திண்டுக்கல் மாவட்டம் பழனியை அடுத்துள்ள ஆயக்குடியைச் சேர்ந்தவர் மணியன். இவரது மனைவி தங்கம். இவர்களுக்கு மங்கையர்க்கரசி (25) என்ற மகளும், காளிதாஸ் (22) என்ற மகனும் உள்ளனர்.
இந்நிலையில், மங்கையர்க்கரசிக்கு உடல்நிலை சரியில்லை எனக்கூறி அவரது பெற்றோர் பழனி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக இன்று (ஏப்.20) சேர்த்தனர். சிகிச்சையின்போது மங்கையர்க்கரசி கர்ப்பமாக இருந்து, சிலமணி நேரத்திற்கு முன்பாக குழந்தை பிறந்திருப்பதும் தெரியவந்தது.
இது குறித்து மருத்துவர்கள் கேட்டபோது முன்னுக்குபின் முரணாக பேசியதால் சந்தேகமடைந்த மருத்துவர்கள் ஆயக்குடி காவல் துறையினருக்குத் தகவல் கொடுத்தனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த காவல் துறையினர், அப்பெண்ணின் பெற்றோரிடம் விசாரணை நடத்தினர்.
விசாரணையில், பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்தன.தனியார் பள்ளியில் ஆசிரியையாக பணிபுரியும் மங்கையர்க்கரசி திருமணமாகமலேயே கர்ப்பமானதும், மங்கையர்க்கரசி கர்ப்பம் தரித்தது வெளியில் தெரியாமல் இருக்க வீட்டிலேயே பிரசவம் பார்த்ததும் தெரியவந்தது.
மேலும், மங்கையர்க்கரசிக்கு ஆண் குழந்தை ஒன்று இறந்தே பிறந்ததாகவும், அந்த குழந்தையின் உடலை மங்கையர்க்கரசியின் தம்பி காளிதாஸ் கிணற்றில் வீசியதாகவும் தெரிவித்தனர். தொடர்ந்து மங்கையர்க்கரசிக்கு ரத்தப்போக்கு அதிகமானதால் மருத்துவமனைக்கு அழைத்து வந்ததாகவும் தெரிவித்தனர்.
இதற்கிடையில், மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த மங்கையர்க்கரசி, சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்தார். இச்சம்பவம் குறித்து அப்பெண்ணின் குடும்பத்தார் மீது வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர், மங்கையர்க்கரசி கர்ப்பமாவதற்குக் காரணமானவர் யார்? மங்கையர்க்கரசிக்குப் பிறந்த ஆண் குழந்தை இறந்தே பிறந்ததா? அல்லது கொலை செய்யப்பட்டதா? என்றும், குழந்தையின் உடலை கிணற்றில் வீசியதற்கான காரணம் ஆகியவை குறித்து காவல் துறையினர் தீவிரமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: குழந்தைக்கு வைத்த நஞ்சு; தாயின் உயிரையும் பறித்த கொடூரம் - கணவன் கைது!