ETV Bharat / state

திமுகவுக்கு வாக்களித்த அதிமுக கவுன்சிலர்.. கரூர் தேர்தலில் திடீர் மாற்றம்!

author img

By

Published : Dec 24, 2022, 9:26 PM IST

கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தல் போட்டியில் “திமுக வேட்பாளருக்கு மாறி வாக்களித்த அதிமுக மாவட்ட குழு உறுப்பினர் யார்“ என்பது குறித்து அதிமுகவினரிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

திமுக-வுக்கு மாறி வாக்களித்த அதிமுக கவுன்சிலர்- அதிமுகவினரிடம் குழப்பம்!
திமுக-வுக்கு மாறி வாக்களித்த அதிமுக கவுன்சிலர்- அதிமுகவினரிடம் குழப்பம்!

கரூர்: கரூர் மாவட்ட ஊராட்சிக் குழு துணைத் தலைவர் தேர்தல் ஐந்து முறை ஒத்திவைக்கப்பட்டு 6வது முறையாகக் கடந்த டிச. 19-ம் தேதி மதியம் 2.30 மணியளவில் நடைபெற்றது. கரூர் மாவட்ட ஊராட்சிக் குழுவில் மொத்தம் உள்ள 12 மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்களில் சம பலத்தில் அதிமுக, திமுக தலா 6 உறுப்பினர்கள் எண்ணிக்கை பலத்தில் உள்ளனர்.

இந்நிலையில் தேர்தல் நடைபெறுவதற்கு முந்தைய தினம் அதிமுக கரூர் மாவட்டச் செயலாளர் முன்னாள் போக்குவரத்துத் துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் அதிமுகவைச் சேர்ந்த மாவட்ட ஊராட்சி குழு உறுப்பினர்கள் 6 பேரைத் திண்டுக்கல்லில் உள்ள தனியார் விடுதியில் தங்க வைத்து இருந்தார்.

இதனால் அதிமுக உறுப்பினர்கள் வருகை தந்தால் மட்டுமே தேர்தல் நடத்தப் போதையை எண்ணிக்கை இருக்கும் என்ற நிலை உருவானது. ஏற்கனவே 5 முறை தேர்தல் ஒத்திவைக்கப்பட்டதற்கு, போதிய உறுப்பினர்கள் மறைமுக தேர்தலில் பங்கேற்காத நிலையில் டிச.19-ம் தேதி நடைபெற்ற மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தல் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி இருந்தது.

மேலும் தேர்தலில் முறைகேடு நடைபெறக்கூடாது என்பதற்காக அதிமுக தரப்பில், சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்குத் தொடுக்கப்பட்டு, தேர்தல் முடிவுகளை நீதிமன்றம் மூலமே வெளியிட வேண்டும் என உத்தரவு பெறப்பட்டது.

இதனை அடுத்துத் தேர்தல் நாளன்று அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திண்டுக்கல்லிலிருந்து கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் நோக்கி தேசிய நெடுஞ்சாலையில் வந்து கொண்டிருந்தபோது, அவருடன் வந்த கரூர் மாவட்ட ஊராட்சி குழு அதிமுக உறுப்பினர் திரு.வி.க மர்ம நபர்களால் கடத்தப்பட்டதாகப் புகார் அளிக்கப்பட்டது.

இந்நிலையில் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே நூற்றுக்கணக்கான போலீசார் பாதுகாப்புக்காக நிறுத்தப்பட்ட நிலையில், மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தலை நடத்த விடாமல் அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கர் சதி செய்வதாகக் கூறி திமுகவினர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன கோஷங்களை எழுப்பினர்.

அப்பொழுது அதிமுகவினருக்கும், திமுகவினருக்கும் இடையே கண்டன கோஷங்களை எழுப்பியதால் கலவரம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது. இரு தரப்பும் மாறி மாறி செருப்புகள் வீசிக்கொண்டதில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்நிலையில் கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் தலையிட்டு இரு தரப்பினரையும் சமாதானப்படுத்தி, தேர்தல் நடத்துவதற்கு ஒத்துழைப்பு அளிக்கக் கேட்டுக்கொண்டார்.இதனால் தேர்தல் அமைதியாக நடைபெற்று முடிந்தது.

இதனைத் தொடர்ந்து டிசம்பர் 22ஆம் தேதி சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் தேர்தல் நடத்தும் அலுவலரும் கரூர் மாவட்ட ஆட்சியருமான பிரபு சங்கர் வாக்குப்பதிவு முடிவுகளை நீதிமன்றத்தில் சமர்ப்பித்தார்.

அதன்படி முடிவுகளை வெளியிட நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்ததை அடுத்து, மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தலில் திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் 7 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளதாகவும் அதிமுக வேட்பாளர் ரமேஷ் 4 வாக்குகள் பெற்றுள்ளதாகவும் அறிவித்துள்ளார்.

கரூரில் எதிர்பார்ப்புகளுக்கு இடையே நடைபெற்ற கரூர் மாவட்ட ஊராட்சி தலைவர் துணைத் தேர்தலில் திமுக வெற்றி பெற்றுள்ளதால், அதிமுக தரப்பு கரூர் மாவட்ட ஊராட்சி குழு துணைத் தலைவர் தேர்தலின் போது திமுகவினர் அராஜகத்தில் ஈடுபட்டதாகக் கூறி நவம்பர் 29ஆம் தேதி போராட்டம் நடத்த இருப்பதாக எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.

கரூர் மாவட்ட ஊராட்சி துணைத் தலைவர் தேர்தலில் வாக்களித்த 6 திமுக உறுப்பினர்கள் தவிர, அதிமுகவைச் சேர்ந்த 4 பேரில் ஒருவர் திமுக வேட்பாளருக்கு மாறி வாக்களித்ததால், மொத்தம் 7 வாக்குகள் பெற்று திமுக வேட்பாளர் தேன்மொழி தியாகராஜன் வெற்றி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் அதிமுக மாவட்ட குழு உறுப்பினர் யார்? என்பது குறித்து அதிமுகவினரிடையே பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையும் படிங்க:ஸ்ரீகிருஷ்ண ஜென்ம பூமி-இத்கா மசூதி வழக்கில் நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு...

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.