ETV Bharat / state

"5 மாநில தேர்தலுக்கு ஸ்டாலினை பிரசாரம் செய்ய அழையுங்கள்" - இந்தியா கூட்டணியை கிண்டல் செய்த வானதி சீனிவாசன்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 31, 2023, 7:45 PM IST

vanathi srinivasan: 5 மாநில தேர்தல் களத்தில் திமுக கொள்கைகளை பேச முடியுமா என சவால் விடுத்துள்ள வானதி சீனிவாசன் ஸ்டாலின் பிரச்சாரம் செய்ய வருகிறேன் என்று சொன்னாலே காங்கிரஸ் கட்சியினர் அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள் என கிண்டல் செய்துள்ளார்.

வானதி ஸ்ரீனிவாசன்
வானதி ஸ்ரீனிவாசன்

கோவை: பாஜக தேசிய மகளிர் அணி தலைவரும், கோவை தெற்கு சட்டமன்ற உறுப்பினருமான வானதி சீனிவாசன் முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள ஆடியோ குறித்து விமர்சித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் 'இந்தியா' கூட்டணியை 'இண்டி' கூட்டணி என விமர்சித்துள்ளார்.

அவரது அறிக்கையில், "மாநில சுயாட்சி: உண்மையான கூட்டுறவுக் கூட்டாட்சியியலுக்கான எனது குரல்: என்ற தலைப்பில் ஆடியோ பதிவு வெளியிட்டுள்ள திமுக தலைவரும், முதலமைச்சருமான மு.க.ஸ்டாலின், "தனக்கென தனித்துவமான கொள்கைகளை கொண்ட கட்சி திமுக. நாடாளுமன்றத்தில் ஜனநாயகத்தைக் காக்க போராடும் கட்சி.

திமுகவின் கொள்கைகளில் முக்கியமானது, மாநில சுயாட்சி. இந்தியா கூட்டாட்சி தன்மை கொண்ட நாடு. பல்வேறு மொழிகள், இனங்கள், பண்பாடு, பழக்க வழக்கங்கள் கொண்ட மக்கள் வாழ்கிறார்கள். நம் மக்களிடம் ஏராளமான சமய நம்பிக்கைகள் உள்ளன. இந்தியா பல்வேறு மலர்கள் நிரம்பிய அற்புதமான பூந்தோட்டம். அதனால் தான், கூட்டாட்சி கொண்ட மாநிலங்களின் ஒன்றியமாக இந்தியாவை உருவாக்கினார்கள்” என்று வழக்கம்போல வசனம் பேசியிருக்கிறார்.

திமுகவுக்கென தனித்துவமான கொள்கைகள் இருப்பதாக ஸ்டாலின் சொன்னது உண்மைதான். அரை நூற்றாண்டுக்கு மேலாக ஒரு குடும்பத்திடம் மட்டும் கட்சித் தலைமை இருப்பதும், 'அப்பா, மகன், பேரன்' என மூன்றாவது தலைமுறை வாரிசு அரசியலும், 'அப்பா முதலமைச்சர், மகன் அமைச்சர், தங்கை எம்.பி, மாமன் மகன் எம்.பி' என ஒரே குடும்பத்தைச் சுற்றி அதிகாரம் குவிக்கப்பட்டுள்ளது.

திரை மறைவில் மருமகன் அதிகாரம் செலுத்துவதும், ஒவ்வொரு மாவட்டத்திலும் 'அப்பா அமைச்சர், மகன் எம்.பி அல்லது எம்.எல்.ஏ அல்லது மாவட்டச் செயலாளர்' என மன்னராட்சி போல கோலோச்சுவதும், ஊழலில் திளைப்பதும், திமுகவின் தனித்துவமான கொள்கைகள் தான். இவை ஒருநாளும் பாஜகவில் சாத்தியம் இல்லைதான்.

'எல்லாருக்கும் எதுவும் உண்டு' என்று சொல்லாமல், 'இன்னாருக்கு இதுதான்' என்று சொல்வதுதான் திமுகவின் திராவிடம். இதை ஒப்புக்கொண்ட முதலமைச்சர் ஸ்டாலின் அவர்களுக்கு கோடானு கோடி நன்றி. "படிப்படியாக ஒற்றை கட்சி - ஒற்றைத் தலைமை - ஒற்றை அதிகாரம் பொருந்திய பிரதமர் - என்று, உலகின் பெரிய ஜனநாயக அமைப்பையே சின்னாபின்னமாக்கி சிதைத்துக்கொண்டு இருக்கிறார்கள்.

மொத்தத்தில், பா.ஜ.க. ஆட்சியில் மாநில உரிமைகள் நசுக்கப்பட்டு, நம் அரசியல் சட்டம் தந்த கூட்டாட்சிக் கருத்தியல், ஜனநாயகம் என எல்லாம் மக்களோடு சேர்ந்து கண்ணீர் சிந்திக் கொண்டிருக்கிறது" என்றும் ஸ்டாலின் அவர்கள் கூறியிருக்கிறார்.

