ETV Bharat / state

புக்கர் பரிசு பட்டியலில் 'பூக்குழி' தமிழுக்கு கிடைத்த பெருமை!

author img

By

Published : Mar 15, 2023, 7:32 AM IST

புக்கர் பரிசு பட்டியலில் தமிழ் நாவல் பூக்குழி இடம்பெற்றிருப்பது தமிழுக்கு கிடைத்த பெருமை என அந்த நாவலின் எழுத்தாளர் பெருமாள் முருகன் தெரிவித்துள்ளார்.

The inclusion of the Tamil novel Pookuzhi in the Booker Prize list is an honor for Tamil
புக்கர் பரிசு பட்டியலில் தமிழ் நாவலான பூக்குழி இடம்பெற்றிருப்பது தமிழுக்கு கிடைத்த பெருமை

சென்னை: சர்வதேச புக்கர் பரிசின் பரிசீலனை பட்டியலில் எழுத்தாளர் பெருமாள் முருகன் எழுதிய பூக்குழி நாவலின் ஆங்கில பொழிபெயர்ப்பான பைர் (Pyre) நாவல் இடம்பெற்றுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் லண்டனில் சர்வதேச புக்கர் பரிசு வழங்கும் நிகழ்ச்சி நடத்தப்படுகிறது. இதில், ஏதாவது ஒரு மொழியில் எழுதப்பட்ட நாவலை ஆங்கிலத்தில் மொழிபெயர்ப்பு செய்து பிரிட்டனிலும், அயர்லாந்திலும் பதிப்பிக்கப்படும் நாவலுக்கு வழங்கப்படுகிறது. இதற்கு முன்பாக புனைவுகளுக்கான புக்கர் பரிசு என்ற பெயரிலும், மான் புக்கர் பரிசு என்ற பெயரிலும் வழங்கப்பட்டது. இதற்காக எழுத்தாளர்கள், நூலகர்கள், இலக்கிய முகவர்கள் என ஏழு பேர் கொண்டு குழு அமைக்கப்பட்டுள்ளது.

2023ஆம் ஆண்டின் சர்வதேச புக்கர் விருதுக்கான பரிசீலனை பட்டியல் அறிவிக்கப்படுள்ளது. முதல் கட்டமாக 11 மொழிகளில் எழுதப்பட்ட 13 நாவல்கள் பரிசீலனை பட்டியலில் இடம்பெற்றுள்ளன. இதில், தமிழில் எழுதப்பட்டு மொழி பெயர்க்கப்பட்ட 'பைர்' (Pyre), ஸ்வீடிஷ் நாவலான A System So Magnificent It Is Blinding, சீன மொழியில் எழுதி மொழிபெயர்க்கப்பட்ட Ninth Building உள்ளிட்ட நாவல்கள் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளன. மேலும் தமிழ், கேடலான், பல்கேரியா ஆகிய மொழிகளில் எழுதப்பட்ட நாவல்கள் முதல் முறையாக இந்த பரிசீலனைப் பட்டியலில் இடம்பெற்றுள்ளது. இதில் பரிசைப் பெறும் நாவலுக்கு 50 ஆயிரம் பவுண்டுகள் வழங்கப்படும்.

இது குறித்து நம்மிடையே பேசிய பூக்குழி நாவலின் எழுத்தாளர் பெருமாள் முருகன், "பூக்குழி நாவல் சர்வதேச புக்கர் பரிசு பரிசீலனை பட்டியலில் இடம் பெற்றிருப்பது மிக்க மகிழ்ச்சி. இது தமிழுக்கு கிடைத்த பெருமை. 2011ஆம் ஆண்டு கல்கி பத்திரிகையில் தொடராக எழுதிய நாவல் பூக்குழி. அந்த சமயத்தில் ஆணவப்படுகொலை குறித்து அதிகமாக பேசப்பட்டது. சமூக வலையதளங்கள் இல்லாத காலகட்டத்தில் ஆணவப்படுகொலை அதிகளவில் நடைபெற்றாலும் வெளியே தெரியாத சூழ்நிலை இருந்தது. அந்த சமயத்தில் பூக்குழி நாவல் எழுதினேன். இதில் ஆணவக்கொலைக்கு இந்த சமூகம் எப்படி தூண்டுகிறது என்பதை மையமாக வைத்து எழுதியுள்ளேன். இதை அனிருத் வாசுதேவன் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்துள்ளார்" எனக் கூறினார்.

