ETV Bharat / state

ஆபாசப் படங்கள் பார்ப்பது ஏன் குற்றமில்லை? உயர் நீதிமன்றத்தின் தீர்ப்பால் என்ன விளைவு? சட்ட நிபுணர்கள் கூறுவது என்ன?

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 15, 2024, 10:29 AM IST

Updated : Jan 15, 2024, 12:52 PM IST

Etv Bharat
Etv Bharat

ஆபாசப் படம் பார்ப்பது கிரிமினல் குற்றமில்லை எனவும், இதனால் அடிமையாகும் குழந்தைகளுக்கு உளவியல் சிகிச்சையே தேவை எனவும், உயர் நீதிமன்றம் கூறியுள்ள நிலையில், இந்த தீர்ப்பால் ஏற்படும் விளைவுகள் மற்றும் பாதிப்புகள் என்ன என்பது குறித்து பொது ஆர்வலர்களின் கருத்துகளை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு..

சென்னை : ஆபாசப் படங்கள் பார்ப்பது குற்றமா? என்ற கேள்விக்கு பலரின் பதில், குற்றம் என்பதாகவே இருக்கும். ஆனால் சட்டங்களால் செயல்படும் நீதிமன்றங்கள் தனிமனித சுதந்திரம் பாதிக்காத வரையில் யாருக்கும் தண்டனை விதிக்க முடியாது என தனது தீர்ப்பின் மூலமாக மீண்டும் தெளிவுபடுத்தி உள்ளது.

கடந்த 2020ஆம் ஆண்டு சென்னை அம்பத்தூரைச் சேர்ந்த இளைஞர், தனது கைபேசியில் குழந்தைகள் தொடர்பான ஆபாச படங்களை பதிவிறக்கம் செய்து பார்த்ததாக அம்பத்தூர் காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கு தொடர்பாக திருவள்ளூர் மாவட்ட குழந்தைகள் பாதுகாப்பு போக்சோ சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்று வந்தது.

ஆபாசப்படங்கள் பகிர்வதே குற்றம்? : இந்நிலையில், தனக்கு எதிரான வழக்கையும், முதல் தகவல் அறிக்கையையும் ரத்து செய்ய வேண்டும் என இளைஞர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், தகவல் தொழில்நுட்ப சட்டம் 2000, பிரிவு 67-B, பாலியல் குற்றங்களில் இருந்து குழந்தைகள் பாதுகாப்பு சட்டம் (போக்சோ) 2012, பிரிவு 14(1) படி ஆபாச படங்கள் பார்த்ததை குற்றமாக கருத முடியாது. பகிர்வதையே குற்றமாக கருத முடியும் எனக் கூறியது.

தற்போது, புகைப்பிடித்தல் மற்றும் மது அருந்துதல் போல ஆபாச படங்கள் பார்ப்பதும் வளர் இளம் பருவத்தினரிடம் வழக்கமாக மாறி வருகிறது. இயற்கையாகவே ஆபாசப் படங்கள் மீதான ஈர்ப்பு அதிகரிக்கும் என்பதை புரிந்து கொள்ள முடிகிறது. இன்றைய இளைஞர்கள் சந்திக்கும் மிகப்பெரிய சவால் தங்கள் கைகளில் இருக்கும் கைபேசிதான். ஒரு சொடுக்கில் நூற்றுக்கணக்கான தகவல்களும், பக்கங்களும் தணிக்கை செய்யப்படாமல் அப்படியே அவர்களுக்கு கிடைக்கிறது.

ஆய்வு முடிவுகள் :

* சமீபத்திய ஆய்வில்,18 வயதுக்கு முன்பாகவே 10 பேரில் 9 சிறுவர்கள் ஆபாசம் படம் தொடர்பாக அறிந்துள்ளனர்.

* 18 வயதுக்கு முன்பாகவே 10ல் 6 சிறுமிகள் ஆபாச படம் குறித்து அறிந்துள்ளனர்.

* சராசரியாக ஒரு ஆண் தனது 12 வயதில் ஆபாச படங்கள் குறித்து அறிமுகம் பெறுகிறார்.

* 71 சதவிகித வளர் இளம் பருவத்தினர் இணையதள செயல்பாடுகளை தங்கள் பெற்றோருக்கு தெரியாமல் மறைத்து விடுகின்றனர்.

* 12 வயது முதல் 17 வயது வரை உள்ள வளர் இளம் சிறுவர்கள் ஆபாச படங்களுக்கு அடிமையாக அதிகப்படியான வாய்ப்புகள் உள்ளன.

* ஆபாசப் படங்கள் பார்ப்பது எதிர்மறையான எண்ணங்களை ஏற்படுத்துவதோடு, மனம் மற்றும் உடல்ரீதியாக வளர் இளம் பருவத்தினர் பாதிக்கப்படுகின்றனர்.

