ETV Bharat / state

'காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு' தொடங்க திட்டம்: அமைச்சர் ஆர்.காந்தி தகவல்

author img

By

Published : Jun 22, 2023, 3:21 PM IST

காட்டன் கார்ப்பரேசன் இந்தியா போன்று காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு தொடங்குவதற்கான திட்டம் உள்ளது என அமைச்சர் காந்தி தெரிவித்துள்ளார்.

'காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு' தொடங்கும் திட்டம் உள்ளது - அமைச்சர் ஆர்.காந்தி
'காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு' தொடங்கும் திட்டம் உள்ளது - அமைச்சர் ஆர்.காந்தி

அமைச்சர் ஆர்.காந்தி செய்தியாளர் சந்திப்பு

கோயம்புத்தூர்: தமிழ்நாடு கைத்தறி மற்றும் துணிநூல் துறை அமைச்சர் காந்தி கோவையில் பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறார். இதன் ஒரு நிகழ்வாக குறிச்சி சிட்கோ தமிழ்நாடு பஞ்சாலை கழக தறிக் கூடத்தை அமைச்சர் பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது அங்குள்ள கருவிகளைப் பார்வையிட்டு அதன் செயல்பாடுகள் குறித்து கேட்டறிந்தார். மேலும், அங்கு வைக்கப்பட்டுள்ள நூல்களின் தரங்களையும் ஆய்வு செய்தார்.

இதனையடுத்து செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் காந்தி, “கோவையில் ஆய்விற்காக வந்தோம். தமிழ்நாடு பஞ்சாலைக் கழகம் மூலம் ஏர்ஜெட் இயந்திரம், பள்ளி மாணவர்களுக்கான 9 லட்சம் மீட்டர் பள்ளிச் சீருடை உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது. ஏர்ஜெட் இயந்திரம் மூலம் உற்பத்தியைப் பெருக்க என்னென்ன தேவை இருக்கிறது, என்னென்ன குறை இருக்கிறது என்பதை நேரில் கேட்டு ஆய்வு செய்துள்ளோம்.

தற்போது முதலமைச்சராக மு.க.ஸ்டாலின் ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, கடந்த இரண்டு வருடங்களில் இந்த துறைக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு, இதுவரை யாரும் செய்யாத அளவிற்கான பணிகள் செய்யப்பட்டுள்ளது. பழைய விசைத்தறி இயந்திரங்களை எடுத்துவிட்டு ஏர்ஜெட் இயந்திரங்களை அமைக்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது.

இப்போது கோவையில் 12 ஏர்ஜெட் இயந்திரங்கள் இருக்கின்றது. மேலும், 12 ஏர்ஜெட் இயந்திரங்கள் கூடுதலாக அமைக்கப்பட இருக்கிறது. உற்பத்தியைப் பெருக்க இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது. ஏர்ஜெட் இயந்திரம் அமைப்பதோடு அந்த இயந்திரத்திற்குத் தேவையான மின்சாரத்தை சோலார் மூலம் பெற உள்ளோம்.

கடன் வாங்கி இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டாலும், 25 ஆண்டுகளுக்கு உத்தரவாதம் கொடுக்கின்றனர். கூடுதல் இயந்திரங்கள் மூலம் வரும் உற்பத்தி லாபத்தைக் கொண்டு 5 ஆண்டுகளுக்கு கடன் செலுத்தினால், அதன் பிறகு மின்சாரம் செலவு இல்லாமல் 15 ஆண்டுகளுக்கு லாபமாக இருக்கும்.

இதன் மூலம் வரும் காலத்தில் இந்த துறை லாபம் இருக்கும் துறையாக மாறும். தமிழ்நாட்டில் 18 ஸ்பின்னிங் மில்கள் இருந்தது. இதில் 12 மூடப்பட்டு உள்ளது. 6 மில்கள்தான் தற்போது இயங்குகிறது. அதிலும், ஸ்டாலின் ஆட்சிப் பொறுப்பை ஏற்கவில்லை என்றால், அந்த 6 மில்களும் மூடப்பட்டிருக்கும்.

