ETV Bharat / state

"வாரிசு அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மீது வன்மத்தை காட்டக்கூடாது" - அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 29, 2023, 5:05 PM IST

வாரிசு அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது, எந்த வன்மத்தையும் காட்டக்கூடாது என நீதிபதி எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

work order on the basis of succession
வாரிசு அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மீது வன்மத்தைக் காட்டக்கூடாது - அதிகாரிகளை எச்சரித்த நீதிபதி

மதுரை: கரூர் மாவட்டம் குளித்தலை பகுதியைச் சேர்ந்த அமிர்தவல்லி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் மனு ஒன்றை தாக்கல் செய்திருந்தார். அதில் அவர், தனது கணவர் கருப்பையா, கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழகத்தில் பணியாற்றி உயிரிழந்த நிலையில் தனது கணவருக்குச் சேர வேண்டிய பணப்பலன்கள் மற்றும் வாரிசு அடிப்படையில் பணி வழங்கக்கோரி உயர் நீதிமன்றம் மதுரைக் கிளையில் ஏற்கனவே மனுத்தாக்கல் செய்திருந்ததாக தெரிவித்திருந்தார்.

இந்த மனுவை விசாரித்த நீதிமன்றம், மனுதாரரின் கணவர் 427 நாள்கள் பணியாற்றி உள்ளார். எனவே கருப்பையாவை நிரந்தர பணியாளராகத்தான் கருத வேண்டும். ஆகவே அவருக்குச் சேர வேண்டிய பணப்பலன்களை வழங்கி வாரிசு அடிப்படையில் வேலை வழங்க 4 வாரக் காலத்தில் மனுதாரர் மனுவைப் பரிசீலித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டு வழக்கு முடித்து வைக்கப்பட்டது.

இதனைத் தொடர்ந்து நீதிமன்ற உத்தரவை அதிகாரிகள் நிறைவேற்றாததால் தற்போது நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்ததாகவும் தனது மனுவில் குறிப்பிட்டிருந்தார். இந்த நிலையில், ஏற்கனவே கடந்த 27ஆம் தேதி நடைபெற்ற விசாரணையின் போது இரண்டு நாள்களில் வாரிசு அடிப்படையில் பணி வழங்க நடவடிக்கை எடுக்க நீதிபதி உத்தரவிட்டு இருந்தார். இதன் தொடர்ச்சியாக இந்த மனு இன்று நீதிபதி பட்டு தேவானந்த் முன்பு மீண்டும் விசாரணைக்கு வந்தது.

அப்போது கும்பகோணம் அரசுப் போக்குவரத்துக் கழக நிர்வாக இயக்குநர் மோகன் மற்றும் பொதுமேலாளர் இளங்கோவன் ஆகியோர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜராகினர். அதனைத் தொடர்ந்து உயிரிழந்த பணியாளர் கருப்பையாவின் வாரிசுக்குத் தினக்கூலி அடிப்படையில் பணி வழங்குவதாகத் தெரிவித்தனர்.

இதனை ஏற்க மறுத்த நீதிபதி, உடனடியாக தற்பொழுது உயிரிழந்த போக்குவரத்துக் கழக பணியாளரின் வாரிசுக்கு நிரந்தர பணிக்கான ஆணை வழங்க வேண்டும் இல்லை என்றால் நீதிமன்றம் நடவடிக்கை மேற்கொள்ளும் என தெரிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து நிரந்தரப்பணி வழங்க ஒப்புக்கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்குகளில் வாரிசு அடிப்படையில் பணி ஆணை பெற்றவர்கள் மீது சம்மந்தப்பட்ட அதிகாரிகள் பழிவாங்கும் நடவடிக்கையில் ஈடுபடக்கூடாது. மேலும், எந்த வன்மத்தையும் காட்டக்கூடாது என எச்சரிக்கை விடுத்து நீதிமன்ற அவமதிப்பு வழக்கை முடித்து வைத்து உத்தரவிட்டார்.

இதையும் படிங்க: Bank Holidays October 2023 : அக்டோபரில் 14 நாட்கள் வங்கிகள் விடுமுறை.. காலண்டர்ல குறிச்சு வெச்சுக்கோங்க..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.