ETV Bharat / state

கரூரில் தரமற்ற தார் சாலை சர்ச்சை: ஆட்சியர் பிரபு சங்கர் விளக்கம் அளித்த வீடியோ!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 9, 2023, 7:34 PM IST

karur road issue: கடவூர் அருகே தரமற்ற தார் சாலை அமைக்கப்பட்டதாக ஏற்பட்ட சர்ச்சையில் தார் சாலையை ஆய்வு செய்த கரூர் மாவட்ட ஆட்சியர், சாலை தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல்துறை மூலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.

கரூர் தார் சாலை சர்ச்சை
கரூர் தார் சாலை சர்ச்சை

கரூர் தார் சாலை சர்ச்சை

கரூர்: கடவூர் ஊராட்சி ஒன்றியம், முதலமைச்சரின் கிராம சாலைகள் மேம்பாட்டுத் திட்டத்தின் (MGSMT) கீழ் தரகம்பட்டி முதல் வீரசிங்கம்பட்டி வரை உள்ள தார்சாலையை புனரமைத்தல் பணிகள் நடைபெற்று முடிந்தன. இந்த பணிகள் நிறைவு பெற்ற இடத்தில் தார் சாலை தரமற்ற முறையில் அமைக்கப்பட்டுள்ளதாக அப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் வீடியோவாக வெளியிட்டு அது சமூக வலைதளங்களில் வைரலானது.

இதனைத் தொடர்ந்து இந்த விவகாரம் அனைத்து ஊடகங்களிலும் செய்தி வெளியாகி உள்ள நிலையில், அக்டோபர் 8ஆம் தேதி மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் சம்பவ இடத்திற்கு நேரில் சென்று அதிகாரிகளுடன் ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின் போது திட்ட இயக்குநர், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமை, வாணி ஈஸ்வரி, கடவூர் ஊராட்சி ஒன்றிய உதவிப் பொறியர், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், ஒப்பந்ததாரர் மற்றும் வீரசிங்கம்பட்டி ஊர் பொதுமக்கள் ஆகியோர் உடன் இருந்தனர்.

ஆய்வு குறித்து மாவட்ட ஆட்சியர் பிரபு சங்கர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ”தார் சாலை புனரமைத்தல் பணிகள் மேற்கொள்ள செயல்முறைகளில் நிர்வாக அனுமதி வழங்கப்பட்டு, ஒப்பந்தப் புள்ளிகள் கோரப்பட்டு வரப்பெற்ற ஒப்பந்தப்புள்ளிகளில் குறைந்த விலைப்புள்ளி அளித்த வையம்பட்டியை சேர்ந்த செல்லம்மாள் எண்டர்பிரைசஸ் என்ற நிறுவனத்திற்கு செயல்முறைகளின் படி, வேலை உத்தரவு வழங்கப்பட்டது.

மேற்படி வேலை உத்தரவு வழங்கப்பட்டதைத் தொடர்ந்து பேட்ச் ஒர்க் முடித்து அக்டோபர் 6ஆம் தேதி காலை 10.00 மணி முதல் மாலை 6.00 மணி வரை 1050 மீட்டர் மட்டும் தார்சாலை போடப்பட்டது. தார் சாலை போடப்பட்டு முழுமையாக வேலைகள் முடிய 48 மணி நேரம் முதல் 72 மணி நேரம் வரை ஆகும். இந்நிலையில், வீரசிங்கம்பட்டி குக்கிராமத்தில் ஈஸ்வரி என்பவரது வீட்டின் அருகில் இறுதியாக தார்சாலை மாலை 6.00 மணிக்கு முடிக்கப்பட்ட இடத்தில் அந்த பகுதியை சேர்ந்த சிலர் தார்சாலையை சேதப்படுத்தியுள்ளனர்.

இதுகுறித்து விசாரித்த வகையில் தார் சாலை அமைப்பதற்கு கோரிய இரண்டு ஒப்பந்ததாரர்களுக்கு இடையே ஏற்பட்ட பிரச்சனையால் சமூக ஊடகங்கள் மற்றும் வலைதளங்களில் தவறான வீடியோக்களை பதிவிட்டு உண்மைக்கு புறம்பான அதாவது தார் சாலை தரம் இன்றி இருப்பதாக தவறான கருத்துக்களை பரப்பி மாவட்ட நிர்வாகத்திற்கும், அரசிற்கும் அவப்பெயரை ஏற்படுத்தினர்.

சாலையின் தரம் குறித்து ஆய்வு செய்திட போடப்பட்ட சாலையில் சேதப்படுத்திய இடத்திற்கு அருகில், நீளம், அகலம் 10 செ.மீ., 10 செ.மீ., மற்றும் ஆழம் 3.0 செ.மீ., என்ற அளவில் வெட்டி எடுக்கப்பட்ட போது ஆழம், 3.5 செ.மீ., இருப்பது தெரியவந்தது. இதன்படி கூடுதலாக தார் சாலையின் கனம் 0.5 செ.மீ., இருந்தது தெரியவந்தது. வெட்டி எடுக்கப்பட்ட தார் சாலையின் மூலப் பொருட்கள் (தார் மற்றும் ஜல்லி) வெட்டி எடுத்து பயன்படுத்தப்பட்ட தாரின் அளவு மற்றும் ஜல்லி ஆகியவற்றின் அளவு குறித்து பரிசோதனை செய்யப்பட்டதில் 5.4% தார் இருக்க வேண்டிய இடத்தில் 5.5% இருந்தது ஆய்வில் தெரிய வந்தது.

இச்சாலையின் தரம் மேற்படி மூலப்பொருட்கள் தர ஆய்வு செய்யப்பட்டதின் அடிப்படையில், சாலை தரமாக இருப்பது உறுதி செய்யப்பட்டது. அரசு பொது சொத்துகளை சேதப்படுத்திய நபர்கள் மீது காவல்துறை முலம் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்” என தெரிவித்துள்ளார். கரூர் மாவட்ட ஆட்சியரின் அறிக்கை குறித்து பிரபல யூடியூபர் சவுக்கு சங்கர், தனது எக்ஸ் பக்கத்தில், ”தரமற்ற சாலை குறித்து சமூகவலைதளத்தில் அம்பலப்படுத்தியவர்கள் மீது சட்டப்பூர்வமான நடவடிக்கை எடுக்கப்படும் என மாவட்ட ஆட்சியர் கூறியிருக்கிறார். தைரியம் இருந்தால் எடுத்து தான் பாருங்களேன்” என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: கரூரில் அள்ள அள்ள கையில் வரும் தார் சாலை.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.