தற்போது அந்த மில்களும் கொஞ்சம் கொஞ்சமாக லாபத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. நம்மிடம் இயங்காமல் இருக்கும் 12 மில்லிற்கு மட்டும் 486 ஏக்கர் அளவிலான நிலம் இருக்கிறது. மணல்மேட்டில் உள்ள மில் 20 வருடமாக மூடி இருக்கிறது. 34 ஏக்கர் நிலம் அதற்கு இருக்கிறது.

அதனை மினி ஜவுளிப் பூங்கா போன்று என்ன பயன்பாட்டிற்கு பயன்படுத்தலாம் என ஆலோசனை மேற்கொண்டோம். ஐந்து தேசிய பஞ்சாலை கழக ஆலைகள் மூடி இருக்கிறது. கோவையில் முக்கிய இடத்தில் 2 உள்ளது. அதை நாம் எடுக்க முடியாது. தற்போது நமது துறை மூலம் என்ன செய்ய முடியுமோ, அதை மிகச் சிறப்பாக செய்கிறோம்.

மொத்தமாக 125 லட்சம் பேல் பஞ்சு தமிழ்நாட்டிற்குத் தேவை. 15 லட்சம் பேல்கள் இங்கு உற்பத்தியாகின்றது. காட்டன் கார்ப்பரேசன் பஞ்சு எல்லாம் வடமாநிலங்களில் உள்ள குடோனில் இருந்து வருகின்றது. மேலும், தென்னிந்திய பஞ்சாலை சங்கம் உள்ளிட்ட சங்கங்களுடன் ஆலோசனை மேற்கொண்டோம்.

அப்போது வடமாநிலம் சென்று பஞ்சு வாங்கி வருவதால் அதிக செலவு ஏற்பட்டு வருவதாகவும், தமிழ்நாடு அரசால் விதிக்கப்படும் செஸ் வரியை நீக்க வேண்டும் என கோரிக்கை வைத்தனர். அதனை முதலமைச்சர் பரிசீலனை செய்து உடனடியாக நீக்கினார். ஆனால், காட்டன் விலையை நாம் நிர்ணயம் செய்ய முடியாது. அது மத்திய அரசின் கையில் உள்ளது.

காட்டன் கார்ப்பரேசன் இந்தியா போன்று காட்டன் கார்ப்பரேசன் தமிழ்நாடு என தொடங்கும் திட்டம் இருக்கிறது. ஆனால், போதிய நிதி இல்லாததால் அதனை தொடங்குவதில் காலதாமதம் இருக்கிறது. அது அமைந்து விட்டால் பருத்தியை நாம் வாங்கி இருப்பு வைத்து, பருத்தி விலையை கட்டுப்பாட்டில் வைக்க முடியும்” என்றார்.

மேலும், அதேபோல் மில்களில் வடமாநிலத் தொழிலாளர்கள் அதிக அளவில் உள்ளது குறித்த கேள்விக்கு, “தமிழ்நாட்டு தொழிலாளர்கள் வருவதில்லை. அனைவருக்கும் இங்கு பணி வழங்கப்படுகிறது. ரயில்வேத் துறையில் இங்கு உள்ளவர்களுக்கு வாய்ப்பு கொடுக்காமல், மொழி தெரியாதவர்கள் தமிழ்நாட்டில் பணிக்கு வைத்துள்ளது போல இல்லாமல், அனைவருக்கும் வேலை வழங்கப்படுகிறது” என தெரிவித்தார்.

இதனைத் தொடர்ந்து தனியார் நட்சத்திர ஹோட்டலில் துணி நூல் துறையின் சார்பில் தொழில்நுட்ப ஆலோசனை கூட்டம் அமைச்சர் தலைமையில் நடைபெறுகிறது.

இதையும் படிங்க: "பொங்கல் இலவச வேட்டி சேலை திட்டம் முன் கூட்டியே தொடங்கப்படும்" - அமைச்சர் காந்தி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.