ETV Bharat / state

Karur ED Raid: கரூரில் அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை சோதனை!

author img

By

Published : Jun 13, 2023, 11:16 AM IST

கரூரில் உள்ள அமைச்சர் செந்தில் பாலாஜி வீடு மற்றும் அவரது சகோதரரின் வீட்டில் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனை நடத்தி வருகின்றனர்.

Senthil Balaji house raided by the enforcement department
செந்தில் பாலாஜி வீட்டில் தொடரும் அமலாக்க துறை சோதனை!

கரூர்: மின்சாரம் மற்றும் மதுவிலக்கு ஆயத்தீர்வை துறை அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமானவர்களின் வீடுகள் மற்றும் அலுவலகங்களில் வருமான வரித்துறை அதிகாரிகள் கடந்த மே 26ஆம் தேதியிலிருந்து ஜூன் 2ம் தேதி வரை 8 நாட்கள் அதிரடி சோதனை நடத்தினர். இதில் பல்வேறு ஆவணங்கள் கைப்பற்றப்பட்டதாக தகவல் வெளியானது.

குறிப்பாக கரூரில் மட்டும் அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு நெருக்கமான துணை மேயர் தாரணி சரவணன், கொங்கு மெஸ் சுப்பிரமணி, அமைச்சரின் சகோதரர் அசோக்குமார், நெடுஞ்சாலைத்துறை சாலை ஒப்பந்ததாரர் சங்கர் உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட இடங்களில் சோதனையை நடத்தினர்.

அதுமட்டுமின்றி, அமைச்சருக்கு நெருக்கமானவர்களின் குடும்பத்தினர், அவர்களுக்கு நெருங்கிய நண்பர்கள் ஆகியோர்களின் வங்கிக் கணக்கு விவரங்கள், முதலீடுகள், கடந்த இரண்டு ஆண்டுகளில் அவர்கள் புதிதாக துவங்கி உள்ள தொழில் பற்றிய விபரங்கள் போன்ற அனைத்தும் விசாரணைக்கு உள்ளானது.

மேலும், கணக்கில் காட்டாமல் முதலீடுகள் செய்யப்பட்டுள்ளது குறித்தும் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இதனிடையே திமுக ஆதரவாளர்கள் சோதனை செய்ய சென்ற வருமான வரித்துறை அதிகாரிகளை சோதனை மேற்கொள்ளவிடாமல் தடுத்து, அவர்கள் மீது சிலர் தாக்குதலில் ஈடுபட்டதாக கூறப்பட்ட தகவல் தமிழகம் முழுவதும் பெரும் சர்ச்சைக்குள்ளானது. எதிர்க்கட்சிகள் மற்றும் பல அரசியல் தலைவர்கள் இச்செயலுக்கு தங்களின் கண்டனங்களை தெரிவித்தனர்.

இதையும் படிங்க: மீண்டும் தலைத்தூக்கிய அதிமுக - பாஜக மோதல்.. கூட்டணியை முறிக்க திட்டமா?

இந்நிலையில், தற்போது கரூர் மண்மங்கலம் அருகே உள்ள ராமேஸ்வரபட்டியில், அமைச்சர் செந்தில் பாலாஜி வீட்டில் அமலாக்கத்துறை(Enforcement Directorate) அதிகாரிகள் பத்துக்கும் மேற்பட்டோர் இன்று (ஜூன் 13) காலை 9 மணி அளவில் திடீர் சோதனையை துவக்கி உள்ளனர்.

மேலும், அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் வீடு அமைந்துள்ள ராமகிருஷ்ணபுரத்திலும், அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையில் ஈடுபட்டனர். இதே போல கரூர் வெங்கமேடு அடுத்த கருப்பணசாமி கோயில் தெருவில் அமைந்துள்ள, சண்முக செட்டியார் வீட்டிலும் அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர்.

இவ்வாறு, கரூர் மாவட்டத்தில் காலை 9 மணி அளவில் இந்த மூன்று இடங்களிலும் அமலாக்கத்துறை அதிகாரிகள் திடீர் சோதனையை துவக்கியது பல்வேறு கேள்விகளையும், பரபரப்பை ஏற்படுத்தியது. முன்னதாக உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முந்தினம் சென்னை வந்தபோது மின்தடை ஏற்பட்டதை தொடர்பு படுத்தி செந்தில் பாலாஜி ஆதரவாளர்கள் பலரும் இணையத்தில் கருத்து பதிவிட்டு வருவது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 'இரட்டைக்குழல் துப்பாக்கியாக அதிமுக - அமமுக செயல்படும்' - வைத்திலிங்கம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.