காஞ்சிபுரம் மாவட்டம் படப்பையில் தடை செய்யப்பட்ட மாவோயிஸ்ட் இயக்கத்தின் முக்கிய நிர்வாகிகளான ரீனா ஜாய்ஸ்மேரி(42),மற்றும் மகாலிங்கம்(50) ஆகிய இருவரும் மாவோயிஸ்ட் தீவிரவாத இயக்கத்திற்கு உறுப்பினர்களை சேர்க்கவும் அவர்களுக்கு பயிற்சி அளிக்கவும் முயற்சி செய்து வந்ததாக கூறப்படுகிறது.
இதனையறிந்த காஞ்சிபுரம் மாவட்ட கியூ பிரிவு போலீசார் கடந்த 2016ஆம் ஆண்டு ஜீலை மாதம் 21 ந்தேதி இருவரையும் சுற்றி வளைத்து கைது செய்தனர். ரீனா ஜாய்ஸ்மேரி மீது 3 வழக்குகளும், மகாலிங்கத்தின் மீது 10 வழக்குகளும் நிலுவையில் இருந்து வந்த நிலையில், வேலூர் பெண்கள் மத்திய சிறைச்சாலையில் ரீனா ஜாய்ஸ்மேரியும்,மதுரை மத்திய சிறைச்சாலையில் மகாலிங்கமும் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் மாவோயிஸ்டுகள் இருவரும் விசாரணைக்காக வேலூர் மற்றும் மதுரை சிறைச்சாலைகளில் இருந்து போலீஸ் பாதுகாப்புடன் மாவட்ட முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் நீதிபதி ஜெ.சந்திரன் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டனர். விசாரணை ஏப்ரல் மாதம் 4ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்படுவதாக நீதிபதி உத்தரவிட்டதை தொடர்ந்து ரீனா ஜாய்ஸ் மேரி, மகாலிங்கம் ஆகியோர் மீண்டும் சிறையிலடைக்க பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்துச் செல்லப்பட்டனர்.
இதையும் படிங்க : கவுரவமாக, பிச்சை எடுத்து கூட நடிகர் சங்க கட்டட பணிகளை நிறைவு செய்வோம் - விஷால்