மதுரை: மத்திய அரசின் இந்தி திணிப்பிற்கு எதிராக மதுரை பெத்தானியபுரம் பகுதியில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் கண்டனக் கூட்டம் நேற்று (ஏப்ரல்.19) நடைபெற்றது. இக்கண்டன கூட்டத்தில் கலந்து கொண்டு மதுரை மக்களவை உறுப்பினர் சு. வெங்கடேசன் பேசினார்.
அப்போது பேசிய அவர், "சித்திரைத்திருவிழா கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் நிகழ்வில் இருவர் உயிரிழப்பிற்கு மதுரையின் பாரம்பரியம் வரலாறு தெரியாமல், வைகையாற்றின் கரைகளில் தடுப்புகள் அமைக்கப்பட்டதால் மக்கள் ஆற்றில் இறங்க முடியாத நிலை ஏற்பட்டது.
கள்ளழகர் வைகையாற்றில் இறங்கும் இடத்திற்கு 60 அடி தூரத்தில் கடந்த ஆட்சியின் போது தடுப்பணை கட்டியதால் மக்கள் ஆற்றில் இறங்க முடியாத சூழலில் ஒரே இடத்தில் கூட வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
முன்பெல்லாம் கரையின் அனைத்துப் பகுதிகள் வழியாக மக்கள் ஆற்றில் இறங்குவர். ஆனால், தற்போது 3 வழிகள் மட்டுமே உள்ளன. எந்தவித திட்டமிடலும் இல்லாமல் தங்களது சுய லாபத்திற்காகவும் கமிஷன் பெரும் நோக்கிலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின்கீழ் வைகையாற்றின் இரு கரைகளில் தடுப்புகள் அமைத்த அதிமுக அரசுதான் இருவரின் உயிரிழப்பிற்குக் காரணம்.
2024 நாடாளுமன்றத் தேர்தலை மையமாக வைத்து இந்தி பேசும் மாநிலங்களை மையப்படுத்தி இந்தியை மையப்படுத்தும் அரசியலை பாஜக தீவிரப்படுத்தியுள்ளது. இவ்வளவு ஆண்டுகளாக நாம் போராடிக் காத்த உரிமைகள் நம் கையைவிட்டுப் போகும் நிலை ஏற்பட்டுள்ளது.
கட்டாய இந்தியை எல்லா வகையிலும் திணிக்க முயற்சிக்கிறது ஒன்றிய அரசு. மிகப்பெரிய ஆபத்தை நோக்கி சென்று கொண்டிருக்கிறது" என்று தெரிவித்தார்.