தருமபுரி மாவட்டம், பாலக்கோடு அடுத்த கல்கூடல்பட்டியில் அரசு கால்நடை மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. மருத்துவமனையில் கால்நடை மருத்துவராக செந்தில் என்பவர் பணியாற்றி வருகிறார். காலை எட்டு மணிக்கு பணிக்கு வராமல், 12 மணிக்கு வருவதாக பொதுமக்கள் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகின்றனர்.
இந்நிலையில், காலை 11 மணியாகியும் கால்நடை மருத்துவா் செந்தில் மருத்துவமனைக்கு வராததால் மாடு, ஆடு, கோழி, நாய் போன்ற விலங்குகளை சிகிச்சைக்காக கொண்டுவந்த பொதுமக்கள் நீண்ட நேரமாக காத்திருந்தனா். மருத்துவர் வராத காரணத்தால் ஒரு கோழி, ஒரு நாய் பரிதாபமாக உயிரிழந்தது.
இதனையடுத்து, நூற்றுக்கும் மேற்பட்ட கால்நடை வளர்ப்பவர்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனையடுத்து தகவலறிந்த மருத்துவர் செந்தில் சம்பவ இடத்திற்கு மதுபோதையில் வந்தார். இவ்வாறு தொடர்ந்து மதுபோதையில் வந்து கால்நடைகளுக்கு சிகிச்சை அளித்துவரும் கால்நடை மருத்துவர் செந்திலை, இடமாற்றம் செய்ய வேண்டும் என கோரிக்கை விடுக்கின்றனர், அப்பகுதி மக்கள்.
தற்போது, கோடைக்காலம் தொடங்கியுள்ளதால் கால்நடைகளுக்கு நோய் ஏற்படுவதால், அதிக அளவு கால்நடை மருத்துவமனையை நாடி வருகின்றனர். ஆனால், மூன்று மணி நேரம் தாமதமாக மருத்துவமனைக்கு மருத்துவர் வந்ததால் பொதுமக்கள் கடும் அவதிப்பட்டனர்.
இதையும் படிங்க: சிஏஏ-வுக்கு எதிர்ப்புத் தெரிவித்து போராடிய 264 பேர் மீது வழக்குப்பதிவு