The inclusion of the Tamil novel Pookuzhi in the Booker Prize list is an honor for Tamil
தமிழ் நாவல் பூக்குழி

தொடர்ந்து பேசிய அவர், "2017ஆம் ஆண்டு ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டது. யூ.கே எடிஷனாக (UK Edition) 2021ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. தற்போது புத்தக வெளியீட்டாளர்கள் மூலம் சர்வதேச புக்கர் பரிசு விருதுக்கு அனுப்பப்பட்டு பரிசீலனை பட்டியலில் இடம்பெற்றுள்ளது. நம்முடைய படைப்புகளை ஆங்கிலத்திலும் பிற மொழியிலும் கொண்டு செல்ல வேண்டும். அப்போது தான் இது போன்ற உரிய அங்கீகாரம் கிடைக்கும். தற்போது முதல் கட்டமாக 13 நாவல்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளது. இரண்டாம் கட்டமாக ஏப்ரல் 18ஆம் தேதி 5 நாவல்கள் தேர்வு செய்யப்பட்டு அறிவிக்கப்படும். பின்னர் மே மாதத்தில் இறுதியாக ஒரு நாவல் அறிவிக்கப்படும்" என கூறினார்.

மேலும், பூக்குழி நாவல் குறித்து பேசிய எழுத்தாளர் பெருமாள் முருகன், "ஆண் அல்லது பெண் ஆகிய இருவரில் யார் ஒடுக்கப்பட்ட இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும் ஆணவக் கொலைகள் நடப்பதற்கு வாய்ப்புள்ளது. நாவலின் கருவானது குமரேசன் என்பவர் சரோஜாவைக் காதலித்து, திருமணம் செய்துகொள்கிறார். இருவரும் வெவ்வேறு ஜாதியைச் சேர்ந்தவர்கள். சரோஜா பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் ஆவார். தனது சொந்த கிராமத்திற்கு குமரேசன் சரோஜாவை அழைத்து வருகிறார். கடுமையான ஏழ்மையில் வாழ்ந்தாலும் ஜாதிப் பெருமிதத்துடன் வாழும் குமரேசனின் தாயார், இவர்களது திருமணத்தை ஏற்கவில்லை.

தன் தாயிடமும், கிராமத்தினரிடமும் தனது மனைவியின் ஜாதியைச் சொல்லாமல் தொடர்ந்து மறைத்து வந்த குமரேசன், ஒரு தருணத்தில் சரோஜா பட்டியலினத்தைச் சேர்ந்த பெண் என்பது கிராமத்தினருக்கு தெரிய வருகிறது. இதனால் அனைவரும் சேர்ந்து சரோஜாவை கொல்ல முயல்கின்றனர். பிறகு சரோஜாவும் குமரேசனும் என்ன ஆனார்கள் என்பதே இந்த நாவலின் மீதிக் கதையாக இருக்கும். கடைசியில் அந்தப் பெண் என்ன ஆனாள் என்பதைத் நம்பிக்கையூட்டும் விதமாக முடித்திருப்பேன்" என கூறினார்.

The inclusion of the Tamil novel Pookuzhi in the Booker Prize list is an honor for Tamil
பூக்குழியின் ஆங்கில பதிப்பான பைர்

காதல் திருமணமும், கலப்புத் திருமணமும் நம் சாதியச் சமூகத்தால் எப்படி எதிர்கொள்ளப்படுகின்றன என்பதை விளக்கும் சான்றாக பூக்குழி நாவல் பார்க்கப்படுகிறது. சர்வதேச புக்கர் பரிசு விழாவில் 13 பேர் கொண்ட பட்டியலில் தமிழ் நாவல் இடம்பெற்றிருப்பது பெருமையாக கருதப்படுகிறது. கடந்த ஆண்டு இலங்கையை சேர்ந்த எழுத்தாளர் செகான் கருணாதிலக்க எழுதிய The seven moons of maali almeida என்ற நாவலுக்கு சர்வதேச புக்கர் பரிசு வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: அழகன்குளம் அகழ்வாராய்ச்சி மீண்டும் நடத்தப்படுமா? - அரசுக்கு உயர் நீதிமன்றக்கிளை கேள்வி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.