ETV Bharat / state

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக மோசடி; துபாய் போலீசில் சிக்க வைத்த நிறுவனம் மீது புகார்!

author img

By

Published : Jun 16, 2023, 7:50 PM IST

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாகக் கூறி, துபாய் போலீசில் சிக்க வைத்த நிறுவனம் மீது உரிய நடவடிக்கை மேற்கொண்டு தங்கள் பணத்தை திரும்பப் பெற்றுத்தருமாறு கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டோர் புகார் மனு அளித்துள்ளனர்.

victims have filed a complaint against the company that cheated of hiring them abroadvictims have filed a complaint against the company that cheated of hiring them abroad
வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக துபாய் போலிசில் சிக்க வைத்த நிறுவனம்

வெளிநாட்டில் வேலை வாங்கித் தருவதாக கூறி துபாய் போலீசில் சிக்க வைத்த நிறுவனம் மீது புகார்

கோயம்புத்தூர்: காந்திபுரம் 100 அடி சாலையில் வி ஆக்சிஸ் ஓவர் சீஸ் எஜுகேசன் மற்றும் பிளேஸ்மெண்ட் (WE AXIS OVERSEAS EDUCATION AND PLACEMENT) என்ற நிறுவனம் இயங்கி வருகிறது. ராதாகிருஷ்ணன் என்பவர் இந்த நிறுவனத்தின் நிர்வாக இயக்குநர் ஆவார். இந்நிறுவனத்தில் சுகந்தி, சஞ்சய், கோகிலா ஆகியோர் பணிபுரிந்து வருகின்றனர். மேலும் இவர்களுடன் இணைந்து, Al SARA GENERAL TRADE என்ற நிறுவனத்தை கமலக்கண்ணன் என்பவர் நடத்தி வருகிறார்.

இவர்கள் அனைவரும் வெளிநாட்டில் வேலை வாங்கி தருவதாக விளம்பரம் செய்துள்ளனர். இந்த விளம்பரத்தை தொடர்ந்து பலரும் வெளிநாட்டுக்கு செல்வதற்காக இந்நிறுவனத்தை நாடி வந்துள்ளனர். இவ்வாறு வருவோரை, முதலில் துபாய்க்கு அனுப்பி விட்டு அங்கிருந்து வேலை பர்மீட் கொடுத்து ஐரோப்பாவிற்கு அனுப்புவதாக தெரிவித்து, துபாய் செல்ல விசிட் விசா மட்டும் கொடுத்து அனுப்பியுள்ளனர். இதற்காக இவர்கள் பலரிடம் இருந்தும் 30 லட்சத்திற்கும் மேல் பணத்தை ஏமாற்றி பெற்றுள்ளனர்.

மேலும், இவர்களை நம்பி பணம் கொடுத்து துபாய் சென்ற நபர்களுக்கு பல நாட்கள் ஆகியும் வேலை பர்மிட் தராமல் இருந்துள்ளனர். எனவே, இது குறித்து இவர்களை அனுப்பிய நிறுவனத்தினர்களிடம் கேட்ட நிலையில் அங்குள்ள மற்றொரு நிறுவனத்தை தொடர்பு கொள்ளுங்கள் எனக் கூறி உரிய பதிலளிக்காமல் செல்போனை சுவிட்ச் ஆப் (switch off) செய்துள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் அவர்கள், ஐரோப்பாவிற்கும் செல்ல முடியாமல் கையில் இருந்த பணத்தை கொண்டு நாட்களை கழித்து வந்துள்ளனர். இந்நிலையில் சிலரது விசிட் விசாவின் நாட்களும் முடிந்ததால், துபாய் போலீசாரிடம் சிக்கி வழக்கு பதிவு செய்யப்பட்டு பின்னர் விடுவிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் அவர்கள் அங்குள்ள சில தமிழ் நண்பர்களிடம் பண உதவி பெற்று தற்போது கோவை திரும்பி உள்ளனர்.

தங்களை ஏமாற்றிய அந்நிறுவனத்திடமிருந்து தங்களது பணத்தை பெற்று தருமாறும், அந்நிறுவனத்தினர் மீது உரிய விசாரணை நடத்த வேண்டும் எனவும், கோவை மாவட்ட ஆட்சியர் மற்றும் மாநகர காவல் ஆணையாளரிடம் பாதிக்கப்பட்டவர்கள் புகார் மனு அளித்துள்ளனர். இது குறித்து பாதிக்கப்பட்டவர்கள் கூறுகையில், “தங்களை துபாயில் இருந்து ஐரோப்பாவிற்கு அனுப்புகிறோம் எனக் கூறி, அனைவரிடமும் 4 லட்சம் ரூபாய் வாங்கினார்கள்.

சிலரிடம் அட்வான்ஸ் தொகையாக 1 முதல் 2 லட்சம் வரை வாங்கினார்கள். அதன்பின்னர் தங்களை துபாய்க்கு விசிட் விசா மூலம் அனுப்பி விட்டு அங்கு சென்றதும் இரண்டு மூன்று நாட்களில் வேலை செய்வதற்கான பர்மிட் போட்டு தரப்படும் எனக் கூறி, ஒரு வார காலமாகியும் வரவில்லை. பின்னர், அங்குள்ள ஒரு பிரீமியர் எம்ளாய்மெண்ட் என்ற கன்சல்டன்சிக்கு சென்று பதிவு செய்யுமாறு கூறினார்கள்.

அங்கு சென்று பதிவு செய்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. அங்கு எங்களின் சொந்த பணத்தை செலவு செய்தே தங்கி வந்தோம். பின்னர், கோவையில் எங்களை அனுப்பியவர்களையே தொடர்பு கொண்டு கேட்டபோதும் முறையாக பதில் அளிக்கவில்லை, செல்போனையும் சுவிச் ஆப் செய்து விட்டார்கள். பிறகு எங்களில் ஒரு சிலர், அங்குள்ள நண்பர்களிடம் பணத்தை பெற்று இந்தியா திரும்பினோம்.

ஆனால் மற்றவர்கள் அவர்களின் விசிட் விசா முடிந்ததால், அந்நாட்டு போலீசாரால் கைது செய்யப்பட்டனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து விடுவிக்கப்பட்டு, சிரமப்பட்டுதான் இந்தியா திரும்பி உள்ளனர். எனவே வேலை பெற்றுத் தருவதாக மோசடி செய்த நிறுவனத்திடம் இருந்து எங்களது பணத்தை மீட்டுத் தந்து, அவர்கள் மீது உரிய விசாரணை மேற்கொள்ள வேண்டும்” என கேட்டுக் கொண்டனர்.

இதையும் படிங்க: முதலமைச்சர் குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு; தூத்துக்குடி பாஜக நிர்வாகி கைது!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.