ETV Bharat / state

பள்ளி ஒருங்கிணைப்பு தொடர்பான பிடிஆர் முயற்சி - ஆதி திராவிடர், கள்ளர் அமைப்புகள் கடும்எதிர்ப்பு!

author img

By

Published : Apr 26, 2023, 10:19 PM IST

ஆதி திராவிடர் மற்றும் கள்ளர் சீரமைப்புப் பள்ளிகளை பள்ளிக்கல்வித்துறையின் கீழ் கொண்டு வரும் முயற்சி, பாஜக-வின் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக தமிழ்நாட்டில் அமல்படுத்தும் செயல்திட்டமாகும் என வல்லுநர்கள் குற்றம்சாட்டியுள்ளனர். அது குறித்த சிறப்புத் தொகுப்பைக் காணலாம்...

Etv Bharat தேசிய கல்விக் கொள்கை - வல்லுநர்கள் குற்றச்சாட்டு
Etv Bharatதேசிய கல்விக் கொள்கை - வல்லுநர்கள் குற்றச்சாட்டு

தேசிய கல்விக் கொள்கை - வல்லுநர்கள் குற்றச்சாட்டு

மதுரை: ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை, பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நலத்துறை, இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை, வனத்துறை உள்ளிட்டப் பல துறைகளின் கீழ் இயங்கி வரும் பள்ளிகள் அனைத்தும், இனி பள்ளிக் கல்வித்துறையின் கட்டுப்பாட்டில் கொண்டு வரப்படும் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்திருந்தார்.

தமிழ்நாடு அரசின் இம்முயற்சி பல்வேறு தரப்பில் எதிர்ப்பினைத் தோற்றுவித்துள்ள நிலையில், இது குறித்து 'அறிவுச்சமூகம்' என்ற அமைப்பு பொது விவாதத்தை அண்மையில் நடத்தியது. அதன் தலைவரும் ஆதி திராவிடர் நல பள்ளிக் கூட்டமைப்புகளின் ஒருங்கிணைப்பாளருமான தமிழ்முதல்வன் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஊடகத்திற்கு சிறப்பு நேர்காணல் அளித்தார்.

அப்போது பேசிய அவர், “நிதியமைச்சரின் இந்த அறிவிப்பு மிகுந்த அதிர்ச்சிக்குரியது. பொது விவாதமோ, முன்னறிவிப்போ இன்றி இதனை அறிவித்துள்ளார்கள். இதற்காக பொதுவிவாதத்தை நாங்கள் ஏற்பாடு செய்தோம். மூன்று நாட்கள் சென்னையில் நடைபெற்ற இந்த பொதுவிவாதத்தில் பல்வேறு அரசியல் கட்சியினர், கல்வியாளர்கள், எழுத்தாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் என 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.

அதில் பேசப்பட்ட கருத்துகள் அனைத்தையும் தொகுத்து அறிக்கையாக தயார் செய்து பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் உட்பட எடப்பாடி பழனிசாமி, முத்தரசன், பாலகிருஷ்ணன் உள்ளிட்ட அனைத்துக் கட்சித் தலைவர்களுக்கும் வழங்கினோம். இந்த விவாதம் தமிழக அரசுக்குப் பெரிய அழுத்தத்தைக் கொடுத்துள்ளது. அயோத்தி தாசப் பண்டிதர், சகஜானந்தா சுவாமிகள் ஆகியோர் தொலைநோக்குப் பார்வையுடன் உருவாக்கிய ஒரு கல்வி அமைப்பே ஆதி திராவிடர் நலப்பள்ளிகள்.

பிற பள்ளி அமைப்புகளைக் காட்டிலும் ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் சமூக நோக்கோடும், கல்வி மறுக்கப்பட்ட சமூகங்களை முன்னேற்றும் பொருட்டும் உருவாக்கப்பட்டவையாகும். பஞ்சமர் பள்ளிகள், தொழிலாளர் நலத்துறை பள்ளிகள் என்று வரிசையாக இதன் பெயர் மாற்றப்பட்டு, கடைசியாக ஆதி திராவிடர் நலத்துறைப் பள்ளிகளாக மாற்றப்பட்டு இன்று வரை இயங்கி வருகிறது.

