ETV Bharat / state

கழிவுகளில் இருந்து உருவாக்கிய 5,000 மரக்கன்றுகள்.. வத்தலகுண்டு பேரூராட்சி தூய்மை பணியாளர்கள் அசத்தல்!

author img

By

Published : Jul 26, 2023, 9:58 PM IST

Updated : Jul 27, 2023, 7:37 PM IST

குப்பைக் கழிவுகளில் சேகரிக்கப்பட்ட மாம்பழங்களைக் கொண்டு ஐந்தாயிரம் மரக்கன்றுகளை உருவாக்கி வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் சாதனைப் படைத்துள்ளது.

batlagundu-municipal-corporation-created-five-thousand-saplings-from-waste-mangoes
கழிவு மாம்பழங்களை கொண்டு ஐந்தாயிரம் மரக்கன்றுகளை உருவாக்கிய வத்தலக்குண்டு பேரூராட்சி

வத்தலகுண்டு பேரூராட்சியின் அசத்தல் திட்டம்

திண்டுக்கல்: வத்தலக்குண்டு பேரூராட்சியில் திடக்கழிவு மேலாண்மையில் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்களைக் கொண்டு, பசுமை பூங்காவில் ஐந்தாயிரம் மரக்கன்றுகளை உருவாக்கி பேரூராட்சி நிர்வாகம் பொதுமக்களுக்கு வழங்கி வருகிறது.

வத்தலக்குண்டு பகுதியில் மாம்பழ சீசன் களைக்கட்டத் தொடங்கியது முதல் காய்கறிச் சந்தைகளிலிருந்து தூக்கி வீசப்படும் கழிவு மாம்பழங்கள் மற்றும் வீடுகளில் பிரித்து வாங்கப்படும் உணவுக் கழிவுகளிலிருந்து சேகரிக்கப்படும் மாம்பழங்களைக் கொண்டு, மா கன்றுகளை உற்பத்தி செய்யும் முயற்சியில் வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகம் ஈடுபட்டது.

தூய்மைப் பணியாளர்கள் மூலம் நாள்தோறும் சேகரிக்கப்படும் கழிவு மாம்பழங்கள் பேரூராட்சி பசுமை பூங்காவிற்குக் கொண்டுவரப்பட்டு மாம்பழ விதை தனியாகப் பிரித்தெடுக்கப்படுகிறது. பின்னர் அந்த விதைகள் உலர வைக்கப்பட்டு நடவுக்குத் தயார் செய்யப்படுகின்றன.

இதையும் படிங்க : தமிழ்நாட்டில் தொழிற்சாலைகள் இல்லாததே இளைஞர்களின் வேலையின்மைக்குக் காரணம் - ஆளுநர் ஆர்.என்.ரவி

நன்கு உலர்ந்த மாம்பழ விதைகளைப் பசுமைப் பூங்காவில் உள்ள காலியிடங்களில் நடவு செய்யும் பணியை பணியாளர்கள் மேற்கொள்கின்றனர். நாள் ஒவ்வொன்றுக்கும் ஒவ்வொரு இடங்கள் வீதம் பாத்தி கட்டி, மாம்பழ விதைகள் நடவு செய்யப்படுகின்றன.

செடிகளாக வளர்ந்து வரும் மாங்கன்றுகளை விதைகளோடு சேர்த்து, பெயர்த்து எடுத்து, பின்னர் விதைப்பைகளில் போட்டு மா கன்றுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன. கூட்டாஞ்சோறு போல் நாள்தோறும் வந்துவிழும் பல ரக மாம்பழங்கள், இங்கு நடவு செய்யப்பட்டு உற்பத்தி செய்யப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: பாம்பு கடித்து இருவர் உயிரிழப்பு - சாலை அமைக்கும் பணியைத் துரிதப்படுத்த 8 கிமீ நடந்து சென்ற கலெக்டர்!

இதேபோல், இந்த பசுமைப் பூங்காவில் வத்தலக்குண்டு பெயரைக் காப்பாற்றும் விதமாக வெற்றிலை நாற்றுகள் அதிகளவில் நடவு செய்யப்பட்டுள்ளன. இதனைத் தொடர்ந்து குறைந்த விலையில் விற்பனை செய்வதற்காக ஐம்பதாயிரத்துக்கும் மேற்பட்ட மரக்கன்றுகளைப் பேரூராட்சி நிர்வாகம் தயார்ப்படுத்தி வைத்துள்ளது.

தூக்கி வீசப்படும் மாம்பழம் விதை தானே என்ற எண்ணம் இல்லாமல், அதனைப் பயனுள்ள மரக்கன்றுகளாக உருவாக்கி மீண்டும் பயன்பாட்டுக்குக் கொண்டு வரும் வத்தலக்குண்டு பேரூராட்சி நிர்வாகத்தின் இந்த முயற்சிக்குப் பொதுமக்கள், விவசாயிகள் பெரும் பாராட்டைத் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க : தேசிய அளவிலான டேக்வோண்டா போட்டியில் சென்னை சிறுவன் வெள்ளிப்பதக்கம் வென்று சாதனை!

Last Updated : Jul 27, 2023, 7:37 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.