ETV Bharat / state

சாதி மறுப்பு திருமணம் செய்வர்கள் மீது தீண்டாமையா? - திருச்சி கலெக்டர் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

author img

By

Published : Apr 26, 2023, 11:00 PM IST

திருச்சி மாவட்டம் புலிவலம் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை கோயிலில் வழிபாடு செய்ய விடாமல் தீண்டாமை செயல் நடைபெறுகிறதா? என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க உயர் நீதிமன்றம் மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

Etv Bharat
Etv Bharat

மதுரை: சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டதால் கோயிலில் வழிபாடு செய்யவிடாமல் விழாக் குழுவினர் தீண்டாமை செயல்களில் ஈடுபடுவதாகவும் அதை தடுப்பதோடு, இந்த சம்பவத்தில் சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த விவகாரத்தில், திருச்சி மாவட்டம் புலிவலம் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் மற்றும் மறுமணம் செய்த குடும்பங்களை ஊரை விட்டு ஒதுக்கி வைத்து திருவிழாக்களில் வழிபாடு செய்யவிடாமல் தடுக்கப்படுகிறார்களா? என்று மாவட்ட ஆட்சியர் தரப்பில் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

திருச்சி மாவட்டத்தைச் சேர்ந்த பழனிச்சாமி என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் ஒரு மனு தாக்கல் செய்திருந்தார். அதில், 'திருச்சி மாவட்டம், முசிறி தாலுகா புலிவலம் கிராமத்தில் வசித்து வருகிறேன். எங்களது கிராமத்தில் அம்மை மாரியம்மன் கோயில் அமைந்துள்ளது. வருடம் தோறும் கோயில் திருவிழாவை மக்கள் அனைவரிடமிருந்தும் வரி வசூல் செய்து பிரம்மாண்டமாக நடத்தப்படும் விழா கமிட்டி அமைக்கப்பட்டு ஏற்பாடுகள் செய்யப்படும்.

நான் கடந்த 16 ஆண்டுகளுக்கு முன்பாக, 'சாதி மறுப்பு திருமணம்' செய்து கொண்டேன். விழா கமிட்டி குழுவினர் என்னை எனது குடும்பத்தாரையும் ஊரை விட்டு ஒதுக்கி வைப்பதாகவும், என்னிடம் இருந்து வரி வசூல் செய்ய மறுத்தும், என்னை கோயிலுக்குள் வழிபட விடாமல் ஊர் மக்கள் யாரும் என்னிடம் தொடர்பு வைக்கக்கூடாது எனவும் மிரட்டி வருகின்றனர்.

இதே போல், எங்களது கிராமத்தில் 'சாதி மறுப்பு திருமணம், விதவை திருமணம்' மேற்கொண்ட சிலரையும் கோயிலுக்குள் வழிபாடு நடத்த அனுமதி வழங்காமல் 'தீண்டாமை' செயல்களில் ஈடுபட்டு வருகின்றனர். எனவே, திருவிழாவிற்கு எங்களிடமிருந்து வரி வசூல் செய்யவும் எங்களை வழிபாடு செய்ய அனுமதிக்கவும் மேலும், எங்களை வழிபாடு செய்ய அனுமதிக்காத தீண்டாமை செல்களில் ஈடுபட்ட நபர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும் உத்தரவிட வேண்டும்' என அந்த மனுவில் குறிப்பிட்டிருந்தார்.

இந்த வழக்கு சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி டி. ராஜா மற்றும் ஆர். சுப்பிரமணி அமர்வு முன்பாக இன்று (ஏப்.26) விசாரணைக்கு வந்தது. இந்த நிலையில், மனுதாரர் கிராமத்தில் சாதி மறுப்பு திருமணம் செய்து கொண்டவர்களை கோயிலில் வழிபாடு செய்ய விடாமல் தீண்டாமை செயல் நடைபெறுகிறதா? என மாவட்ட ஆட்சியர் தரப்பில் உரிய விளக்கம் அளிக்க உத்தரவிட்டு, இந்த வழக்கு விசாரணையை 28ஆம் தேதிக்கு ஒத்தி வைத்தனர்.

இதையும் படிங்க: பள்ளி ஒருங்கிணைப்பு தொடர்பான பிடிஆர் முயற்சி - ஆதி திராவிடர், கள்ளர் அமைப்புகள் கடும்எதிர்ப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.