மதுரை மாநகர காவல்துறை பண்டிகை காலத்தை எதிர் நோக்கியுள்ள நேரத்தில் பண்டிகை கால பொருள்களை வாங்க வரும் மக்கள் முககவசம் அணியாமல் வருவதை கண்டறிந்து அபராதம் விதிக்க புது வகையான தொழில்நுட்ப யுக்தியை மதுரை மாநகர காவல் ஆணையர் பிரேம் ஆனந்த சின்ஹா அறிமுகப்படுத்தப்டுத்தியுள்ளார்.
இதுகுறித்து சட்டம் ஒழுங்கு உதவி ஆணையர் ரமேஷ், மாநகர காவல் துறையின் தொழில்நுட்ப பிரிவு ஆய்வாளர் சுந்தரவடிவேல் ஆகியோர் கூறுகையில், "சோதனை முறையில் முதல் கட்டமாக திலகர்திடல் மற்றும் விளக்குத்தூண் காவல் நிலையங்களில் உள்ள சிசிடிவி கேமரா நெட்வொர்க்கை பயன்படுத்தி முககவசம் அணியாத அல்லது தவறாக அணிந்துள்ள மக்கள் கண்டறியப்படுவார்கள்.
விதி மீறியவர்களின் புகைப்படத்துடன் கூடிய ஒர் எச்சரிக்கையை Android mobile Application உதவியுடன் சம்பந்தபட்ட காவல்நிலைய அலுவலரின் கைபேசிக்கு அனுப்பப்படும். இச்செயல்முறையின் மூலம் விதிமீறியவர்களை ஆதாரத்துடன் சரியான நேரத்தில் கண்டறிந்து அவர்கள் மீது விதிமீறல் வழக்கு பதிய காவல்துறையினருக்கு இம்மென்பொருள் உதவியாக இருக்கும்.
தற்போது இந்த மென் பொருளை உபயோகப்படுத்தி சோதனை அடிப்படையில் 40 சிசிடிவி கேமராக்கள் பயன்படுத்தப்படவுள்ளது. மதுரை மாநகரின் பிற பகுதிகளுக்கும் குறிப்பாக மக்கள் நெரிசல் அதிகமுள்ள பகுதிகளுக்கும் விரிவுபடுத்தப்படும். குற்றச்செயல்களில் ஈடுபடுவோரை மிக விரைவாக கண்டறியவும் இந்த காணொளி பகுப்பாய்வு செயல்முறையை மேம்படுத்த மதுரை மாநகர காவல்துறை திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் மதுரை மாநகர காவல்துறையை தொழில்நுட்ப ரீதியாக வலுபடுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது" என்றனர்.