ETV Bharat / state

மாரண்டஹள்ளியில் சிறுத்தை நடமாட்டம்.. பாலக்கோடு வனத்துறை எச்சரிக்கை!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 22, 2023, 2:18 PM IST

Dharmapuri news: தருமபுரி மாவட்டம் மாரண்டஹள்ளி சுற்றுவட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால் பொதுமக்களுக்கு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

பாலக்கோடு வனத்துறை எச்சரிக்கை
மாரண்டஹள்ளியில் சிறுத்தை நடமாட்டம்

மாரண்டஹள்ளியில் சிறுத்தை நடமாட்டம்

தருமபுரி: மாரண்டஹள்ளி சுற்று வட்டாரப் பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், பொதுமக்கள் யாரும் வனப்பகுதிக்குள் செல்லவும், இரவு நேரங்களில் வெளியில் நடமாடவும் வேண்டாம் என பாலக்கோடு வனத்துறையினர் ஒலிபெருக்கி மூலம் மலை அடிவார கிராம மக்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

தருமபுரி மாவட்டம், மாரண்டஹள்ளி அடுத்த சாமனூர், படகாண்டஹள்ளி கிராமம் வனப்பகுதியை ஒட்டி உள்ளது. இந்நிலையில், கடந்த சில மாதங்களாக உணவு மற்றும் தண்ணீர் தேடி ஊருக்குள் வரும் வனவிலங்குகள் கிராமத்தில் உள்ள ஆடு, கோழி உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளை அடித்துச் சென்றுள்ளதாக புகார்கள் எழுந்துள்ளன.

இந்நிலையில், மலை உச்சியில் ஒரு விலங்கு அமர்ந்திருந்ததை அப்பகுதி மக்கள் தங்களது செல்போனில் படம் பிடித்து பார்த்துள்ளனர். அதனையடுத்து, அது சிறுத்தை என்பது தெரிய வந்துள்ளது. அதனைத் தொடர்ந்து, கிராம மக்கள் சிறுத்தை நடமாட்டம் இருப்பது குறித்து பாலக்கோடு வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர்.

இதையும் படிங்க: மகளிர் உரிமைத்தொகை திட்ட பயனாளிகள் கவனத்திற்கு.. தமிழக அரசு முக்கிய அறிவிப்பு

இந்த தகவலின் அடிப்படையில், வனத்துறையினர் சாமனூர் மற்றும் படகாண்டஹள்ளி பகுதியைச் சுற்றி இரவு நேரங்களில் சுழற்சி முறையில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர். மேலும், இரவு நேரங்களில் சிறுத்தை விவசாய நிலங்களில் உள்ள குடியிருப்புகளை நோக்கிச் செல்வதால் மக்கள் மிகுந்த அச்சம் அடைந்துள்ளனர்.

இந்நிலையில், பாலக்கோடு வனச்சரகர் நடராஜ் தலைமையில், வனத்துறையினர் சிறுத்தை நடமாட்டம் உள்ள பகுதியில் ஒலி பெருக்கி மூலம் எச்சரிக்கை விடுத்து வருகின்றனர். இதில், சிறுத்தை நடமாட்டம் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் மக்கள் இரவு நேரங்களில் வெளியில் நடமாட வேண்டாம் எனவும், வளர்ப்பு பிராணிகளை பாதுகாப்பாக வைத்து கொள்ள வேண்டும் எனவும் கூறியுள்ளனர்.

ஒரு வேளை சிறுத்தையால் கால்நடைகள் உள்ளிட்ட வளர்ப்புப் பிராணிகளுக்கு பாதிப்பு ஏற்பட்டால் அதற்கு வனத்துறை சார்பில் உரிய இழப்பு வழங்கப்படும். அதேபோல், வன விலங்குகள் அச்சுறுத்துவதாக நினைத்து வன விலங்கு நடமாட்டம் உள்ள பகுதியில் மின்சாரம் வைப்பது, நாட்டு வெடிகுண்டுகள் வைப்பது போன்ற வன விலங்குகளை துன்புறுத்துவது மற்றும் பாதிப்பு ஏற்படுத்துவது போன்ற செயல்களில் ஈடுபட வேண்டாம். அவ்வாறு ஈடுபட்டால் வன விலங்கு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என வனத்துறையினர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தி வருகின்றனர்.

இதையும் படிங்க: பெரியகுளம் அம்மா உணவகம் பொருட்கள் வெளிசந்தையில் விற்பனை.. வைரலாகும் வீடியோ!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.