மதுரை: மேலூர் அருகேவுள்ள பதினெட்டான்குடியில், மதுரை கிழக்கு முன்னாள் சட்டப்பேரவை உறுப்பினர் தமிழரசனின் மகன் திவாகர் திருமண விழா நடைபெற்றது.
இதில், ஓ. பன்னீர்செல்வம், முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி, ஆர்.பி. உதயகுமார், செல்லூர் கே. ராஜு, பாஸ்கரன், வைகைச்செல்வன் உள்ளிட்ட கட்சித் தலைவர்கள் பங்கேற்றனர்.
அப்போது செய்தியாளரைச் சந்தித்த ஓபிஎஸ், “அதிமுகவைப் பொறுத்தவரை நீட் தேர்வை தொடர்ந்து எதிர்த்துவருகிறோம். நேற்றும் எதிர்த்தோம், இன்றும் எதிர்த்துவருகிறோம். நாளையும் எதிர்ப்போம்.
நீட் தேர்விலிருந்து தமிழ்நாட்டிற்கு விலக்கு அளிக்க வலியுறுத்தி, அதிமுக உறுதியாக எதிர்த்து வரும். நீட் தேர்வு தமிழ்நாட்டில் மிகப்பெரிய பாதிப்பை உண்டாக்கியுள்ளது.
நீட் தேர்வு என்பது திமுக அங்கம் வகித்த காங்கிரஸ் மத்திய கூட்டாட்சியில்தான் கொண்டுவரப்பட்டது. அதனால் இவ்வளவு பெரிய விளைவுகள் ஏற்பட்டுள்ளன. அதற்கு முழுக் காரணம் திமுகவும், காங்கிரசும்தான். மத்தியில் ஆண்ட காங்கிரஸ் ஆட்சியில்தான் நீட்டுக்கு வடிவம் கொடுக்கப்பட்டது என்பதுதான் உண்மை” என்றார்.
இதையும் படிங்க: நீட் தேர்வுக்கு எதிரான சட்ட நடவடிக்கைகளை ஆதரிப்போம் - ஓபிஎஸ்