ETV Bharat / state

உரைகளில் அடிக்கடி தெறிக்கும் 'இந்தி' பிரதமராகும் லட்சியம் உள்ளதா? - முதலமைச்சர் ஸ்டாலினின் நச் பதில்!

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 28, 2023, 7:07 PM IST

Updated : Oct 29, 2023, 9:30 AM IST

MK Stalin with Etv Bharat: தி.மு.க. இப்போது தேசிய அரசியலில் அழுத்தமாக காலூன்ற முயல்கிறதா? உங்கள் உரைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியிலும் வெளியாகின்றன. பிரதமராகும் லட்சியம் இருக்கிறதா என்று ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணனன் சுடலை மின்னஞ்சல் வாயிலாக எழுப்பிய கேள்விக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மனம் திறந்து பதில் அளித்துள்ளார்.

மு க ஸ்டாலின்
மு க ஸ்டாலின்

சென்னை: 2024 நாடாளுமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் மட்டுமே உள்ள நிலையில், ஆளும் பாஜக அரசுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் ஒன்றிணைந்து மாபெரும் கூட்டணியை உருவாக்கி அதற்கு 'இந்தியா' என பெயர் சூட்டியுள்ளனர். இந்த கூட்டணியில் காங்கிரஸ், திமுக, திரிணாமுல், ஆம் ஆத்மி உள்ளிட்ட கட்சிகள் இடம்பெற்றுள்ள நிலையில், பாஜகவானது காங்கிரஸ் மற்றும் திமுகவை குறிவைத்து கடும் விமர்சங்களை முன் வைத்து வருகிறது. இந்த பரபரப்பான அரசியல் சூழலில் மாநில கட்சியாக இருக்கும் திமுகவானது தேசிய கவனத்தை பெற்றுள்ளது.

இந்த நிலையில், தென் இந்தியாவில் இருந்து ஒருவர் பிரதமராக வரவேண்டும் என்ற பேச்சும் எழுகிறது. தற்போது நாடாளுமன்றத்தில் மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கும் திமுக வரவிருக்கும் நாடாளுமன்றத் தேர்தலில் கடந்த தேர்தலை போல பெரும் வெற்றியை பதிவு செய்தால் அந்த வாய்ப்பு திமுகவுக்கு வரலாம் என்றும் முன்னொரு காலத்தில் பிரதமரை உருவாக்கும் கிங் மேக்கராக காமராஜர் விளங்கியதை போல் திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் உருவெடுக்கலாம் அல்லது அவரே கூட பிரதமராகலாம் என்று திமுகவினர் பேசி வருகின்றனர்.

இப்படியான பரபரப்பான அரசியல் சூழலில், தி.மு.க. இப்போது தேசிய அரசியலில் அழுத்தமாக காலூன்ற முயல்கிறதா? உங்கள் உரைகள் முன்னெப்போதும் இல்லாத அளவில் இந்தியிலும் வெளியாகின்றன. பிரதமராகும் லட்சியம் தி.மு.க. தலைவர் - முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு இருக்கிறதா? என மின்னஞ்சல் வாயிலாக முதலமைச்சரிடம் ஈடிவி பாரத் தமிழ்நாடு ஆசிரியர் சங்கரநாராயணன் சுடலை கேள்வி எழுப்பி இருந்தார்.

அதற்கு, பதில் அளித்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் "தேசிய அரசியலில் தி.மு.க. ஏற்கனவே மூன்றாவது பெரிய கட்சியாக இருக்கிறது. தன் அழுத்தமான முத்திரையை கடந்த 40 ஆண்டுகளுக்கும் மேலாகப் பதித்து இன்றைக்கு இந்தச் சிகரத்தை எட்டியுள்ளது. வங்கிகள் தேசியமயம் உள்ளிட்ட முற்போக்கான செயல்பாடுகளுக்காக பிரதமர் இந்திரா காந்தி அவர்களின் அரசுக்கு உறுதுணையாக நின்று தேசிய அரசியலில் தி.மு.க.வின் முத்திரையைப் பதிக்கச் செய்தவர் தலைவர் கலைஞர்.

நெருக்கடி நிலைக் காலத்தில் இந்தியாவின் எந்த மாநிலமும் முன்னெடுக்காத ஜனநாயக உரிமைக்குரலை முன்னெடுத்து, வடஇந்திய அரசியல் தலைவர்களும் சுதந்திரக் காற்றைச் சுவாசிக்க தமிழ்நாட்டில் களம் அமைத்துக் கொடுத்தவர் கலைஞர். சமூகநீதிக் காவலர் வி.பி.சிங் தலைமையிலான தேசிய முன்னணி அரசின் முதுகெலும்பாக இருந்தது தி.மு.கழகம். அதன் காரணமாக இதர பிற்படுத்தப்பட்டவர்களுக்கான 27% இடஒதுக்கீடு வழங்க வித்திட்டு, அணையா விளக்கான “சமூகநீதி”யை இந்தியா முழுமைக்கும் ஏற்றி வைத்தது.

தி.மு.க. இருக்கும் இடத்தில் மதவாதம் இருக்காது என்ற பாராட்டைப் பெறும் விதத்தில், குறைந்தபட்ச பொது செயல்திட்டத்துடன் வாஜ்பாய் அரசுக்கு ஆதரவளித்து, இந்தியாவில் கூட்டணி அரசு தன் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்ய முடியும் என்பதற்கு உறுதுணையாக நின்று, ஒன்றியத்தில் நிலையான ஆட்சிக்கு வித்திட்டது கலைஞரின் தி.மு.கழகம்தான்.

இரண்டு முறை டாக்டர் மன்மோகன்சிங் பிரதமராகப் பொறுப்பேற்ற ஐக்கிய முற்போக்குக் கூட்டணியிலும் தி.மு.க. முதன்மையாக இருந்தது. குடியரசுத் தலைவர் தேர்தல்களில் தி.மு.க.வின் நிலைப்பாடுகள் தேசிய அளவில் கவனம் பெற்று, வெற்றிகரமாக அமைந்துள்ளன. தலைவர் கலைஞரின் வழியில், நாட்டின் இன்றையச் சூழலையும், சமூக வலைத்தளங்கள் உள்ளிட்ட தகவல் தொழில்நுட்ப வளர்ச்சியைக் கருத்தில்கொண்டும் இந்தியா கூட்டணியின் செயல்பாட்டில் தி.மு.க தன் பங்களிப்பை விரிவுபடுத்தியுள்ளது. என் உயரம் எனக்குத் தெரியும் என்று சொன்னவர் எங்கள் தலைவர் கலைஞர். மு.க.ஸ்டாலினுக்கும் தன் உயரம் நன்றாகத் தெரியும்" என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பதில் அளித்து உள்ளார்.

இதையும் படிங்க: சாதிவாரி கணக்கெடுப்புக்கு மத்திய அரசை எதிர்பார்த்து காத்திருப்பது ஏன்? - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பிரத்யேக பேட்டி

Last Updated : Oct 29, 2023, 9:30 AM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.