ETV Bharat / state

'திமுக ED-ஐ பார்த்து இடி விழுந்தது போல் அஞ்சுகின்றனர்' - ஓ.எஸ். மணியன் விமர்சனம்!

author img

By

Published : Jul 30, 2023, 2:34 PM IST

Updated : Jul 30, 2023, 2:47 PM IST

மயிலாடுதுறை மாவட்டம், சீர்காழியில் திமுக, மதிமுக, பாமக, உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 800க்கும் மேற்பட்டவர்கள் முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் முன்னிலையில் அஇஅதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது.

மயிலாடுதுறையில் நடைபெற்று மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா
மயிலாடுதுறையில் நடைபெற்று மாற்றுக் கட்சியினர் அதிமுகவில் இணையும் விழா

செய்தியாளர்களைச் சந்தித்த ஓ.எஸ்.மணியன்

மயிலாடுதுறை: சீர்காழி சட்டநாதபுரத்தில் திமுக, மதிமுக, பாமக உள்ளிட்ட மாற்றுக் கட்சிகளில் இருந்து விலகி 800க்கும் மேற்பட்டவர்கள் அஇஅதிமுகவில் இணையும் விழா நடைபெற்றது. அதிமுக மாவட்டச் செயலாளரும் பூம்புகார் தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான எஸ்.பவுன்ராஜ் தலைமையில் நடைபெற்ற விழாவில் முன்னாள் கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சரும் வேதாரண்யம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஓ.எஸ். மணியன் கலந்து கொண்டனர்.

அதனைத் தொடர்ந்து மாற்று கட்சியிலிருந்து விலகி வந்தவர்களை சால்வை அணிவித்து அதிமுக கட்சிக்கு வரவேற்றார். முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள் மற்றும் மதிமுகவிலிருந்து அண்மையில் விலகி எடப்பாடி பழனிசாமி முன்னிலையில் அதிமுகவில் இணைந்த முன்னாள் மதிமுக மாவட்ட செயலாளர் மார்கோனி ஏற்பாட்டில் நடந்த இந்த விழாவில் பங்கேற்ற முன்னாள் அமைச்சர் ஓ.எஸ். மணியன் செய்தியாளர்களிடம் பேசினார்.

அப்போது பேசிய அவர், “கடைமடைப் பகுதிகளில் குறுவைப் பயிர்களின் நிலை மிகவும் மோசமாக உள்ளது. கடைமடைப் பகுதிக்கு தண்ணீர் வந்து சேராததால் நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்த குறுவை பயிர்கள் செத்து மடியும் நிலை ஏற்பட்டுள்ளது. ஆனால், அரசு இதனை காக்க எந்தவித நடவடிக்கையும் எடுத்ததாக தெரியவில்லை. அதேபோல் குடிநீர் பற்றாக்குறையும் நிலவுகிறது. ஆறு நாட்களுக்கு ஒருமுறை, 8 நாட்களுக்கு ஒருமுறை சில இடங்களில் மாதக் கணக்கில் குடிநீர் வராத நிலை உள்ளது.

இதனைக் களைய வேண்டிய அரசு மெத்தனமாக உள்ளது. குறுவை நேரடி மற்றும் நடவுப் பயிர்கள் 75% அழிந்துவிட்டது. மீதமுள்ள பயிர்களைக் காப்பாற்ற முறை வைக்காமல் பாசனத்திற்கு அரசு போதிய தண்ணீர் வழங்க வேண்டும். இதில் அரசு கவனம் செலுத்துவதாக தெரியவில்லை. குறுவை பயிர்களில் இரண்டு வகையில் விவசாயிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். நேரடி விதைப்பு செய்த குறுவை முளைக்காத நிலையில் அதனை பிடுங்கி நடவு செய்த பயிர்களும் தண்ணீர் இன்றி செத்து மடிந்து விட்டது.

முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி ஆட்சிக்காலத்தில் குறுவை பயிருக்கு நஷ்ட ஈடாக காப்பீட்டு திட்டம் இருந்தது. ஆனால் திமுக ஆட்சியில் குறுவைக்கு காப்பீடு திட்டம் இல்லாத நிலை உள்ளது. குருவை காப்பீட்டை அமல்படுத்துவதில் அரசு தவறிவிட்டது. என்.எல்.சி விவகாரத்தில் கதிர்கள் வந்த பயிர்கள் 10, 15 தினங்களில் அறுவடைக்கு தயாராக இருந்தது. என்.எல்.சி வாய்க்கால் வெட்டி மண்ணை போட்டு நெல்மணி முளைத்த வயல்களை சேதப்படுத்தியது.

கொடூரமான தாக்குதல் ஆகும் பிள்ளைகளை இழந்து தவிப்பது போன்று பயிர்களை இழந்து விவசாயிகள் கொடுமையான செயலாகும். இதனை அரசு தவிர்த்து இருக்க வேண்டும். ஆனால் அதை தடுக்காமல் அதற்கு அரசு துணை போனது தவறான செயலாகும். ஜூன் 12 மேட்டூரில் இருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பதை சாதனையாக நினைத்து திமுக அரசு தண்ணீர் திறந்து விட்டது.

ஆனால் தண்ணீர் திறப்பிற்கும் முன்பு நிபுணர்களை அழைத்து பருவமழை பொழிவு எவ்வாறு இருக்கும் என ஆராயாமல் தண்ணீர் திறந்ததால் தற்போது பாசன வாய்க்கால்களிலும் தண்ணீர் இல்லை, மேட்டூரிலும் தண்ணீர் இல்லாத நிலை உள்ளது. இதனால் கடைமடை பகுதிகளில் பயிர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளது. இதனை ஆய்வு செய்ய அரசு தவறிவிட்டது. என்.எல்.சி நிறுவனம் அறுவடை முடியும் வரை வாய்க்கால் அமைக்கும் பணியை நிறுத்தி வைக்க நடவடிக்கை எடுத்திருக்க வேண்டும்” என்றார்.

திமுக அரசு எதிர்க்கட்சியான அதிமுகவே விமர்சிப்பதை விட பாஜகவைதான் அதிக அளவு விமர்சிக்கிறது என்ற கேள்விக்கு திமுக இடிஐ பார்த்து இடி விழுந்தால் போல் அஞ்சுகின்றனர். அதனால் தான் பாஜகவை விமர்சனம் செய்வதாக தெரிவித்தார். இதில் அதிமுக மாவட்ட அவை தலைவரும் சீர்காழி தொகுதி முன்னாள் எம்எல்ஏவுமான பி.வி பாரதி, மாவட்ட மகளிரணி செயலாளரும் சீர்காழி தொகுதி முன்னாள் சட்டமன்ற உறுப்பினருமான மா.சக்தி, சீர்காழி நகர செயலாளர் வினோத் உள்ளிட்ட ஏராளமான அதிமுகவினர் உடன் இருந்தனர்.

இதையும் படிங்க: இந்தியாவிலேயே ஊழல் மிகுந்த கட்சி திமுக;அமித்ஷா கருத்து ஏற்புடையதல்ல - துரைமுருகன் குற்றச்சாட்டு!

Last Updated : Jul 30, 2023, 2:47 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.