காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்டம் காவாந்தண்டலம்- வாலாஜாபாத் சாலை வழியாக தாம்பரம், செங்கல்பட்டு, மறைமலைநகர் உள்ளிட்ட பகுதிகளுக்கு கருங்கல் ஜல்லி ஏற்றி செல்லப்படுகிறது. இந்த சாலையில் நூற்றுக்கும் மேற்பட்ட கனரக லாரிகள் பயணிப்பதால் எதிர்பாராத வகையில் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுகின்றன.
தொழிற்சாலை பணியாளர்கள், விவசாயிகள் என பலர் விபத்துக்களில் சிக்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்படுகின்றனர். அதிக வாகனங்கள் பயணிப்பதால் இங்கு வசிக்கும் பலர் மூச்சு திணறல், சுவாச கோளாறு போன்ற நோய்களால் அவதிப்படுகின்றனர்.
மேலும், இது குறித்து பலமுறை மாவட்ட நிர்வாகத்திடம் கோரிக்கை விடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால், காவாந்தண்டலம் கிராமத்தை சேர்ந்த 50க்கும் மேற்பட்ட பொதுமக்கள், தங்கள் கிராமம் வழியாக செல்லும் கனரக லாரிகளை சிறைப்பிடித்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இது குறித்து தகவலறிந்து வந்த காவலர்கள் பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். சுற்றுச்சூழல் மாசுபாட்டுக்கு கூடிய விரைவில் தீர்வு காணப்படும் என்ற காவலர்களின் பேச்சை ஏற்று, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
இதையும் படிங்க : நன்றி உணர்வு இருந்தால் விவசாயி சின்னத்துக்கு வாக்களியுங்கள்- சீமான்