அதனால், பள்ளி மாணாக்கர்களிடையே விழிப்புணர்வை ஏற்படுத்துவன் மூலம், தேவையற்ற தவறான தகவல்களை ஒழிக்க முடியும் என உச்ச நீதிமன்றம் தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

K.M. Vijayan, Senior Advocate
கே.எம். விஜயன், மூத்த வழக்கறிஞர்

பொது ஆர்வலர்களின் கருத்து என்ன : நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பு குறித்து மூத்த வழக்கறிஞர் கே.எம் விஜயனிடம் ஈ.டிவி பாரத் தமிழ்நாடு கருத்து கேட்டபோது, "லண்டன் நீதிபதி, பிளாக் பர்ன் என்ற தனது தீர்ப்பில் "தனியுரிமை" (Rights to privacy) என்ற பகுதியில் ஆபாசப்படம் பார்ப்பது தவறா? எப்போது குற்றமாக அது கருதப்படும்? என்பதை விளக்கமாக குறிப்பிட்டுள்ளார்.

அதில், ஆபாசப் படங்களை மற்றவருக்கு அனுப்புவதே குற்றமாக கருதி தண்டனை விதிக்க முடியும். தனிப்பட்ட முறையில் வீடியோ பார்ப்பவருக்கு தண்டனை விதித்தால் "தனி மனித உரிமையை" பாதிக்கும். எந்த நாட்டின் சட்டமும் தனி மனித உரிமையை மீறும் போதும் மட்டுமே தண்டனைகளை விதிக்க முடியும் என்பதையே தீர்ப்பின் மூலமாக நீதிபதி ஆனந்த வெங்கடேஷ் தெளிவுபடுத்தி உள்ளார். மேலும், சுய இன்பத்தை குற்றமாக கருத முடியாது எனவும் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளதால், ஆபாசப் படம் பார்ப்பதை குற்றமாக கருத முடியாது. சுய கட்டுப்பாடுகள் இருந்தால் இதுபோன்ற பழக்கத்திற்கு அடிமையாகாமல் இருக்கலாம்" என்று தெரிவித்தார்.

Raja Chendur Pandian, Advocate
ராஜ செந்தூர் பாண்டியன், வழக்கறிஞர்
ராஜா செந்தூர்பாண்டியன், வழக்கறிஞர் : ஆபாசப் படங்களை பார்ப்பது என்பது குற்றம் என எந்த நாட்டின் சட்டமும் சொல்லவில்லை. மற்றவருக்கு அனுப்பாமல், பலர் முன்னிலையில் பொது வெளியில் பார்ப்பதும் தண்டனைக்குரிய குற்றமாகும்.

வெளிநாட்டு ஆபாச வீடியோக்களை பார்ப்பதை இந்தியாவில் தடை செய்யவில்லை. ஒரே பாலினத்தவர்கள் திருமணம் செய்தை கொள்வதும், சேர்ந்து வாழ்வதும் தவறு இல்லை என காலமாற்றத்திற்கு ஏற்ப மாறி வருகிறோம். தகுந்த எச்சரிக்கைக்கு பின் வீடியோ வெளியாட்டால் குறைக்க வாய்ப்பு உள்ளது. பாலியல் தொடர்பாக புரிதல் இல்லாத வரை ஆபாச வீடியோ பார்ப்பதை தடுக்க முடியாது.

அபிலாஷ், மனநல மருத்துவர் : ஆபாசப் படம் பார்ப்பது, புகைப்பிடித்தல், மது அருந்துதல் பழக்கத்தை விட அதிகமாக அடிமைப்படுத்தி விடும், ஆனால் உரிய கவுன்சிலிங் அளித்தால் எளிதில் குணப்படுத்திவிடலாம். இணையதளங்களில் தடை இல்லாமல் எளிதில் கிடைப்பதால் சிறுவர்கள் தொடங்கி வளர் இளம் பருவத்தினர் என அனைவரும் எளிதில் மீண்டும் மீண்டும் பார்க்க தூண்டப்படுகின்றனர்.

பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளின் செயல்பாடுகளை தொடர்ந்து கண்காணிக்க வேண்டும். குழந்தைகளின் செயல்பாடுகள் மாறுபடும் போது உரிய வழிகாட்டுதல்கள் மூலம் ஆபாச படங்கள் பார்க்கும் பழக்கத்தில் இருந்து தடுக்க முடியும். அரசும் ஆபாச இணையதளங்களை முழுமையாக முடக்கலாம். வயது மற்றும் உரிய அடையாள பதிவுக்கு பின் படங்களை பார்க்க அனுமதித்தால் சிறுவர்கள் ஆபாசப் படங்கள் பார்ப்பதை முழுமையாக தடுக்க முடியும்" என்று நம்பிக்கை தெரிவித்தார்.

இதையும் படிங்க : “அயோத்தியில் ராமர் கோயில் கட்டியதைக் காட்டி பாஜக தங்கள் தோல்வியை மறைக்கப் பார்க்கிறது” -டி.ஆர்.பாலு விமர்சனம்!

Last Updated :Jan 15, 2024, 12:52 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.