ETV Bharat / state

மாயமான மீனவர் குடும்பங்களுக்கு நிவாரணம் வழங்கக்கோரி ஆட்சியரிடம் மனு

author img

By

Published : Jul 29, 2020, 5:59 PM IST

கன்னியாகுமரி: தேங்காப்பட்டணம் துறைமுகத்தில் அலைகளின் சீற்றம் காரணமாக மாயமான 2 மீனவர் குடும்பங்களுக்கு உடனடியாக நிவாரணம் வழங்க கோரி மக்கள் நீதி மையம் சார்பில் ஆட்சியரிடம் மனு அளிக்கப்பட்டது.

மக்கள் நீதி மையம் கட்சியினர்
மக்கள் நீதி மையம் கட்சியினர்

கன்னியாகுமரி மாவட்ட மக்கள் நீதி மையம் சார்பில் அக்கட்சியை சேர்ந்த ஏராளமானோர் மாவட்ட ஆட்சியர் அலுவலகம் வந்து ஆட்சியரிடம் புகார் மனு ஒன்றை அளித்தனர். அந்த மனுவில், “தேங்காப்பட்டணம் துறைமுகம் கட்டப்பட்டதன் நோக்கம் கடல் சீற்றத்தால் மீனவர்கள் பாதிக்கப்படாமல் மீன்பிடிப்பதற்காக மட்டுமே. ஆனால் திட்டமிடப்படாமல் எந்தவித ஆய்வுப் பணிகளை மேற்கொள்ளாமல் இது கட்டப்பட்டது.
இதனால் இந்த துறைமுகத்தில் மணல்மேடுகள் எழுந்து அலையின் சீற்றம் அதிகரித்து காணப்படுவதால் மீனவர்களுக்கு கடும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுவரை 500க்கும் மேற்பட்ட படகுகள், இயந்திரங்கள் சேதமடைந்துள்ளன. 19 மீனவர்கள் இறந்துள்ளனர்.
இந்நிலையில் தேங்காப்பட்டணம் மீன்பிடித் துறைமுகத்தில் ஜூலை 24ஆம் தேதி மீன்பிடிக்க சென்ற அந்தோணி, சிபு ஆகிய இரண்டு மீனவர்களும் மாயமாகினர். அவர்கள் உடல் இதுவரை கண்டுபிடிக்கப்படவில்லை.
எனவே மாயமான இந்த மீனவர்களின் குடும்பங்களுக்கு 20 லட்சம் ரூபாய் நஷ்டஈடு வழங்குவதோடு, மணல் மேடுகளை அகற்றி மீனவர்கள் பயன்படுத்தும் வகையில் மீன்பிடி துறைமுகமாக மாற்ற தமிழ்நாடு அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்” என அந்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.