ETV Bharat / state

லஞ்சம் பெற்றதாக கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு வரும் டிச.28 வரை நீதிமன்றக் காவல் - நீதிபதி உத்தரவு!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Dec 14, 2023, 9:44 PM IST

ED Ankit Tiwari: திண்டுக்கல் அரசு மருத்துவரிடம் லஞ்சம் வாங்கிய வழக்கில் கைது செய்யப்பட்ட அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு வருகின்ற டிச.28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

ED Ankit Tiwari
அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு வரும் டிச.28 வரை நீதிமன்றக் காவல்

அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு வரும் டிச.28 வரை நீதிமன்றக் காவல்

திண்டுக்கல்: திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் சுரேஷ் பாபுவிடம் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி லஞ்சம் வாங்கிய விவாகரத்தில், திண்டுக்கல் லஞ்ச ஒழிப்பு காவல்துறையால் கைது செய்யப்பட்டு, மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரியை 3 நாள் காவல்துறை காவலில் எடுத்து விசாரிக்க, அனுமதி கோரி கடந்த டிச.8 ஆம் தேதி திண்டுக்கல் மாவட்ட லஞ்ச ஒழிப்பு காவல்துறை, தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்தனர். இதனையடுத்து லஞ்ச ஒழிப்பு காவல்துறை தாக்கல் செய்த மனு கடந்த டிச.12 ஆம் தேதி விசாரணைக்கு வந்தது.

மதுரை மத்தியச் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரி காவல்துறை பாதுகாப்புடன் திண்டுக்கல் தலைமை நீதித்துறை நடுவர் நீதிமன்றத்திற்கு அழைத்து வரப்பட்டார். அப்போது மூன்று நாள் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும் என அரசு தரப்பு வழக்கறிஞர் அனுராதா வாதிட்டார்

காவல்துறை காவல் வழங்கக் கூடாது என அங்கித் திவாரி சார்பில், வழக்கறிஞர் செல்வம் வாதிட்டார். இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி டிச.14 ஆம் தேதி மாலை 5 மணி வரை காவல்துறை காவல் வழங்கி உத்தரவிட்டார். இந்நிலையில் காவல்துறை காவல் முடிந்து இன்று மாலை 5 மணி அளவில் திண்டுக்கல் தலைமை நீதித்துறை குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரியை ஆஜர்படுத்தினர்.

அப்போது நீதிபதி மோகனா, காவல்துறை காவலில் உங்களுக்குச் சரியான உணவு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட்டதா, மன ரீதியான தொந்தரவுகள் அளிக்கப்பட்டதா எனக் கேள்விகள் எழுப்பினார். எனக்கு எந்த தொந்தரவும் அளிக்கவில்லை. உணவு சரியான முறையில் வழங்கப்பட்டது என அமலாக்கத்துறை அதிகாரி தெரிவித்தார்.

மேலும், நீதிபதியிடம் போதுமான ஒத்துழைப்பு தரவில்லை என லஞ்ச ஒழிப்பு காவல்துறை தெரிவித்ததையடுத்து நீதிபதி அமலாக்கத்துறை அதிகாரியிடம், நீங்கள் போதுமான ஒத்துழைப்பு காவல்துறைக்கு வழங்கவில்லை எனக் கூறுகிறார்களே என்று கேட்ட போது, என்னால் முடிந்த அளவு ஒத்துழைப்பு காவல்துறைக்கு வழங்கினேன் என்று தெரிவித்தார்.

இதனையடுத்து நீதிபதி மோகனா அமலாக்கத்துறை அதிகாரி அங்கித் திவாரிக்கு வருகிற டிச.28ஆம் தேதி வரை நீதிமன்றக் காவல் நீட்டிப்பு செய்தார். இந்நிலையில் அமலாக்கத்துறை அதிகாரி வருமானவரிக் கட்டுவதால் அவருக்குச் சிறையில் முதல் வகுப்பு தர வேண்டும் என மனுத்தாக்கல் செய்யப்பட்டு இருந்தது. இந்த மனு மீதான விசாரணை நாளை (டிச.15) நடத்தப்படும் எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: 'அல்வா' சிறப்பு தொகுதி யாருக்கு? மல்லுக்கட்டும் முக்கிய தலைவர்கள் குறித்த சிறப்பு அலசல்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.