ETV Bharat / state

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்: அனைத்து மருத்துவமனைகளுக்கும் பொது சுகாதாரத்துறை உத்தரவு!

author img

By

Published : May 31, 2022, 3:40 PM IST

கொசுக்கள் மூலம் பரவும் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அவர்கள் விவரங்களை உடனடியாகத் தெரிவிக்க வேண்டும் என்று மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் உத்தரவிட்டுள்ளது.

வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்
வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல்

சென்னை: மாநில பொது சுகாதாரத்துறை இயக்குநரகம் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அனுப்பி உள்ள உத்தரவில், "க்யூலெக்ஸ் எனப்படும் ஒரு வகை கொசுக்கள் மூலம் இந்த நோய்ப் பரவுகிறது. கடுமையான காய்ச்சல், உடல் வலி, தலைவலி, கால் வீக்கம் போன்றவை முக்கிய அறிகுறிகளாகக் கருதப்படுகின்றன.

இந்தக் காய்ச்சலுக்கு உரிய சிகிச்சைகள் எடுத்துக்கொள்ளாமல் இருந்தால், நரம்புசார்ந்த பிரச்னைகளும், சில நேரங்களில் உயிரிழப்பும் ஏற்படக் கூடும் என மருத்துவர்கள் எச்சரிக்கின்றனர். பொதுவாக டெங்கு, சிக்குன் குனியா போன்ற நோய்களைப் பரப்பும் கொசுக்கள் நல்ல தண்ணீரில் வளரக்கூடியவை ஆகும்.

முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரம்: அதேவேளையில் வெஸ்ட் நைல் காய்ச்சலைப் பரப்பும் க்யூலெக்ஸ் கொசுக்கள் அசுத்தமான கழிவுநீரில் வளரக் கூடியவையாக உள்ளன. 1937இல் ஆப்பிரிக்க நாடுகளில் இந்தக் காய்ச்சல் பாதிப்பு கண்டறியப்பட்டது. ஆசியாவில் டெங்கு, சிக்குன் குனியா தாக்கம் இருந்தாலும், கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு வரை வெஸ்ட் நைல் காய்ச்சல் பரவவில்லை.

இந்தியாவில் முதன்முறையாக 2011இல் கேரளாவில் ’வெஸ்ட் நைல் காய்ச்சல்’ பாதிப்பு கண்டறியப்பட்டது. அதன் தொடர்ச்சியாக, பலர் அதற்குப் பாதிக்கப்பட்டனர். இந்த நிலையில் தற்போது மீண்டும் கேரளாவில் ’வெஸ்ட் நைல் வைரஸ்’ காய்ச்சல் தீவிரமாகப் பரவி வருகிறது. திருச்சூரில் 47 வயது நபர் ஒருவர் பாதிக்கப்பட்டு உயிரிழந்துள்ளார்.

இதனால், தமிழ்நாட்டில் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. பொது சுகாதாரத்துறை சார்பில் அனைத்து மருத்துவமனைகளுக்கும் அறிவுரைகள் வழங்கப்பட்டுள்ளன. ’வெஸ்ட் நைல் காய்ச்சல்’ அறிகுறிகளுடன் யாரேனும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டால், அதுகுறித்த விவரங்களை உடனடியாக மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குநர்களிடம் அளிக்க வேண்டும்"எனக் கூறப்பட்டுள்ளது.

பொதுமக்கள் செய்ய வேண்டியவை: இதுகுறித்து பொது சுகாதாரத்துறை அலுவலர்கள் கூறியதாவது, "தமிழ்நாட்டில் இதுவரை வெஸ்ட் நைல் காய்ச்சல் பாதிப்பு பதிவாகவில்லை. அதனால், அதுகுறித்த அச்சம் தேவையில்லை. அதேவேளையில், அதற்கான அறிகுறிகள் இருந்தால் அலட்சியப்படுத்தாமல் உடனடியாக மருத்துவமனையில் பரிசோதனை செய்துகொள்ளவேண்டும். ரத்தப் பரிசோதனைகள் மூலம் வெஸ்ட் நைல் பாதிப்பு உள்ளதா? என்பதை உறுதிப்படுத்த முடியும்.

இதைத் தவிர, தங்களது சுற்றுப்புறத்தில் கழிவுநீர் தேங்காமல் தூய்மையாக வைத்துக்கொள்ள பொதுமக்கள் ஒத்துழைக்க வேண்டும். உள்ளாட்சி அமைப்புகளுடன் இணைந்து கழிவுநீர் தேங்காமல் தடுக்கும் பணிகளை பொது சுகாதாரத்துறை மேற்கொண்டு வருகிறது" எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.