ETV Bharat / state

முன்பக்க டயர் வெடித்து கோர விபத்து.. சாலையோர புளிய மரத்தில் மோதிய தனியார் பேருந்து.. 25 பேர் படுகாயம்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 21, 2023, 9:14 AM IST

Dharmapuri bus accident: தருமபுரியில் தனியார் பேருந்தின் முன் பக்க டயர் வெடித்ததில், ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது.

25 பேர் படுகாயம்
தருமபுரியில் தனியார் பேருந்தின் முன் பக்க டயர் வெடித்து விபத்து.

தருமபுரியில் தனியார் பேருந்தின் முன் பக்க டயர் வெடித்து விபத்து.

தருமபுரி: தனியார் பேருந்தின் முன்பக்க டயர் வெடித்ததில் ஓட்டுநரின் கட்டுபாட்டை இழந்த பேருந்து, சாலையோரத்தில் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளான சம்பவத்தின் சிசிடிவி சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது. இந்த விபத்தில் பேருந்தில் பயணித்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.

தருமபுரி பேருந்து நிலையத்தில் இருந்து நேற்று (செப். 20) மாலை பயணிகளுடன் தனபால் என்ற தனியார் பேருந்து ஒகேனக்கல் நோக்கி சென்றது. மாலை நேரம் என்பதால் பள்ளி, கல்லூரிகள் முடித்து விட்டு மாணவ, மாணவிகள் மற்றும் கூலி வேலை செய்து வீடு திரும்பும் பெண்கள் ஆண்கள் என 50க்கும் மேற்பட்ட பயணிகள் பேருந்தில் பயணம் செய்து கொண்டிருந்தனர்.

இந்நிலையில், பேருந்து இண்டூர் அருகே சென்று கொண்டு இருந்த போது எதிர்பாராத விதமாக பேருந்தின் வலதுபுற முன் டயர் வெடித்தது. இதில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த பேருந்து தாறுமாறாக சென்று சாலையோரம் இருந்த புளிய மரத்தில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் பேருந்தில் பயணம் செய்த 25க்கும் மேற்பட்ட பயணிகள் படுகாயம் அடைந்தனர். இது குறித்த சிசிடிவி காட்சிகள் தற்போது சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிங்க: 'அனைத்து அறிக்கைகளையும் தமிழில் வெளியிட கோரி வழக்கு’ - மாநில கடலோர மண்டலம் பதிலளிக்க நீதிமன்றம் உத்தரவு!

அதனைத் தொடர்ந்து, விபத்தில் காயமடைந்தவர்களை பொது மக்கள் உதவியுடன் இண்டூர் காவல் நிலைய போலீசார் மீட்டு உடனடியாக 108 ஆம்புலன்ஸ் மூலம் தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர். மேலும், பேருந்தை ஓட்டிய ஓட்டுநர் வீரமணிக்கு பலத்த காயங்கள் ஏற்பட்டதால் மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு தொடர் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

இந்த விபத்து குறித்து இண்டூர் காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து தீவிரமாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக விபத்தில் உயிரிழப்புகள் எதுவும் ஏற்படவில்லை என தெரிவிக்கப்பட்டு உள்ளது. இந்த பேருந்து விபத்தால் அப்பகுதி சிறிது நேரம் பரபரப்பாக காணப்பட்டது.

இதையும் படிங்க: Brahma Kamalam flower: வீட்டில் பூத்து குலுங்கிய பிரம்ம கமலம் பூ.. கண்டு ரசித்த பொது மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.