ETV Bharat / state

டாஸ்மாக் இலக்கு நிர்ணயத்துக்கு காரணம் என்ன? அமைச்சர் முத்துசாமி விளக்கம்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 6, 2024, 1:48 PM IST

Tasmac Target: எப்படியாவது மது அருந்துபவர்களை குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்வது இல்லை என மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

minister muthuswamy talks about tasmac target
டாஸ்மாக் டார்கெட் குறித்து அமைச்சர் முத்துசாமி பேச்சு

டாஸ்மாக் டார்கெட் குறித்து அமைச்சர் முத்துசாமி பேச்சு

ஈரோடு: எப்படியாவது மது அருந்துபவர்களைக் குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்வது இல்லை என்றும், தவறான வழியில் சென்று தவறு நிகழ்ந்துவிடக் கூடாது என்பதற்கான முயற்சிதான் இலக்கு நிர்ணயம் எனவும், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி தெரிவித்துள்ளார்.

ஈரோடு மாநகராட்சிக்கு உட்பட்ட 5வது வார்டு பகுதியில் மொக்கயம்பாளையம் முதல் கொளத்துபாளையம் சாலையில் உள்ள ஓடையின் குறுக்கே, 1 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் உயர்மட்ட பாலம் கட்டுதலுக்கான திட்டப் பணிகள் நேற்று (ஜன.05) நடைபெற்றது. இதில், மதுவிலக்கு ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் முத்துசாமி பங்கேற்று, பூமி பூஜை செய்து திட்டப் பணிகளைத் தொடங்கி வைத்தார்.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் முத்துசாமி, "மக்களுடன் முதல்வர் திட்டம், அரசியல் நோக்கமோ அல்லது விளம்பர நோக்கத்திற்காகவோ செய்யவில்லை. மக்கள் தங்கள் கோரிக்கை மனு மீதான அங்கீகாரம் கிடைக்க வேண்டும் என்ற வகையில்தான் பணிகள் செய்யப்பட்டு வருகிறது. பொது இடங்களில் மது அருந்தும் சம்பவம் குறித்து காவல்துறையினர் நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

சில இடங்களில் மது அருந்துவதால் நிகழும் குற்றச் சம்பவங்கள் குறித்து, அரசு மீது சொல்லும் குற்றச்சாட்டு ஏற்புடையதல்ல. தனிப்பட்ட முறையில் நிகழும் குற்றச் சம்பவத்தின் பின்னணி, போலீசார் விசாரணையில்தான் தெரிய வரும். மேலும், மது அருந்த வருபவர்களை எப்படியாவது குடிக்க வைக்க வேண்டும் என்ற நோக்கத்தோடு அரசு இலக்கு நிர்ணயம் செய்யவில்லை.

தவறான வழியில் சென்று, தவறு நிகழ்ந்துவிடக்கூடாது என்பதை சரி பார்ப்பதற்கான முயற்சிதான் இலக்கு நிர்ணயம். மது விற்பனையை அதிகப்படுத்தும் நோக்கம் இல்லை. அதிலிருந்து மது அருந்துபவர்கள் விடுபட வேண்டும் என்ற நோக்கில், அரசின் சார்பில் போதுமான ஆலோசனைகள் வழங்கப்பட்டு வருகிறது.

கள் விற்பனை குறித்து மிகப்பெரிய ஆய்வு செய்து, மேற்கொள்ள வேண்டிய பணிகள் இன்னும் உள்ளது. ஒரே நாளில் கள் குறித்து நடவடிக்கை எடுக்க முடியாது. இதில் உள்ள பிரச்சினைகள் குறித்த அறிக்கையும் வருவதால், மிகப்பெரிய ஆய்வுக்கு பிறகுதான் கள்ளுக்கு அனுமதி கொடுக்க முடியும். அரசு மதுபானக் கடைகளில் மது பாட்டில்களுக்கு கூடுதல் கட்டணம் வசூல் செய்வது குறித்து தெளிவான புகார் வந்தால், பணியாளர்கள் கைது மற்றும் பணியிடை நீக்கம் போன்ற நடவடிக்கைகள் எடுக்க அரசு தயாராக உள்ளது.

25 ஆயிரம் தொழிலாளர்கள் உள்ள நிலையில், சிலர் செய்யும் தவறை மொத்தமாக சொல்லும்போது மற்றவர்கள் வேதனை அடைவார்கள். 99 சதவீதம் கூடுதல் விலைக்கு மதுபாட்டில்கள் விற்பனை செய்வது கட்டுப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும், துறை சார்ந்த உயர் அதிகாரிகள் தொடர்ந்து கண்காணிப்பில் ஈடுபட்டு நடவடிக்கை எடுத்து வருகின்றனர்" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: பிரம்மாண்டமான 'கலைஞர் 100' விழாவில் பங்கேற்கும் திரைப்பிரபலங்கள்..!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.