ETV Bharat / state

தமிழ் தெரிந்த நீதிபதிகளை நியமனம் செய்க: எம்.பி. வலியுறுத்தல்

author img

By

Published : Feb 12, 2021, 3:09 PM IST

சென்னையில் உள்ள தொழில் தீர்ப்பாயத்திற்கு தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை நியமனம் செய்ய மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரிடம் மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் நேரில் வலியுறுத்தியுள்ளார்.

Madurai MP Su.Venkatesan demanded the appointment of Tamil speaking judges to the Chennai Industrial Tribunal
Madurai MP Su.Venkatesan demanded the appointment of Tamil speaking judges to the Chennai Industrial Tribunal

மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் சென்னையில் உள்ள தொழில் தீர்ப்பாயத்திற்கு தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை நியமனம் செய்யக்கோரி மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரிடம் வலியுறுத்தியுள்ளார். இதுதொடர்பாக கருத்து தெரிவித்த அவர், "பணி செய்யும் நிறுவனங்களில் தொழிலாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்னைகளை தனிச்சிறப்புடன் முன்னெடுக்கவும், அவற்றை தீர்க்கவும் தொழிலாளர் நீதிமன்றங்கள் அல்லது மத்திய அரசின் தொழில் தீர்ப்பாயங்கள் (Central Government Industrial Tribunal) அமைக்கப்பட்டுள்ளன.

எந்தவித முன்னறிவிப்பும் இல்லாமல் வேலையை விட்டு நீக்குவது, பழிவாங்கும் விதமாக தொழிலாளர்களைத் தண்டிப்பது, தொழிலாளர்களுக்கு நியாயமாக வழங்கவேண்டிய சலுகைகளை மறுப்பது, கூட்டு பேர உரிமையை மறுப்பது என தொழில் தகராறு சட்டத்தின்படி எழும் பல்வேறு பிரச்னைகள் குறித்து விசாரித்து தீர்ப்பு வழங்க மொத்த தமிழ்நாட்டிற்கும் சென்னையில் சாஸ்திரி பவனில் ஒரு தீர்ப்பாயம் செயல்பட்டது.

அணி திரட்டப்பட்ட, அணி திரட்டப்படாத கோடிக்கணக்கான தொழிலாளர்களின் தாவாக்களை தீர்ப்பதற்கு மத்திய அரசு வழங்கி இருக்கும் இடம் அது.

எந்த ஒரு தொழில் தாவாவும் மூன்று மாதங்களுக்குள் தீர்க்கப்பட வேண்டும் என்று விதி இருக்கிறது. ஆனால் 2003ஆம் ஆண்டிலிருந்து தீர்க்கப்படாமல் நிலுவையில் இருக்கும் தாவாக்களையும் கொண்டதாக சென்னை தீர்ப்பாயம் உள்ளது. இந்த ஆக்கத்தில் வருங்கால வைப்பு நிதி குறித்த தாவாக்களையும் இந்த தீர்ப்பாயம் இதோடு இணைத்து 2017ஆம் ஆண்டில் உத்தரவிட்டது மத்திய அரசு.

கொடுமை என்னவெனில் 2017ஆம் ஆண்டிலிருந்து 2018ஆம் ஆண்டுவரை இந்த தீர்ப்பாயத்திற்கு நீதிபதி நியமிக்கப்படவில்லை. 2018ஆம் ஆண்டில் ஒரிசாவை சேர்ந்த திப்தி மல்ஹோத்ரா நீதிபதியாக நியமிக்கப்பட்டார். ஆனாலும் தாவாக்கள் முறையாகவும் முழுமையாகவும் நடத்தப்படவில்லை. வழக்குகள் எல்லாம் மேலும் தேங்கின. கரோனா வந்த பிறகு அவை அனைத்தும் அப்படியே நின்றுவிட்டன.

இந்தத் தீர்ப்பாயங்களில் வழக்கறிஞர்களை வைத்துதான் வழக்கு நடத்த வேண்டும் என்றில்லை. பாதிக்கப்பட்ட தொழிலாளர்களை தங்களுக்காக வழக்கை நடத்தலாம் அல்லது தொழிற்சங்க தலைவர்கள் வழக்கு நடத்தலாம். அப்படியானால் தீர்ப்பாயத்தில் புழங்கும் மொழி அந்தந்த மாநிலத்தின் மொழியாக இருக்க வேண்டியது அவசியம். வேறு மாநிலத்தில் நீதிபதிகளை நியமித்தால் எப்படி எளிய சாதாரண தொழிலாளர்கள் தங்களுக்காக வாதாட முடியும். அதனால் முன்னெடுக்க முடியாத சரியான தீர்ப்புகளும் இருக்கின்றன.

உடனடியாக, தமிழ் தெரிந்த மூன்று நீதிபதிகளை சென்னை தொழில் தீர்ப்பாயத்திற்கு நியமிக்க வேண்டியதும் தேங்கிக் கிடக்கும் வழக்குகளை முறைப்படுத்தி தீர்க்க வேண்டியதும் அவசியமாகும். இந்த கோரிக்கையை வலியுறுத்தி நேற்றைய தினம் மத்திய தொழிலாளர் நலத்துறை அமைச்சர் சந்தோஷ்குமார் கங்வாரிடம் நேரில் சந்தித்து கடிதம் வழங்கியுள்ளேன். சென்னை தீர்ப்பாயத்திற்கு ஒன்றுக்கு மேற்பட்ட நீதிபதிகளை நியமிக்க விரைந்து நடவடிக்கை எடுப்பதாக கூறியுள்ளார்" என்றார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.