ETV Bharat / state

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் நானும் ஒரு பயனாளி தான்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Aug 25, 2023, 4:14 PM IST

Minister Udhayanidhi Stalin about morning breakfast scheme:முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில்,நானும் ஒரு பயனாளி தான் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: நானும் ஒரு பயனாளி தான்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்
முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம்: நானும் ஒரு பயனாளி தான்-அமைச்சர் உதயநிதி ஸ்டாலின்

சென்னை: முதலமைச்சரின் காலை உணவுத்திட்டத்தில் நானும் ஒரு பயனாளிதான். எந்த மாவட்டத்திற்கு சென்றாலும் உணவின் தரம் குறித்து ஆய்வு செய்து உண்பதால் தானும் பயனாளியே என இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.

பெருநகர சென்னை மாநகராட்சியில் அரசுப் பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்து நாகப்பட்டினம் மாவட்டம், திருக்குவளையில் முதலமைச்சர் மு.க ஸ்டாலின் தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து ,மாநகராட்சிக்குட்பட்ட சென்னை பள்ளிகளில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ,மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி துவக்கி வைத்தனர்.

திருவல்லிக்கேணி நெடுஞ்சாலையில் உள்ள சென்னை நடுநிலைப் பள்ளியில் இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலினும், சைதாப்பேட்டை மாந்தோப்பு சென்னை பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன், கொளத்தூர் மடுமாநகர் சென்னை நடுநிலைப் பள்ளியில் இந்து சமயம் மற்றும் அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர்பாபு ஆகியோர் மாணவர்களுக்கு காலை உணவினை வழங்கி, மாணவர்களுடன் அமர்ந்து உணவருந்தினர்.

முதற்கட்டமாக முதலமைச்சரின் காலை உணவுத் திட்டம் திருவொற்றியூர், மாதவரம், தண்டையார்பேட்டை மற்றும் ராயபுரம் ஆகிய மண்டலங்களில் உள்ள 37 சென்னை தொடக்கப்பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 5,941 மாணவர்கள் பயன்பெற்று வந்தனர். இந்நிலையில் முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தை விரிவாக்கம் செய்துள்ளதால் சென்னை மாநகராட்சிக்குட்பட்ட தொடக்கப்பள்ளி, நடுநிலைப்பள்ளி, உயர்நிலைப் பள்ளி, மேல்நிலைப் பள்ளி மற்றும் அரசு ஆதிதிராவிடர் நலப் பள்ளிகள் என மொத்தம் 358 பள்ளிகளில் 1ஆம் வகுப்பு முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் 65,030 மாணவர் கூடுதலாக பயன்பெறுவர். இத்திட்டத்திற்கு 35 மைய சமையற்கூடங்களில் இருந்து காலை உணவு தயாரிக்கப்பட்டு, அதற்கான வாகனங்கள் மூலம் பள்ளிகளுக்கு காலை உணவு கொண்டு செல்லப்படும்.

சென்னையில் காலை உணவுத்திட்டத்தை துவக்கி வைத்தப் பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் , ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு மாணவர்களின் வருகையை அதிகரிக்க வேண்டும் என்று காலை உணவு திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. நான் தமிழ்நாட்டில் எந்த மாவட்டத்திற்கு சுற்றுப்பயணம் சென்றாலும் அந்த பகுதி பள்ளியில் காலை உணவை உண்டு உணவு தரமாக உள்ளதா என்று ஆய்வு செய்வது வழக்கம். இதன் மூலம் 30 முதல் 40 சதவீதம் வரை அரசு பள்ளியில் மாணவர்கள் வருகை அதிகரித்து உள்ளது.

சென்னை மாநகராட்சி பொறுத்த வரை 358 பள்ளிகளில் 65,030 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். சேப்பாக்கம் திருவல்லிக்கேணி பகுதியில் 16 பள்ளிகளை சேர்ந்த 1136 மாணவர்கள் பயன் பெறுகின்றனர். இந்த காலை உணவு திட்டத்தில் நானும் ஒரு பயனானி தான். தொடர்ந்து உணவு தரம் குறித்து ஆய்வு செய்யப்படும் என தெரிவித்தார்.

இதையும் படிங்க: கோவில் உண்டியல் 100 கோடி காணிக்கை செலுத்திய பக்தர் - ஆடிப்போன கோவில் நிர்வாகம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.