கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் தனியார் பள்ளியில் மர்மமான முறையில் இறந்த மாணவி இறப்பிற்கு நடவடிக்கை எடுக்க கோரி கடந்த ஜூலை 13 ஆம் தேதி முதல் போராட்டம் நடந்து வருகிறது.
இந்நிலையில் கடந்த 2 நாட்களாக போராட்டம் முற்றி பள்ளி நிர்வாகத்தின் பேருந்து எரிப்பு என எல்லை மீறி சென்றது. இதனையடுத்து தமிழ்நாடு அரசு அப்பகுதியில் 144 தடை உத்தரவு பிறப்பித்தது. போராட்டம் நடத்தவும் தடை விதித்துள்ளது. தடையை மீறி போராட்டம் நடத்துவோர் மீது நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.
தற்போது பள்ளி மாணவி தற்கொலை செய்து கொண்டதை கண்டித்து பெரம்பலூர் மாவட்டத்தில் பேரணி செல்ல வேண்டும் என வலைதளத்தில் செய்தி பரப்பிய 3 பேர் நீதிமன்ற காவலுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். பெரம்பலூர் துறைமங்கலம் பகுதியை சேர்ந்த தீபக், சூரியா மற்றும் பெரம்பலூர் கம்பன் தெருவை சேர்ந்த சுபாஷ் ஆகிய மூன்று பேரும் கள்ளக்குறிச்சி சம்பவத்திற்கு கண்டனம் தெரிவிக்கும் விதமாக பெரம்பலூர் மாவட்டத்தில் அமைதியான முறையில் பேரணி செல்ல வேண்டும் என வலைதளத்தில் செய்தி பரப்பியதாக கூறப்படுகிறது.
இதனையடுத்து நேற்று (ஜூலை 17)இரவு இவர்கள் மூவரையும் கைது செய்த பெரம்பலூர் நகர காவல் துறையினர் அவர்களிடம் தீவிர விசாரணை நடத்தினர். பெரம்பலூர் மாவட்ட அரசு தலைமை மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனைக்கு பிறகு, பெரம்பலூர் குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் ஆஜர் செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். இதில் தீபக், சூர்யா ஆகிய இருவரும் அதிமுக தொழில்நுட்பபிரிவை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க:கள்ளக்குறிச்சி மாணவி மரணம்: பள்ளி தாளாளர் உள்பட மூவர் கைது