மதுரை: நாட்டில் கரோனா தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்துவருகிறது. இதனால் மத்திய அரசு தடுப்பூசி செலுத்தும் பணியைத் தீவிரப்படுத்தியுள்ளது. மேலும் மத்திய, மாநில அரசுகள் கட்டுப்பாடுகளைக் கடுமையாக்கிவருகின்றன. தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்றுப் பரவல் தற்போது அதிகரித்துவருகிறது.
இந்நிலையில், கரோனா தொற்றுப் பரவலை அடுத்து மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டுப் போட்டிகள் தமிழ்நாடு அரசின் நிபந்தனைகளோடு அண்மையில் நடைபெற்றது. இதை அமைச்சர் மூர்த்தி முன்னின்று நடத்தினார்.
மூன்று ஜல்லிக்கட்டுப் போட்டிகளிலும் இரண்டாயிரத்திற்கும் மேற்பட்ட காளைகள், 1500-க்கும் மேற்பட்ட மாடுபிடி வீரர்கள் பங்கேற்றுச் சிறப்பித்தனர்.
இந்த நிலையில் மதுரை மாவட்டத்தில் செயல்படுத்தப்பட உள்ள பல்வேறு திட்டப் பணிகளுக்கான தொடக்க விழா இன்று (ஜனவரி 21) நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்திலிருந்து காணொலி காட்சி மூலமாக மு.க. ஸ்டாலின் இன்று திறந்துவைத்துப் பேசினார்.
அப்போது பேசிய ஸ்டாலின், அமைச்சர் மூர்த்திக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதால் நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை எனக் குறிப்பிட்டார். கரோனா தொற்று உறுதிசெய்யப்பட்டதை அடுத்து மூர்த்தி மதுரையில் உள்ள தன்னுடைய இல்லத்தில் தனிமைப்படுத்திக்கொண்டார்.
தற்போது திரைப் பிரபலங்கள், அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள் பலர் கரோனா தொற்றால் அதிகம் பாதிக்கப்பட்டுவருகின்றனர். அந்த வகையில், சமீபத்தில் எஸ்.எஸ். சிவசங்கருக்கு கரோனா தொற்று (ஜனவரி 19) உறுதிசெய்யப்பட்டது.
தமிழ்நாட்டில் தினசரி கரோனா பாதிப்பு என்பது 29 ஆயிரத்தை நெருங்கிய நிலையில் தொற்றைக் கட்டுப்படுத்த மாநில அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துவருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: மண்டபத்தில் குத்தாட்டம்... மணமகளுக்கு பளார்... திருமணம் நிறுத்தம்