிச்சை பெற்றுவருகின்றனர். நான்கு பேர் சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: கரோனா தொற்று: தாய் தங்கையை அரசு மருத்துவமனையில் சேர்த்த எம்பி சு.வெங்கடேசன்!