கள்ளக்குறிச்சி அடுத்த தியாகதுருகம் முஸ்லிம் தெருவைச் சேர்ந்தவர் லலிதா (39). இவர், பியூட்டிசியனாக (அழகுக் கலை நிபுணராக) பணியாற்றி வந்தார். இவரது, கணவர் பாலமுருகன் கடந்த மூன்று மாதங்களுக்கு முன்பு மூளையில் கட்டி ஏற்பட்டதால் உயிரிழந்தார்.
இவர்களது மகள் தர்ஷினி (18), புதுவை அருகேவுள்ள தனியார் மருத்துவக் கல்லூரியில் அனஸ்தீசியா ( மயக்கவியல் நிபுணர்) படித்து வந்தார். இந்நிலையில், பாலமுருகன் இறப்பிலிருந்து லலிதாவும் அவரது மகள் தர்ஷினியும் மீளாமல் இருந்து வந்தனர்.
தாய், மகள் தற்கொலை:
இதிலிருந்து, மீள முடியாததால் பலமுறை உறவினர்களிடம் கூறி இருவரும் அழுது வந்தனர். இந்நிலையில், லலிதாவும், தர்சிஷினியும் ஒரே சேலையில் தூக்கிட்டு தற்கொலைக்கு முயன்றனர். இதையறிந்த, அவரது உறவினர்கள் இருவரையும் மீட்டு கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு கொண்டுச் சென்றனர்.
அங்கு, அவர்களை பரிசோதித்த மருத்துவர்கள் இருவரும் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவலறிந்து மருத்துவமனைக்கு வந்த காவல் துறையினர், தாய், மகள் இறப்பு குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: காதல் திருமணம் செய்த ஒன்றரை மாதத்தில் பெண் பொறியாளர் தற்கொலை