இந்தப் பள்ளிகள் துவங்கப்பட்டதன் நோக்கம் இன்றுவரை நிறைவேறவில்லை. ஆதி திராவிடர் சமூகம் இன்றைக்கும் இடஒதுக்கீட்டையே பெரிதும் நம்பியுள்ளது. சாதியப்பாகுபாடு காரணமாக மிகுந்த அழுத்தத்தையும், கொடுமைகளையும் சந்தித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இப்படியான ஒரு சூழலில் அப்பள்ளிகளை இணைப்பது மிகப்பெரிய துரோகச் செயலாகும்.

மத்திய அரசின் தேசிய கல்விக் கொள்கையை மறைமுகமாக அமல்படுத்தும் நோக்கமாகவும் இந்த இணைப்பு உள்ளது. பலவீனமான பள்ளிகளை பலம் வாய்ந்த பள்ளிகளோடு இணைப்பது தேசிய கல்விக் கொள்கையின் ஒரு கூறாகும். ஆதி திராவிடர் நலத்துறையின்கீழ் இயங்கும் சில பள்ளிகள் பலவீலமானவை என்று அடையாளம் கண்டிருக்கிறோம் என்றாலும் ஒட்டுமொத்தமாக அவை இணைக்கப்படும்போது, பலவீனமான பள்ளிகள் என்ற வகையில் அருகிலுள்ளபள்ளிகள் அனைத்தும் கலைக்கப்பட்டு, பொதுப்பள்ளிகளாக மாறும்.

அப்பொதுப்பள்ளிகளும் எண்ணிக்கைக் குறைவு என்று மூடப்பட்டு நாளை தனியார் மயமாகும். இதுதான் தேசியக் கல்விக் கொள்கையின் நோக்கம். ஆதி திராவிடர் நலப்பள்ளிகள் என்று இருந்தால் அவற்றின் மீது கைவைக்க முடியாது. அச்சொல்லை நீக்கிவிட்டால் இணைப்பதற்கு ஏதுவாக இருக்கும் என்பதே இதன் உள்நோக்கம். மத்திய அரசின் கல்விக் கொள்கையை மாநில அரசு எதிர்ப்பதாக நாடகமாடிக்கொண்டு, அதனையே ஏற்று மறைமுகமாகத் திணிப்பதற்கு இந்த சதி வலையை மாநில அரசு பின்னுகிறதோ என நாங்கள் சந்தேகம் கொள்கிறோம்.

ஆதி திராவிட மாணவர்களுக்கு மட்டுமன்றி, பழங்குடி மாணவர்களுக்கும் அருகிலுள்ள பள்ளிகளாக அவை இருக்கின்றன. அவர்கள் தொலைதூரம் சென்று படிக்க இயலாத வசிப்பிட சூழ்நிலை உள்ளது. அதன்பொருட்டு அந்தந்த பகுதிகளில் பள்ளிகள் அமைக்கப்பட்டுள்ளன. இவையெல்லாம் இணைக்கப்பட்டால் அருகிலுள்ள பள்ளிகள் காணாமல் போகும் நிலை உருவாகும். அதுபோல, பட்டியல் சமூக மாணவர்களுக்கு அதே சமூகத்தைச் சேர்ந்தவர்களே ஆசிரியர்களாக நியமிக்கப்படுவார்கள். ஆனால், பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்குகின்ற பல பள்ளிகளில் சாதியப் பாகுபாடுகளைப் பார்க்கிறோம்.

இதனால் பட்டியல் சமூக மாணவர்கள் பாதிப்பிற்கு ஆளாகின்றனர். ஆனால், ஆதி திராவிடர் நலப் பள்ளிகளில் இதுபோன்ற பாகுபாடு இருக்காது. மேலும் அதன் ஆசிரியர்கள் தனது சமூக மாணவர்களின் மேம்பாட்டிற்கு அக்கறையோடு செயல்படுவார்கள். இவையெல்லாம் நாளை மறைந்து போகும் வாய்ப்பு ஏற்படும். ஆகையால் தமிழக அரசின் இந்த முயற்சியை, மக்கள் மேல் அக்கறையுள்ள அனைத்து அரசியல் கட்சிகளும் தலைவர்களும் எதிர்க்க வேண்டும்.

இந்த கோரிக்கைகளை வலியுறுத்தி கடந்த ஏப்.15-ஆம் தேதி மாபெரும் ஆர்ப்பாட்டத்தினை சென்னையில் மேற்கொண்டோம். இதில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். தங்களது எதிர்ப்பை வலுவாக பொதுவெளியில் பதிவு செய்துள்ளனர். இதற்குப் பிறகும் அரசு தனது முயற்சியை கைவிடவில்லையெனில் மேலும் பல கட்டப் போராட்டங்களை முன்னெடுக்கவும் நாங்கள் தயங்கமாட்டோம். நலத்துறை அனைத்தும் மேம்பட்ட தரத்துடன் இயங்குவதற்கும் முன்மாதிரிப் பள்ளிகளாகவும் தமிழ்நாடு அரசால் நடத்தப்பட வேண்டும்.

