ETV Bharat / state

துறையில் நடக்கும் தவறுகளுக்கு அத்துறைஅமைச்சர்களே பொறுப்பு - நிதியமைச்சர்

author img

By

Published : Aug 30, 2021, 6:41 PM IST

துறை ரீதியாக அரசு அலுவலர்களின் மீது நடவடிக்கை எடுக்கும் போது, துறைத்தலைவர்களான அமைச்சர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுக்காமல் இருக்கமுடியும். துறைகளில் நடக்கும் தவறுகளுக்கு அத்துறையின் தலைவர்களான அமைச்சர்கள்தான் பொறுப்பேற்க வேண்டும் என நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

பழனிவேல் தியாகராஜன்
பழனிவேல் தியாகராஜன்

மதுரை: தானப்ப முதலி தெருவிலுள்ள தனியார் திருமண மண்டபத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், சமூக பாதுகாப்பு திட்டத்தின் ரூ.16 லட்சம் மதிப்பிலான பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

இந்நிகழ்ச்சியில், தமிழ்நாடு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் கலந்துகொண்டு 163 பயனாளர்களுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கினார். உடன் மாவட்ட ஆட்சியர் அனிஷ்சேகர், மாநகராட்சி ஆணையாளர் கார்த்திகேயன் ஆகியோர் கலந்து கொண்டனர்.

பின்பு செய்தியாளர்களைச் சந்தித்த நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன், "குடிநீருக்கு மீட்டர் பொருத்துவது, எளிய சாமானிய மக்களுக்குதான் நல்லது. அதிகமாக குடிநீரைப் பயன்படுத்துபவர்களை கண்டறியவும், பயன்பாட்டை கணக்கிடவுமே மீட்டர் பொருத்தப்படுகிறது. இங்கு இணைப்பு பெறுவதற்கான கட்டணத்தை குறைத்து விட்டு பயன்பாட்டுக்கான கட்டணத்தை அதிகப்படுத்த வேண்டும் அது தானே பொருளாதார ஜனநாயகம்.

மதுரையில் நடந்தது விபத்து

மதுரையில் பாலம் இடிந்து விழவில்லை கட்டுமானப்பணியின்போது அங்கு விபத்து நடந்துள்ளது. 110 டன் எடையுள்ள கட்டுமான தூணை ஹைட்ராலிக் லிப்ட் வைத்து தூக்கும் போது இரண்டே பணியாளர்கள் மட்டுமே இருந்துள்ளனர்.

அவ்வளவு முக்கியமான பணி நடைபெறுகையில் அத்துறை சார்ந்த வல்லுநர்கள் இல்லாமல், கல்வியறிவு இல்லாத இரண்டு வடஇந்திய வாலிபர்களை வைத்து மட்டும் பணி செய்தது தவறு. அதற்தாக அந்த விபத்து சம்பவம் குறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அவர்கள் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

குடியிருப்பு பகுதியில் நடந்தது முறைகேடு

சென்னை குடியிருப்பு பகுதி பற்றி பதிவான புகார் என்பது ஒப்பந்ததாரர், தவறான கட்டுமானப் பொருட்களை பயன்படுத்தி கட்டடம் கட்டியுள்ளார்.

அதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. அதற்கு அந்த பணியினை மேலாண்மை, கண்காணிப்பு செய்த, செய்ய வேண்டிய அரசு அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டியுள்ளது" என்றார்.

அப்போது, இது போன்ற சில அரசு கட்டடங்கள் முன்னாள் அமைச்சரின் கண்காணிப்பில் கட்டப்பட்டுள்ளன. முறைகேடு குறித்து அவர்கள் மீதும் நடவடிக்கை எடுக்கப்படுமா என்ற கேள்விக்கு, "அரசு அலுவலர்கள் மேல் நடவடிக்கை எடுக்கும் போது அமைச்சர்களின் மீது நடவடிக்கை எடுக்காமல் இருக்க முடியுமா? இது ஜனநாயக நாடு. துறையில் நடக்கும் தவறுகளுக்கு, அந்த துறையின் அமைச்சர்தான் பொறுப்பேற்க வேண்டும். அவர்களை மட்டும் எப்படி விட்டுவிட முடியும்" என்றார்

இதையும் படிங்க: மதுரை மேம்பால விபத்து - ஒப்பந்ததாரரின் அலட்சியமே காரணம் என அமைச்சர் குற்றச்சாட்டு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.