ETV Bharat / state

“உசாரய்யா உசாரு”... மதுரையில் உலா வரும் 'குரங்கு குல்லா' திருடர்கள்!

author img

By

Published : Jun 12, 2023, 9:27 AM IST

மதுரையில் இரவு நேரத்தில் ‘குரங்கு குல்லா’ அணிந்து ஆயுதங்களோடு வீதிகளில் வலம் வரும் திருடர்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர்.

Madurai
மதுரையில் உலா வரும் 'குரங்கு குல்லா' திருடர்கள்

மதுரையில் உலா வரும் 'குரங்கு குல்லா' திருடர்கள்!

மதுரை: அண்மை காலமாக மதுரை மாநகரின் புறநகர் பகுதிகளில் சில மர்ம நபர்கள் ஆயுதங்களோடு குரங்கு குல்லா அணிந்து வீடு புகுந்து திருடி வருகின்றனர். இதனால் பொதுமக்கள் பெரிதும் பீதி அடைந்துள்ளனர்.

அதாவது, சிக்கந்தர் சாவடி, கோவில் பாப்பாகுடி, பொதும்பு உள்ளிட்ட பகுதிகள் அண்மை காலமாக பெரிதும் விரிவாக்கம் பெற்று குடியிருப்புகளால் நிறைந்து வருகின்றன. இங்கு சமீபத்தில் மட்டும் நூற்றுக்கணக்கில் வீடுகள் பெருகி மக்கள் குடியேறியுள்ளனர். தற்போது இந்த பகுதியில் கடந்த சில நாட்களாக குரங்கு குல்லா அணிந்த திருடர்கள் நடமாட்டம் அதிகம் உள்ளது என தகவல்கள் பரவி வந்ததுள்ளது.

அதாவது சுமார் 10 பேர் கொண்ட கும்பலாக உள்ள இவர்கள் 3 பேர் வீதமாக பிரிந்து இப்பகுதியில் உள்ள பல்வேறு தெருக்களில் திருட செல்கின்றனர். தீரன் அதிகாரம் ஒன்று படத்தில் வருவது போல, வெவ்வேறு பகுதிகளை குறி வைக்கும் இவர்கள் முதலில் கும்பலாகச் சென்று வெளியில் வீடுகளில் நோட்டமிடுகின்றனர்.

ஆளில்லாத வீடுகள் தவிர, ஆட்கள் குடியிருக்கும் வீடுகளுக்கு உள்ளேயும் இவர்கள் தைரியமாக புகுந்து விடுகின்றனர். மேலும் கையில் பட்டாகத்தி போன்ற கொலை ஆயுதங்களுடன் உலாவரும் இவர்கள், வீட்டுக்குள் உள்ளவரை தாக்கி கொள்ளை அடிக்கவும் வாய்ப்பு உள்ளதாக அப்பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் அச்சம் தெரிவிக்கின்றனர்.

அதைத் தொடர்ந்து, நேற்று கோவில் பாப்பாகுடி ஏ.ஆர்.சிட்டி பகுதியில் நுழைந்த ‘குரங்கு குல்லா’ கொள்ளையர்கள் அங்குள்ள வழக்கறிஞர் ஒருவரின் வீட்டில் கேட் ஏறி குதித்து உள்ளே சென்றுள்ளனர். அதன் பிறகு அங்கு சிசிடிவி கண்காணிப்பு கேமரா இருப்பதை தாமதமாக பார்த்த அந்த கொள்ளையர்கள் பிறகு அதனையும் அடித்து நொறுக்கி உள்ளனர்.

பின்னர் வீட்டிற்கு உள்ளே எகிரிக் குதித்து பூட்டை உடைத்து திருட முயற்சித்துள்ளனர். அப்போது சத்தம் கேட்டு விழித்த வீட்டின் உரிமையாளர் மாடி பால்கனியிலிருந்து சத்தம் போட்ட போது, அவர்கள் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர் எனக் கூறப்படுகிறது. மேலும், கோபத்தில் அவர் மீது கற்களையும் வீசிச் சென்றுள்ளனர்.

இந்த சம்பவம் நிகழ்ந்த ஒரு மணி நேரத்திற்குள், அதே பகுதியில் மற்றொரு வீட்டில் இருந்த மூதாட்டியிடமும் தங்க செயினை பறித்துச் சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அப்பகுதியில் நேற்று முந்தினம் (ஜூன்.10) ஓர் இரவில் மட்டுமே 4 வீடுகளில் இதே போல் கொள்ளை முயற்சி நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. ஒருவேலை கொள்ளையடிக்கும் போது பிடிபட்டால் தப்பிக்க உடம்பில் எண்ணெய் மற்றும் மண்சேறு பூசியபடி இவர்கள் உலா வருகின்றனர்.

மேலும் கைகளில் கிளவுஸ், தலையில் குரங்கு குல்லா, டவுசர் அணிந்தபடி உலா வருகின்றனர். மதுரை புறநகர் பகுதி வாசிகள் இந்த 'குரங்கு குல்லா' திருடர்களால் பீதியில் இருந்த நிலையில், தற்போது இந்த வீடியோ வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்நிலையில் போலீசார் தனிப்படை அமைத்து அந்த மர்ம கொள்ளையர்களைக் கண்டுபிடித்து ஏதேனும் பெரிய அசம்பாவிதங்கள் நடக்கும் முன்பாக தடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதையும் படிங்க: Locanto-வில் Call Girl, Call Boy எனக்கூறி பல லட்சம் அபேஸ்; மும்பையில் பதுங்கிய 7 பேரை கோவை சைபர் கிரைம் கைது செய்தது எப்படி?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.