ஆதி திராவிடர் என்ற சொல்லை எடுத்துவிட்டால் சாதி ஒழிந்துவிடும் என்று சொல்லும் அரசு, திராவிடம் என்ற சொல்லை எவ்வாறு பார்க்கிறது? ஆதி திராவிடர் என்ற சொல்லை இவர்கள் இழிவாகப் பார்க்கிறார்கள் என்பதுதான் இதன் பொருள். வன்கொடுமைச் சட்டத்தின் கீழான நடவடிக்கைக்குரிய தவறான பார்வை இது. ஆகையால் தமிழக அரசு ஆதிதிராவிடர் மற்றும் அனைத்து நலப் பள்ளிகளின் நலன் கருதி, தொடர்ந்து அவை தனித்து இயங்குவதற்கு அனுமதிக்க வேண்டும். எக்காரணம் கொண்டும் பள்ளிக் கல்வித்துறையின் கீழ் இயங்குவதற்கு அனுமதிக்கக்கூடாது. இதற்கான உத்தரவாதத்தை தமிழ்நாடு முதலமைச்சர் வழங்க வேண்டும்” என்றார்.

இது குறித்து அகில இந்திய பார்வர்டு பிளாக் கட்சியின் முன்னாள் மாநிலத் தலைவர் வி.எஸ். நவமணி கூறுகையில், “தமிழ்நாடு அரசு ஆதி திராவிடர் நலத்துறை மற்றும் கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் இயங்குகின்ற பள்ளிகளையெல்லாம் ஒருங்கிணைத்து ஒரே குடையின் கீழ் கொண்டு வர நடவடிக்கை மேற்கொள்வதாக நிதியமைச்சர் அறிவித்துள்ளார். மேற்கண்ட ஒவ்வொரு துறையும் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்தவை. அந்தந்த சமுதாய மக்களின் நலன் கருதி மேற்கொள்ளப்பட்டவை. நிதியமைச்சர், தான் எப்போதும் பெருமையாகப் பேசக்கூடிய நீதிக்கட்சியின் காலத்திலிருந்து இந்தப் பள்ளிகளெல்லாம் அந்தந்த துறையின்கீழ் இயங்கிக் கொண்டிருக்கின்றன.

கள்ளர் சீரமைப்புத்துறை என்பது பிரிட்டிஷ் ஆட்சிக்காலத்தில் கொண்டு வரப்பட்டாலும், அன்று தமிழகத்தை ஆண்டு கொண்டிருந்தது நீதிக்கட்சிதான் என்பதை மறந்துவிடக்கூடாது. கைரேகைச் சட்டத்தை கடுமையாக நடைமுறைப்படுத்தியதும் அதனால் ஏற்பட்ட பின்விளைவுகளாலும் தான் கள்ளர் சீரமைப்புத்துறை உருவானதற்குக் காரணம். கடந்த 1920-ஆம் ஆண்டு பெருங்காமநல்லூரில் நடைபெற்ற பிரளயத்தின்போது அச்சட்டத்தை எதிர்த்த மக்கள் சுட்டுக் கொல்லப்பட்டதால் உலக அரங்கில் ஆங்கிலேய ஆட்சிக்கு மிகப் பெரிய தலைக்குனிவை ஏற்படுத்தியது.

அதிலிருந்து மீண்டு வருவதற்காக பிரிட்டிஷ் அரசு அந்த மக்களை சீர்திருத்தம் செய்வதாகச் சொல்லி சில திட்டங்களைக் கொண்டு வந்தது. அதன்படி மதுரை மாவட்டம், கீழக்குயில்குடியில் காவல் நிலையம், நீதிமன்றம், பள்ளிக்கூடமும், திருநெல்வேலி மாவட்டம் நாங்குநேரி தாலுகாவில் அமைந்துள்ள பூலம் என்ற கிராமத்தில் சிறை, பள்ளிக்கூடமும், நீதிமன்றமும் ஆங்கிலேயரால் ஏற்படுத்தப்பட்டன.

