ETV Bharat / state

கோவையில் தந்தை, மகன் கடத்தல்: 36 மணி நேரத்தில் அதிரடியாக மீட்ட போலீஸ்!

author img

By

Published : Apr 16, 2022, 9:41 PM IST

கோவையில் பணம் கொடுக்கல், வாங்கல் பிரச்னையில் 14 வயது சிறுவன் உள்பட மூவரை கடத்திச் சென்ற கர்நாடகாவைச் சேர்ந்த கும்பலை கைது செய்த காவல்துறையினர், கடத்தப்பட்ட மூவரையும் 36 மணி நேரத்தில் பத்திரமாக மீட்டு, கடத்தலுக்கு பயன்படுத்திய இரண்டு கார்களையும் பறிமுதல் செய்தனர்.

நான்கு பேர் கைது
நான்கு பேர் கைது

கோயம்புத்தூர்: கர்நாடகா மாநிலம், பெங்களூரு மகுடி சாலை காசோலி கிராஸ் பகுதியைச் சேர்ந்தவர், முகமது சாஸாத். இவர் பழைய இரும்பு மற்றும் மின்னணு கழிவுப் பொருட்கள் வியாபாரம் செய்து வருகிறார். இந்நிலையில் முகமது சாஸாத் தனது காரில் ஓட்டுநர் முகமது யாசீன், மகன் சையப் (14) உள்ளிட்டோருடன் கோவை சரவணம்பட்டி அருகே சென்று கொண்டிருந்தபோது, காரில் பின் தொடர்ந்து வந்த கும்பல் அவர்களை இடைமறித்து மூவரையும் கடத்திச்சென்றனர். இது தொடர்பான புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த கோவில்பாளையம் காவல்துறையினர் தனிப்படை அமைத்து விசாரணையை முன்னெடுத்தனர்.

இந்நிலையில் நேற்று (ஏப்ரல் 15) காலை கோவில்பாளையம் காவல்துறையினர் அத்திப்பாளையம் பகுதியில் ரோந்துப்பணியில் ஈடுபட்டிருந்த போது, அவ்வழியாக இரு காரில் வந்தவர்களிடம் விசாரணை மேற்கொண்டதில் முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்துள்ளனர். இதனால் சந்தேகமடைந்த காவல்துறையினர் அவர்களை காவல் நிலையம் அழைத்துச்சென்று விசாரித்தனர்.

நான்கு பேர் கைது

விசாரணையில் அவர்கள் பெங்களூருரைச் சேர்ந்த ஹசீம் அகமது (34), சையது அசார் (32), ஜூபைர் அகமது (27), முகமது மோசீன் (35) என்பதும், பணம் கொடுக்கல், வாங்கல் தகராறு காரணமாக முகமது சாஸாத், அவரது மகன் சையப், அவரது கார் ஓட்டுநர் முகமது யாசீன் ஆகியோரை காரோடு கடத்தியதும் தெரியவந்தது.

இதனையடுத்து கடத்தப்பட்ட மூவரையும் அவர்களிடமிருந்து பத்திரமாக மீட்ட தனிப்படை காவல்துறையினர் நால்வரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்திய இரு கார்களையும் பறிமுதல் செய்தனர். இந்த வழக்கில் கடத்தப்பட்ட நபர்களை 36 மணி நேரத்தில் தனிப்படை காவலர்கள் அதிரடியாக மீட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: காஷ்மீரில் பஞ்சாயத்து தலைவர் பயங்கரவாதிகளால் சுட்டுக்கொலை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.