ETV Bharat / state

கரூரில் சேவல் கட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு - ஏமாற்றத்தில் போட்டியாளர்கள்

author img

By

Published : Jan 15, 2023, 6:56 AM IST

கரூர் பூலாம்வலசு பகுதியில் சேவல் கட்டு நடத்துவதற்காக ஆடுகளத்தை தயார் செய்துவைத்திருந்த நிலையில், அனுமதி மறுக்கப்பட்டதால் போட்டியாளர்கள் ஏமாற்றமடைந்தனர்.

Etv Bharat
Etv Bharat

சேவல் கட்டு போட்டி நடத்த அனுமதி மறுப்பு

கரூர் அருகே உள்ள அரவக்குறிச்சி பகுதியில் தைப்பொங்கல் திருநாளில், புகழ்பெற்ற பூலாம்பாடி சேவல் கட்டு போட்டி நடப்பது வழக்கம். தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் நாட்டு சேவல்கள் வளர்ப்போர் இந்த போட்டிகளில் கலந்துகொள்வர். அப்படி மூன்று நாட்கள் நடைபெறும் இந்த போட்டியில் சுமார் 2 லட்சம் பேர் கலந்து கொள்வார்கள்.

ஆனால், நடப்பு ஆண்டில் சேவல் கட்டு போட்டி நடத்த நீதிமன்ற தடை விதித்திருப்பதால் காவல் துறை சேவல் கட்டு நடத்த அனுமதி மறுத்திருந்தது. இந்த நிலையில், விழா குழுவினர் மூன்று நாட்களுக்கு போட்டிகளை நடத்த தயாராகி அனைத்து பகுதிகளுக்கும் அழைப்பிதழ் அனுப்பி இருந்தனர்.

தமிழ்நாட்டின் பிற பகுதிகளில் இருந்து சேவல் கட்டு போட்டியில் கலந்து கொள்ள ஏராளமானோர் அரவக்குறிச்சி அருகே உள்ள பூலாம்வலசு பகுதியில் கூடினர். ஆனால், காவல் துறை அனுமதி மறுத்திருப்பதால் போட்டிகள் நடைபெறாது என அறிவிக்கப்பட்டது. இதனால், ஏமாற்றத்துடன் காத்திருந்தனர். இந்த நிலையில் கரூர் மாவட்ட கூடுதல் காவல் கண்காணிப்பாளர் கீதாஞ்சலி தலைமையிலான காவல் துறையினர் சேவல் கட்டு போட்டிகளில் கலந்து கொள்ள வந்தவர்களை விரட்டி அடித்தனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இது குறித்து ஈடிவி பாரத் செய்தி ஊடகத்திற்கு சேவல் கட்டு விழாவில் கலந்து கொள்ள வந்தவர்கள் அளித்த பேட்டியில், “தமிழ்நாடு முழுவதும் தமிழர் திருநாள் தைப்பொங்கல் விமர்சியாக தொடங்கியுள்ள நிலையில் ஜல்லிக்கட்டு போட்டிகள் நடத்துவதற்கு அந்தந்த பகுதிகளில் அரசு உரிய அனுமதி அளித்து விழா ஏற்பாடுகள் நடைபெற்று வருகிறது. முன்னதாக தைப்பொங்கல் திருநாள் முதல் நாள் கரூர் மாவட்டத்தில் உள்ள பூலாம்வலசு பகுதியில் நடைபெறும் சேவல் கட்டு போட்டி நடத்த அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால் ஏமாற்றத்துடன் திரும்பி செல்கிறோம்” என்றனர்.

தொடர்ந்து, கேரளா மாநிலம் பாலக்கோடு பகுதியில் இருந்து வந்திருந்த இளைஞர்கள் இருவர் கூறுகையில், “அதிகாலை 4 மணிக்கு கேரளாவிலிருந்து புறப்பட்டு விழா நடைபெறும் இடத்துக்கு மதியம் 2 மணிக்கு வந்து சேர்ந்தோம். தற்போது சேவல் கட்டு போட்டிகள் நடைபெறவில்லை என கூறுவது ஏமாற்றமளிக்கிறது. பாரம்பரிய முறையில் நடைபெறும் நாட்டு சேவல் கட்டு போட்டிகளை இனிவரும் ஆண்டுகளில் நடத்த அனுமதி அளிக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர்.

இது குறித்து பூலாம்வலசு விழா குழுவினர் கூறுகையில், “தமிழர்களின் பாரம்பரிய விழாவில் தைப்பொங்கல் திருநாளில் நாட்டு வகை சேவல்களை அறியாமல் காப்பதற்காக ஒவ்வொரு ஆண்டும் சேவல் கற்று நடத்தப்பட்டு வருகிறது. அதன்படி, விழாவுக்கான ஏற்பாடுகள் மேற்கொள்வதற்கு ஊர் பொதுமக்கள் சார்பில் லட்சக்கணக்கில் செலவு செய்து மைதானம் தயார் செய்யப்பட்டுள்ளது.

அரசு உரிய கட்டுப்பாடுகளுடன் நடத்த மாவட்ட நிர்வாகம் காவல் துறை அனுமதி வழங்கி, அடுத்த இரண்டு (ஜன15, 16) நாட்களுக்கு போட்டிகள் நடத்த அனுமதிக்க வேண்டும்” என தெரிவித்தனர். ஆடுகளம் தயாராக இருந்த போதும், ஆடுகளத்தில் போட்டியில் கலந்து கொள்ள சேவல்கள் தயாராக இருந்த போதும் ,அனுமதி இல்லாத காரணத்தினால் ஏமாற்றத்துடன் பூலாம்வலசு சேவல்கட்டு போட்டியில் கலந்து கொள்ள ஆயிரக்கணக்கான சேவல்கள் காத்து கிடக்கின்றன.

இதையும் படிங்க: உலகப்புகழ் அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு; பாதுகாப்புப் பணியில் 3,000 போலீசார்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.