இந்தக் கொடுமைகளிலிருந்து தங்களை விடுவித்துக் கொள்ள வேண்டும் அல்லது பாதுகாத்துக் கொள்ள வேண்டும் என்பதற்காக சீர்மரபின மக்கள் கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் சேர்த்து அரசாங்கத்தை எதிர்த்து வழக்காடுவதற்காக நிதி சேர்த்து கள்ளர் பொதுநல நிதி என்ற ஒன்றை ஏற்படுத்தினார்கள். அந்த நிதியை ஒரு காலகட்டத்திற்குப் பிறகு காவல்துறையின் நிர்வாகத்திற்கே கொண்டு போய்ச் சேர்த்தார்கள் என்பது வேடிக்கையான முரண். அதற்குப் பிறகு 1952ஆம் ஆண்டு ராஜாஜி ஆட்சிக் காலத்தில் அதனை அரிஜன நலத்துறைக்குக் கொண்டு வந்து சேர்த்தார்கள்.

1956-ஆம் ஆண்டு காமராஜர் ஆட்சியில் அரிஜன இலாகாவின் ஒரு பகுதியாகச் சேர்க்கப்பட்டு, பிறகு தனியாக கள்ளர் சீரமைப்புத்துறை உருவாக்கப்பட்டது. அதற்கென்று தனி இயக்குநர் நியமனம் செய்யப்பட்டார். ஆக, அந்த நிதி என்பது சீர்மரபினராக இருக்கக்கூடிய, ரேகைச் சட்டத்தால் பாதிக்கப்பட்ட மக்கள் சிந்திய ரத்தமும் வேர்வையுமான பணமே தவிர, அரசாங்கம் கொடுத்த பணமல்ல. தனியார் பள்ளிகள், கல்லூரிகள் இயங்கும்போது, அதன் ஆரம்ப காலத்து செலவுகளெல்லாம் அந்த சமுதாய மக்களால் மேற்கொள்ளப்படுகின்றன. காலப்போக்கில் அரசாங்கம் அவற்றை தன்வயப்படுத்தி அரசு உதவி பெறும் பள்ளிகள், கல்லூரிகள் என்று நிர்வாகம் செய்யட்டு வருகிறது.

தற்போது கள்ளர் சீரமைப்புத்துறையின் கீழ் தமிழ்நாடு முழுவதும் 300 பள்ளிகளும், 250 கூட்டுறவு சங்கங்களும் இயங்கி வருகின்றன. தனி அதிகாரியின் மூலமாக இவை தொடர்ந்து இயங்கி வருகின்றன. இதில் நிர்வாகச் சிக்கல்கள் நிறைய இருக்கின்றன. இவற்றையெல்லாம் பொது அமைப்பின் கீழ் கொண்டு வருவதால் மேலும் சிக்கல் உருவாகும். சீரமைப்புத்துறையில் இருக்கக்கூடிய பள்ளிகளெல்லாம் பழைய மதுரை மாவட்டத்தில்தான் உள்ளன.

இதனால் அலைக்கழிப்புகளும், நிர்வாகச் செலவீனங்களும் அதிகரிக்கும். மக்களுக்கு வீணான சிரமங்களை ஏற்படுத்தும். எந்த செலவைக் குறைக்க வேண்டும் என்று இந்த நடவடிக்கையை மேற்கொள்கிறார்களோ அதற்கு மாறாக கூடுதல் செலவை ஏற்படுத்தும்.

அதனை உணராமல் இந்த முடிவை மேற்கொள்வது நன்றாக இருக்காது. எனவே, தமிழ்நாடு அரசு ஆதிதிராவிடர் நலத்துறை மற்றும் கள்ளர் சீரமைப்புத்துறைப் பள்ளிகளை வழக்கம்போல் தனித்தனியாக இயங்குவதற்கு அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.

ஒருங்கிணைப்பு முயற்சியை உடனடியாகக் கைவிட வேண்டும். அதிகாரப் பகிர்வு வேண்டும் என்று பேசிக் கொண்டிருக்கக்கூடிய மாநில அரசு, இங்கே உள்ள அதிகாரங்களை ஓரிடத்தில் குவிக்க முயற்சிப்பது கேலிக்குரியதாக உள்ளது. இந்த மக்களின் பிரச்னைகளை தீர்த்துக் கொள்ள மேற்காணும் துறைப்பள்ளிகள் அனைத்தும் தனித்தனியாக இயங்குவதுதான் சரியானதாக இருக்கும்” என்றார்.

இதையும் படிங்க: PTR TAPES: ஆடியோவுக்கு உதாரணத்துடன் விளக்கம் அளித்த அமைச்சர் பிடிஆர்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.