ETV Bharat / bharat

கேரளாவில் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு!

author img

By

Published : May 29, 2022, 9:13 PM IST

கேரளாவில் பரவி வரும் வெஸ்ட் நைல் காய்ச்சலுக்கு முதல் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது. திருச்சூர் மாவட்டத்தில் நோய்க்கட்டுப்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெறுகின்றன.

West Nile fever
West Nile fever

திருவனந்தபுரம்: கேரளாவில் வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சல் பரவி வருகிறது. இந்த வைரஸ், கொசுக்கள் மற்றும் பறவைகள் மூலம் மனிதர்களுக்கு பரவுகிறது. இந்த வகை வைரஸ்கள் நேரடியாக ஒருவரிடம் இருந்து மற்றவருக்குப் பரவாது என்றும், ரத்த தானம், உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை போன்றவற்றின் மூலம் பரவ வாய்ப்புள்ளதாகவும் கூறப்படுகிறது.

தலைவலி, காய்ச்சல், தசைவலி, சோர்வு ஆகியவை இந்த நோயின் அறிகுறிகளாகும். திருச்சூர் மாவட்டத்தில் இரண்டு வாரங்களுக்கு முன்பு 47 வயதான நபருக்கு வெஸ்ட் நைல் காய்ச்சல் கண்டறியப்பட்டது.

அவருக்கு திருச்சூர் மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வந்தது. இந்த நிலையில் அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துவிட்டதாக கேரள அரசு தெரிவித்துள்ளது. கடந்த மூன்று ஆண்டுகளில் தென் மாநிலங்களில், வெஸ்ட் நைல் வைரஸ் காய்ச்சலால் ஏற்பட்ட முதல் உயிரிழப்பு இது எனத் தெரிகிறது.

இதையடுத்து, திருச்சூர் மாவட்டத்தில் கொசு உற்பத்தியாகும் இடங்களை கண்டறிந்து அழித்தல், மாதிரிகள் சேகரித்தல் உள்ளிட்ட நடவடிக்கைகளில் கேரள அரசு ஈடுபட்டுள்ளது. பொதுமக்கள் தங்களது குடியிருப்பு மற்றும் சுற்றுப்புறங்களை கொசு உற்பத்தி ஆகாத வண்ணம் சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெஸ்ட் நைல் காய்ச்சல் 1937இல் உகாண்டாவில் முதன்முறையாக கண்டறியப்பட்டது. 2019இல் கேரளாவின் மலப்புரம் மாவட்டத்தில் 6 வயது சிறுவன் வெஸ்ட் நைல் காய்ச்சல் உயிரிழந்தார். அதற்குப் பிறகு தற்போது மீண்டும் ஒரு உயிரிழப்பு ஏற்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மலேரியாவை தடுக்குமா ஜீன் டிரைவ்?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.