கோவை: சரவணம்பட்டி பகுதியில் கை கால்கள் கட்டப்பட்ட நிலையில் 15 வயது சிறுமி சடலமாகக் கண்டெடுக்கப்பட்டார். இதனையடுத்து காவல் துறையினர் மேற்கொண்ட விசாரணையில் சிறுமியின் குடும்ப நண்பரான முத்துக்குமார் என்பவர் இக்கொடூரச் செயலில் ஈடுபட்டது தெரியவந்தது.
முத்துக்குமாருக்கு சிறுமியின் தாயாரிடம் கொடுக்கல் வாங்கல் தொடர்பாக சண்டை இருந்துவந்த நிலையில், அவர் சிறுமியைக் கடத்திச் சென்று அவர் அணிந்திருந்த மூன்று பவுன் தங்கச் சங்கிலியைப் பறித்ததும் கொலை செய்ததும் தெரியவந்தது.
இதனையடுத்து அவர் மீது ஆள் கடத்தல், ஆதாயக் கொலை உள்ளிட்ட மூன்று பிரிவுகளில் சரவணம்பட்டி காவல் துறையினர் வழக்குப்பதிவு செய்து அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டனர்.
அதில் சிறுமியைக் கடத்திச் சென்ற முத்துக்குமார் அவரை பாலியல் ரீதியாகத் துன்புறுத்தி கொலைசெய்ததும் தெரியவந்தது. இதனையடுத்து இந்த வழக்கானது ராமநாதபுரம் அனைத்து மகளிர் காவல் துறையினருக்கு மாற்றப்பட்டது.
அதனைத்தொடர்ந்து முத்துக்குமாரை போக்சோ சட்டப் பிரிவில் கைதுசெய்த காவல் துறையினர் அவரிடம் விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.
இதையும் படிங்க:ராஜேந்திர பாலாஜியை 4 தனிப்படைகள் அமைத்து தேடுதல் வேட்டை