ETV Bharat / state

மதுரையையும் சென்னை போல் மாற்றிவிடக்கூடாது.. அனுமதியில்லா கட்டட வழக்கில் - எச்சரித்த மதுரை உயர் நீதிமன்றம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 12, 2023, 10:52 PM IST

Judgement to take action on unlicensed building in Madurai: மதுரை மாநகராட்சியில் சட்டவிரோதமாக இடங்களை ஆக்கிரமித்து வீடு கட்டியுள்ளவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தொடரப்பட்ட வழக்கை விசாரித்த நீதிபதி, நில ஆக்கிரமிப்புகளில் ஈடுபட்டு முறையற்ற கட்டிடங்களால் தற்போதைய சென்னையின் நிலை போல் மதுரையையும் மாற்றிவிடக்கூடாது என்றும், இதற்கு துணைபோகும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்துவைத்தார்.

மதுரையையும் சென்னைப் போல் மாற்றிவிடக்கூடாது - நீதிபதி எச்சரிக்கை
மதுரையையும் சென்னைப் போல் மாற்றிவிடக்கூடாது - நீதிபதி எச்சரிக்கை

மதுரை: மதுரையைச் சேர்ந்த மதன்குமார் உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், "மதுரை மாநகராட்சி உட்பட்ட விளாங்குடியில் சட்ட விரோதமாக இடத்தை ஆக்கிரமித்து சிலர் வீடு கட்டியுள்ளனர். ஆக்கிரமிப்பாளர் மீது நடவடிக்கை எடுக்க மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு அளித்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே, சட்ட விரோதமாக இடத்தை ஆக்கிரமித்துக் கட்டப்பட்டுள்ள கட்டிடத்தை அகற்ற அதிகாரிகளுக்கு உத்தரவிட வேண்டும்" என அவரது மனுவில் கோரிக்கை விடுத்திருந்தார்.

இந்த வழக்கு முன்னதாகவே விசாரணைக்கு வந்த போது, வழக்கு தாக்கல் செய்யப்பட்டு 5 வருடங்களாகியும், மதுரை மாநகராட்சி தரப்பிலிருந்து தற்போது வரை பதில் மனுத் தாக்கல் செய்யாததால் மதுரை மாநகராட்சி ஆணையாளரை நேரில் ஆஜராக நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், லட்சுமி நாராயணன் அமர்வில் இன்று (டிச.12) மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது மதுரை மாநகராட்சி ஆணையாளர் மதுபாலன் நேரில் ஆஜராகினார்.

அப்போது மாநகராட்சி ஆணையாளர் தரப்பில், உரிய அனுமதி இல்லாத கட்டுமானங்களுக்கு நோட்டீஸ் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும், இதுகுறித்து விரைவில் நடவடிக்கை எடுக்கப்படும் என தெரிவித்தார். இதனைப் பதிவு செய்த நீதிபதிகள், "மதுரையின் பல்வேறு பகுதிகளில் அனுமதியற்ற கட்டுமானங்கள் கட்டப்படுவதை அதிகாரிகள் ஆய்வு செய்வதே இல்லை. மதுரை மாநகரம் அனுமதியில்லாத கட்டிடங்களின் காடாக மாறி வருவது. இது பெரும் அச்சத்தை ஏற்படுத்துகிறது.

ஏற்கனவே பெங்களூர், சென்னை நகரங்கள் இதுபோன்ற சட்டவிரோத கட்டுமானங்களால் பாழாய் போய்விட்டது. அந்த வரிசையில் தற்போது மதுரையும் மாறி வருவது வேதனை அளிக்கிறது. தற்போதைய சென்னையின் நிலைமையைப் போல் மதுரையின் நிலைமையும் மாறிவிடக்கூடாது. அனுமதியற்ற கட்டுமானங்கள் மேற்கொள்வோர் மீது கிரிமினல் வழக்குப்பதிந்து நடவடிக்கை எடுங்கள். அப்போது தான் ஏழை மக்களையும், உரிய விதிகளைப் பின்பற்றுவோரையும் பாதுகாக்க முடியும்.

சட்டவிரோத கட்டுமான விவகாரத்தில் மாநகராட்சியுடன், காவல்துறை இணைந்து செயல்பட்டால் மட்டுமே ஆக்கிரமிப்புகளை அகற்ற முடியும். வெறும் அபராதம் விதிப்பதோடு அதிகாரிகள் விட்டுவிடக்கூடாது. உரிய அனுமதி இல்லாமல் கட்டுமான பணிகளைத் தொடர்ந்தால் கட்டிடத்தை இடித்து அகற்ற வேண்டும். அனுமதியற்ற கட்டுமானங்களால் நிம்மதியற்ற வாழ்க்கையை மக்கள் வாழ நேரிடுகிறது. இதையெல்லாம் அதிகாரிகள் வேடிக்கை பார்க்கலாம். நீதிமன்றம் தலையிடாமல் இருக்க முடியாது.

மதுரை மாநகராட்சி அதிகாரிகள் அந்தந்த பகுதிகளில் தினந்தோறும் ஆய்வு செய்து அனுமதியற்ற கட்டுமானங்களைக் கண்டறிந்து காவல்துறை மூலம் நடவடிக்கை எடுக்க வேண்டும். அனுமதியற்ற கட்டுமானங்களுக்கு அனுமதி அளிக்கும் அதிகாரிகள் மீது துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். இந்த உத்தரவுகளைத் தமிழ்நாடு அரசு ஊராட்சி, நகராட்சி மற்றும் அனைத்து நகர்ப்புற அமைப்புகளுக்கும் சுற்றறிக்கையாக அனுப்பப்பட்டு, உரிய உத்தரவுகளைப் பிறப்பிக்க வேண்டும்" என எச்சரிக்கை விடுத்து வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: விரைவில் திறப்புக்கு தயாரான கிளாம்பாக்கம் பேருந்து நிலையம்.. முதற்கட்டமாக 100 பேருந்துகள் சோதனை ஓட்டம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.