ETV Bharat / state

எத்தனை முறை வேண்டுமானாலும் கிராம சபை - சென்னை உயர்நீதிமன்றம்

author img

By

Published : Oct 6, 2021, 6:58 PM IST

கிராம ஊராட்சிகள் தேவைப்படும்போது எத்தனை முறை வேண்டுமானாலும் கிராம சபைகளைக் கூட்டிக்கொள்ளலாம். அரசிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை என சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

கிராம சபை
கிராம சபை

சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா தொற்று குறைந்துள்ளதால் அக்டோபர் இரண்டாம் தேதி கிராமசபை கூட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு ஆணை பிறப்பித்தது. இந்நிலையில், கடலூர் மாவட்டம் விருதாச்சலம் ஒன்றியம் ராஜேந்திரபட்டினம் கிராம ஊராட்சித் தலைவர் சுரேஷ் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்தார்.

அதில், கிராமசபை கூட்டத்தை நடத்த அனுமதி கோரி மாவட்ட ஆட்சியரிடம் விண்ணப்பித்தும், தனது விண்ணப்பத்தை நிராகரித்துவிட்டனர். கிராமசபை கூட்டம் நடத்துவதற்கு ஊராட்சித் தலைவருக்கு அதிகாரம் உள்ளதால், கிராமசபை கூட்டத்தை நடத்த உத்தரவிட வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.

சட்டத்திற்குப் புறம்பானது

இந்த வழக்கில், அரசு தரப்பில் ஆஜரான அரசு தலைமை வழக்கறிஞர் சண்முகசுந்தரம், "கரோனா தடுப்பு விதிகளை பின்பற்றி, ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெறக்கூடிய ஒன்பது மாவட்டங்களை தவிர தமிழ்நாடு முழுவதும் அக்டோபர் இரண்டாம் தேதி கிராமசபை நடத்தப்பட்டது" என தெரிவிக்கப்பட்டது.

மனுதாரர் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் நாகசைலா, "கிராமசபை கூட்டத்தைக் கூட்டுவதற்கான அதிகாரம் ஊராட்சி மன்ற தலைவருக்கே உள்ளது என்றும், தற்போது ஊராட்சிகளின் ஆய்வாளராக உள்ள மாவட்ட ஆட்சியரின் விருப்பத்தின்படியே கிராமசபை நடப்பது போன்ற சூழலை உருவாக்கியிருப்பது, சட்டத்திற்கு புறம்பானது" என்று தெரிவித்தார்.

அரசு, மாவட்ட ஆட்சியரிடம் அனுமதி தேவையில்லை

இந்த வழக்கில் இன்று (அக்.6) தீர்ப்பளித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ், கிராம ஊராட்சிகள் தேவைப்படும்போது எத்தனை முறை வேண்டுமானாலும் கிராம சபைகளை கூட்டிக்கொள்ளலாம். அரசிடமோ, மாவட்ட ஆட்சியரிடமோ அனுமதி பெற வேண்டிய அவசியமில்லை.

மேலும், கிராமசபை நடத்த அரசால் அறிவிக்கப்பட்டுள்ள ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, அக்டோபர் 2 ஆகிய நாள்களில் கூட்டம் கட்டாயம் நடத்தப்பட வேண்டும். அதேபோல, கிராமசபை கூட்டம் நடப்பதற்கு ஏழு நாட்களுக்கு முன்பாக ஊராட்சிகளின் ஆய்வாளரான மாவட்ட ஆட்சியரிடம் கூட்டம் எங்கே நடத்தப்பட உள்ளது என்ற தகவல் தெரிவிக்க வேண்டும் என உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.

இதையும் படிங்க: முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் டாடா குழும தலைவர் சந்திப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.