'ஒற்றை குடும்பம், ஒற்றை குடும்பத் தலைமை, ஒற்றை குடும்ப அதிகாரம்' என்பது தான் திமுக. மத்தியில் கூட்டாட்சி இல்லை என்று கதறும் முதலமைச்சர், தமிழ்நாட்டில் 10 கட்சிகளுடன் கூட்டணி வைத்து வெற்றி பெற்றும் தனித்து ஆட்சி அமைத்தது ஏன்? பாஜகவுக்கு தனிப்பெரும்பான்மை இருந்தும் கூட்டணி கட்சிகளுக்கு மத்திய அமைச்சரவையில் இடம் வழங்கப்பட்டுள்ளது. ஆனால், தேர்தல் வெற்றிக்கு மட்டும் கூட்டணி கட்சிகளை பயன்படுத்தி விட்டு, ஆட்சிக்கு வந்ததும் கூட்டணி கட்சிகளை கொத்தடிமைகளாக நடத்துவதும் தான் மாநில சுயாட்சியா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

2006 சட்டமன்றத் தேர்தலில் திமுகவுக்கு தனிப்பெரும்பான்மை கிடைக்கவில்லை. காங்கிரஸ், பாமக ஆதரவுடன் தான் ஆட்சி அமைத்தது. ஆனாலும், கூட்டணி கட்சிகளுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. இப்படிப்பட்ட தனித்துவமான கொள்கைகள் கொண்ட கட்சியின் தலைவரான ஸ்டாலின் அவர்கள், மத்தியில் கூட்டாட்சி பற்றி பேசுவது வேடிக்கையாக இருக்கிறது.

'மத்தியில் குடும்ப கட்சிகளின் கூட்டாட்சி', 'மாநிலங்களில் ஒற்றை குடும்ப கொள்ளை ஆட்சி' இதுதான் 'இண்டி' கூட்டணி கட்சிகளின் அறிவிக்கப்படாத அடிப்படை கொள்கை. அதைத் தான் வெவ்வேறு அலங்கார வார்த்தைகளில் அண்ணன் ஸ்டாலின் முழங்கிக் கொண்டிருக்கிறார்

பாரதம் என்பது மாநிலங்களின் கூட்டமைப்பு அல்ல. முதலில் பாரதம் என்றுதான் நாடு உருவானது. நிர்வாக வசதிக்காகவே மாநிலங்கள் பிரிக்கப்பட்டன. இப்போதும் பிரிக்கப்பட்டு வருகின்றன. எதிர்காலத்திலும் பிரிக்கப்படும். விடுதலை அடைந்த போது தமிழ்நாடு, ஆந்திரம், கர்நாடகம், கேரளம் போன்ற மாநிலங்கள் இல்லை.

இந்தியா பல்வேறு மலர்கள் கொண்ட அற்புதமான பூந்தோட்டம் தான். அதில் எந்த சந்தேகமும் இல்லை. ஆனால், திமுக ஒரு குறிப்பிட்ட மதத்தின் மீது அதீத வெறுப்பை கக்குவது ஏன்? அதை ஒழிப்பேன் என இப்போதும் பேசுவது ஏன்? இந்து மத பண்டிகைகளுக்கு மட்டும் வாழ்த்து கூற விடாப்பிடியாக மறுப்பது ஏன்? மற்ற மத நிகழ்வுகளுக்குச் சென்றால் அவர்களின் மத அடையாளங்களை அணியும் முதலமைச்சர் ஸ்டாலின் அவர்கள், இந்து கோயில் விபூதி, குங்குமம் வைத்தால் சட்டென அழிப்பது ஏன்? இப்படி வெறுப்பை உமிழ்வது தான் பல்வேறு மலர்கள் கொண்ட அற்புத பூந்தோட்டமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

மேலும் இந்தி மொழி, இந்து மதம், தேசியத்திற்கு எதிரான கட்சி திமுக என்பதால், 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் தங்களுக்கு ஆதரவாக திமுக பேசுவதை காங்கிரஸ் விரும்பவில்லை. அதனால் தான், 5 மாநில சட்டமன்றத் தேர்தலில் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் என்று நேரடியாக சொல்லாமல், பாஜகவை விமர்சித்து,
இதை உணர்ந்து மக்கள் வாக்களிக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திமுகவுக்கு தங்கள் கொள்கைகள் மீது நம்பிக்கை இருந்தால் இந்த ஆடியோவில் பேசியதை, 5 மாநில தேர்தல் களத்தில் பேச முடியுமா என சவால் விடுக்கிறேன். ஸ்டாலின் அவர்கள் பிரச்சாரம் செய்ய வருகிறேன் என்று சொன்னாலே காங்கிரஸ் கட்சியினர் அலறி அடித்துக் கொண்டு ஓடி விடுவார்கள்.

'இண்டி' கூட்டணியின் கையில், இந்தியாவை ஒப்படையுங்கள் என ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார். தமிழ்நாட்டில் உள்ள குடும்ப, ஊழல் ஆட்சி மத்தியிலும் வேண்டும் என்கிறார். வரும் மக்களவைத் தேர்தலில் தமிழ்நாட்டு மக்களும் சேர்ந்து திமுக உள்ளிட்ட 'இண்டி' கூட்டணியை விரட்டி அடிப்பார்கள் என்பதில் சந்தேகம் இல்லை” என குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: ஆளுநர் மாளிகை பெட்ரோல் குண்டு வீச்சு: ஆளுநர் மாளிகை அதிகாரிகள் மீது புகார்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.