ETV Bharat / state

'ஐயங்கார்லேயே நாங்க கொஞ்சம் ரவுடி ஐயங்கார் ஆக்கும்' - மீண்டும் வடகலை, தென்கலை இடையே மோதல்!

author img

By

Published : Apr 18, 2022, 4:31 PM IST

காஞ்சிபுரத்தில் இரண்டு ஆண்டுகள் கழித்து பாலாற்றில் நடைபெற்ற சித்ரா பௌர்ணமி விழாவில் வடகலை, தென்கலை பிரிவினரிடையே மீண்டும் ஏற்பட்ட கைகலப்பு பொதுமக்களிடையே முகம் சுழிக்க வைத்துள்ளது.
வடகலை தென்கலை இடையே மோதல்
வடகலை தென்கலை இடையே மோதல்

காஞ்சிபுரம்: 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றாகவும், உலகப்பிரசித்திபெற்ற அத்திவரதர் கோயில், காஞ்சிபுரம் வரதராஜ பெருமாள் கோயில் என்றும் பொதுமக்களால் அழைக்கப்படுகிறது. இங்கு, சித்ரா பெளர்ணமியையொட்டி உற்சவப் பெருமாள், கோயிலில் இருந்து புறபட்டு ஓரிக்கை, செவிலிமேடு, புஞ்சையரசந்தாங்கள், தூசி போன்ற பல்வேறு கிராமங்களில் மண்டகப்படி கண்டு அருளியபடி, ஐயங்கார் குளம் சஞ்சீவிராயர் திருக்கோயிலில் எழுந்தருளினார்.

அங்கு சிறப்பு திருமஞ்சனம் நடைபெற்று சிறப்பு அலங்காரத்தில் அங்கிருந்து புறப்பட்டு, அக்கோயிலின் அருகில் பூமிக்கு அடியிலுள்ள நடவாவி கிணற்றில் இறங்கி 16 கால் மண்டபத்தில் மும்முறை வலம் வந்து மண்டபத்தில் வைத்து தீபாராதனை செய்து நைவேத்தியம் படைக்கப்பட்டது. பின்னர் புறப்பாடு நடைபெற்று சனிக்கிழமை நள்ளிரவு செவிலிமேடு பாலாற்று படுக்கையில் உற்சவர் வரதராஜப்பெருமாள் இறங்கி, பக்தர்களுக்கு காட்சியளித்தார்.

இந்நிலையில் பாலாற்றங்கரையில் வடகலை மற்றும் தென்கலைப் பிரிவினர் பிரபந்தம் பாடுவதில் மீண்டும் இரு பிரிவினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு, பின்னர் அது கைகலப்பாக மாறி, ஒருவருக்கொருவர் தள்ளி தாக்கிக்கொண்டனர். சித்ராபௌர்ணமியையொட்டி இரண்டு ஆண்டுகள் கழித்து நடைபெற்ற இந்த பாலாற்றில் வரதராஜப்பெருமாள் இறங்கும் வைபவத்தில் நடைபெற்ற வடகலை, தென்கலை பிரிவினருக்கிடையேயான மோதலானது அங்கு வைபவத்தைக் காண வந்த பக்தர்களுக்கு இடையே முகசுழிப்பை ஏற்படுத்தியது.

வரதராஜப்பெருமாள் கோயில் உற்சவத்தின்போது, பிரபந்தம் பாட தென்கலை பிரிவினருக்கே உச்ச நீதிமன்றமும், உயர் நீதிமன்றமும் ஆணை பிறப்பித்துள்ள நிலையில் அவ்வுத்தரவை மீறி சில வடகலை பிரிவினர் வேண்டுமென்றே பிரச்னைகளை எழுப்பி சண்டை போடுகின்றனர் எனக் கூறப்படுகிறது. மேலும் இதனை இத்திருக்கோயில் மணியக்காரர் அவர்களிடத்தில் நீதிமன்ற உத்தரவினை சுட்டிகாட்டாமல், இது போன்ற பிரச்னைகளை தொடர்ந்து கண்டும் காணமால் வடகலை பிரிவினர்களுக்கு சாதகமாகவே செயல்படுவதாக தற்போது குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளன.

வடகலை, தென்கலை பிரிவினரிடையே மோதல்

மேலும் இது போன்ற உற்சவ நாள்களில் இரு பிரிவினரிடையே ஏற்படும் மோதல் நடைபெறாமலிருக்க இந்து சமய அறநிலையத்துறை தலையிட்டு இதற்கு ஓர் நிரந்தரத் தீர்வு ஏற்படுத்திட வேண்டும் என்பதே அனைத்து பக்தர்களின் கோரிக்கையாக உள்ளது.

இதையும் படிங்க: Exclusive: திருச்செந்தூர் முருகன் தரிசனம் - நிரந்தரத் தீர்வு கிடைக்குமா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.